Monday, January 5, 2009

நானும்....ஒரு ஜோடி சமயலறை ஜன்னல் புறாக்களும் - கவிதை

           கவிதை

நானும்..... ஒரு ஜோடி சமயலறை ஜன்னல் புறாக்களும்
                                 
தலைச் சாய்த்துப் பார்க்கும் - அந்த

சமயலறை ஜன்னல் ஜோடிப் புறாக்கள் 
          
அடுப்பில் ஆவியொடு கொதிக்கும் ரசத்தை

நாக்கில் சொட்டு விட்டு ருசி பார்க்கும் என்னை

மெலிதாக அதிர்ந்து போய் அந்தரத்தில்

அழகாக சிறகடித்துக்கொண்டே மிதக்கும்

குக்கரில் விசில் சத்தம் கேட்ட கணத்தில்

கொஞ்சம் “டேஸ்ட் பண்றேளா”

கை நீட்டி ரசக் கரண்டியை   நீட்டி 

கண் சிமிட்டி கனிவோடு சிரித்துக்கேட்டவுடன்

மறுபடியும் சிறகடித்து மிதக்கும் அந்தரத்தில்

அடுத்து இந்த புறாக்கள் - எங்கு 

வர வேண்டும் என்று எனக்குத் தெரியும்

விரட்டுவதில்லை ஜன்னல் கதவுகளை மூடி

“அங்க வாங்கோ” என்று அடுத்து அழைப்பேன்

பெட்ரூம் ஏசி ஆன் செய்து தண்ணீர் சொட்டும்

ஒசை கேட்டவுடன் சமையலறைச் சென்று

தண்ணீர் குடித்தப்படி மூக்கு உரசும் 

இந்த புறாக்களின் நிழல் பிம்பங்களை

பெட்ரூம் கண்ணாடி ஊடே பார்ப்பேன்

எங்கெல்லாம் “வாங்கோ” என்று அழைக்கின்றேனோ

அந்த இடங்களில் அந்த நேரங்களில் 

அந்தரத்தில் அழகாக சிறகடித்தும்

த்லை சாய்த்தும் என்னைப் பார்த்து

வரும் இந்த ஜோடிப் புறாக்கள்

‘என் கூடவே எனக்கு துணையா

அங்கேயும் வந்துடுங்கோ “ என அழைத்தேன்

கடைசிக் காலத்தை கழிக்கப் போகும்

முதியோர் இல்லத்திற்கு


2 comments:

  1. இந்த ஆண்டு துவங்கி முடியாவிட்டாலும், வாசிப்பவரை ஆண்டுவிட்டீர்கள்.

    எனவே
    2009 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை இது.

    ReplyDelete
  2. மனதை மயக்கியது புறாக்கள்...
    அன்புடன் அருணா

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!