Sunday, May 29, 2011

ரதிநிர்வேதம் (A) பிட்டு படமா?

முப்பதுமூன்று(1978) வருடங்களுக்கு முன் வந்த மலையாளப் படமான “ரதிநிர்வேதம்”(A) மீண்டும் மலையாளத்தில்  ரீமேக் செய்யப்படுகிறது.ஒரு விடலைப் பருவத்து சிறுவன்  பருவக்கோளாறால் தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணிடம் காதல்+காமம் கொள்ளுதல்தான் கதை.

பழைய ரதிநிர்வேதம்  கதை-பத்மராஜன் இயக்கம்-பரதன். பரதன் தமிழில் சாவித்திரி,ஆவரம்பூ,தேவர்மகன், தலைவாசல் போன்ற படங்களை இயக்கியவர்.

கிரேதயுகம்,திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் மாதிரி அப்போது மலையாள A பட செக்ஸ் யுகம் நடந்துக்கொண்டிருந்தது தமிழ்நாட்டில்.இந்த யுகத்தை  மலையாளப் பட போஸ்டர்கள்  காட்டும்.அதற்கென்றே   சாமுத்திரிகா லட்சணங்கள் உண்டு.அதைக் கட்டாயமாக எல்லா படங்களும் கடைப்பிடிக்கும்.கிழ் உள்ள போஸ்டர் சாட்சி. இதில் பெரிய”A”வைக் காணோம்.



முதல் தடவை 1978ல் பார்க்கும்போது soft porno ஆகத்தான் பார்த்தோம்.அதுதான் வேண்டி இருந்தது அப்போது(???).மொழி தெரியாது.தாய்மொழி தமிழ்.

சேச்சி ஜெயபாரதியைத் தவிர வேறு யாரும் கண்ணில் படவில்லை.கொஞ்ச காலம் கழித்து மீண்டும் பார்க்கும்போது சதை மறைந்து கதையும் மற்றவர்களும் குறிப்பாக சிறுவனும் தெரிய ஆரம்பித்தான்.டைரக்டரின் உண்மையான நோக்கமும் புரிபட ஆரம்பித்தது.பிட்டுப் பட திரிசமன் இதில் இல்லை.

எனக்கு ஒரு வயதில் ”பிட்டு”படமாகவும் வேறு வயதில் ”குட்டு”(good) பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது இப்படம்.

இது உண்மையிலேயே சிம்பிளாக சொல்லப்பட்ட ஒரு நல்ல படம்.அப்போது இது  ஒரு trend setter என்று சொல்லுவார்கள்.இதன் பாதிப்பில்தான் பாலு
மகேந்திராவின் “அழியாதகோலங்கள்” படம் வந்ததாக பேசிக்கொள்வார்கள்.இதில் நடித்த இன்னோரு கண்ணாடி அணிந்தப் பையன் அழியாதகோலங்களில் வருவான்

வியாபார காரணங்களுக்காக வலிந்து திணித்த கட்டாய செக்ஸ் காட்சிகளும் உண்டு.ஆனால் பிட்டுபடம் என்று முத்திரைக் குத்திவிடாமல் படத்தின் மற்ற அம்சங்களிலும் டைரக்டரின் கவனம் இருந்தது.கூர்ந்து கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம்.முக்கியமாக நகைச்சுவை.
படத்தில் சிறுவனாக (அப்பூஸ்)வரும் கிருஷ்ணசந்திரன் அட்டகாசம். பள்ளியிலிருந்து “கோலேஜ்” செல்லும்  விடலைப் பருவத்துக்குண்டான பால் வடியும் முகம், பூனை மீசை,அரை டிராயர், சில சமயம் வேட்டி. இவனை ஆர்டர் கொடுத்த செய்தார் போல் பொருந்துகிறார்.

நடிப்பும் உடல் மொழியும் அபாரம். அவார்ட் கொடுக்கலாம்.அடுத்து ஜெயபாரதி (ரதி)சேச்சி.இந்த மாதிரி பாத்திரமெல்லாம் பின்னியெடுப்பார்.நல்ல நடிகையும் கூட.
 
இந்தப் படத்தின் இசை(ஜி.தேவராஜன்) படு சுமார்.ஆல் இந்தியா ரேடியோவில் கேட்ட  நிலைய வித்வான்கள் மெல்லிசை மாதிரி இருக்கும்.

சரி... ரீமேக்குக்கு வருவோம். எந்த தைரியத்தில் இதை ரீமேக்குகிறார்கள். அதேதான் கதை என்கிறார்கள். 2011-1978 = 33 வருடம் ஆகிவிட்டது.எவ்வளவோ மாறி என்னென்னவோ ஆகி எங்கோ வந்துவிட்டோம்.இப்போது எடுபடுமா ?10 வருடத்திற்கு ஒரு முறை மக்களின் ரசனை, மனோபாவம்,பார்வை மாறும் என்று கேள்வி.

முக்கியமாக ஒரிஜனலின் கட்டமைப்பு (structure) ரெண்டுகெட்டான் சிறுவன் vs அவனைவிட வயது முதிர்ந்த பெண்.இதில்தான் திரைக்கதைக் கட்டப்படுகிறது.ஆனால் ரீமேக்கின் போட்டோவைப் பார்த்தால் இரண்டுபேரும் ஒத்தவயதுடையவராகத் தோற்றம் அளிக்கிறது.மற்ற ஸ்டில்களும் அதைத்தான் சொல்கிறது.

ஒரிஜனலில் அப்புவின் வெகுளித்தனம் ஜெயபாரதியின் முதிர்தோற்றம்தான் ஜீவநாடி.

இப்படித்தான் தமிழில் பாலைவனச்சோலை என்ற படத்தை ரீமேக் என்ற பேரில் ரிவிட் அடித்து ஊத்தி மூடினார்கள்.

 ரீமேக்கில் நடிப்பவர்கள் ஸ்ரீஜித் விஜய் -ஷ்வேதா மேனன்.

இதைத்தவிர விளம்பர(promo)ஸ்டில்களில் ரீமேக் ரதி சேச்சி தாவணி போடாமல்

  • அம்மியில் சட்னி அரைக்கிறார்
  • குத்துக்காலிட்டு மாவாட்டுகிறார்
  • குனிந்து வடாம் காயப்போடுகிறார்
  • மாட்டின் காம்பில் பால் கறக்கிறார்
இதெல்லாம் ரீமேக் அப்பூஸ்ஸூக்கோ?தாங்க முடியல.டைரகடரின் நோக்கம் தெரிகிறது.

பழைய படத்தில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி :
ரதி, பப்புவிடம் சைக்களில் கடைக்குப்போய் தனக்கு வளையல் வாங்கிவரச்சொல்லும்போது வரும் வசனங்கள்:
 ரதி: ரண்டு டசன் வாங்கிக்கோ.இதானு சைசு. அர டசன் கருப்பூ.அர டசன் பச்சா.அர டசன் கருஞ்செவப்பூ.பின்னே...அர டசன் பப்புவின் இஷ்டமுல்லதா..ஏது நெறம் பப்புவோட இஷ்டம்...?

பப்பு: (இன்ப அதிர்ச்சியில் சற்று திகைத்து,யோசித்து, பூரித்துப்போய் )ஏ(என்) சேச்சியோட நெறம்
 ______________________________________________________

எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்.”ரதிநிர்வேதம்” கிருஷ்ணசந்திரன் இப்போது. இவர் ஒரு பாடகர். “ஏதோ மோகம் ஏதோ தாகம்”(படம்-கோழிகூவுது) பாட்டைப் பாடியவர்.இதை ரதிநிர்வேதத்திற்குப் பாடி இருக்கலாமோ?

ஓ... பப்புவோ! எத்தர பெரிய மனுஷனாயி!


 இவரின் மனைவி நடிகை வனிதா.


 டெயில் பீஸ்: இந்த ஸ்ரீஜித் விஜய்  பாசில் எடுக்கும் “லிவிங் டூகெதர்” என்றப் படத்திலும் நடிக்கிறார் என்கிறது ஒரு செய்தி.

Friday, May 20, 2011

ஒரு குழந்தையும் அமலா பாலும் -கவிதை


அன்னபூரணி போட்டோ
ஸ்டூடியோ ஷோகேசில்
போஸ்கார்ட் சைசில்
ஒரு குட்டிக் குழந்தை
என்னுடன் சினேகமானது


என் வரவுக்காக தினமும் காத்திருக்கும்

எனக்கும் குழந்தைக்கும் இடையில்
ஒரு விளையாட்டு உண்டு

யாருக்கும் தெரியாத விளையாட்டு

முதலில் குழந்தையை
புன்னகையுடன் உற்றுப்பார்ப்பேன்
குழந்தையும் உற்றுப்பார்க்கும் புன்னகையுடன்

இப்படியும் அப்படியும் நகர்வேன்

எந்த திசையில் நகர்ந்தாலும்
என்னைப் பார்த்து  நகராமல் புன்னகைக்கும்

இதுதான் கடைசி என்று
மீண்டும் மீண்டும் மாறி மாறி
விளையாடுவோம்

ஐந்துவருட சினேகத்தில்
மெயின் ரோட் முழுவதும் புன்னகைகள்
இறைந்துக்கிடக்கிறது

இன்றும் புன்னகை விளையாட்டைத்
தொடர அங்கு சென்றேன்

குழந்தையின் இடத்தில்
நடிகை அமலா பால்

எங்களின் விளையாட்டு தெரிந்துவிட்டது

எந்த திசை நகர்ந்தாலும்
என்னைப் பார்த்து  நகராமல்
அமலாவும் புன்னகைக்கிறார்

.

Tuesday, May 17, 2011

அழகர்சாமியின் குதிரை -விமர்சனம்

குதிரைகள் என்றதும் சமீபத்தில் படித்த கண்மணி குணசேகரன்  சிறுகதைகளில் வரும் குதிரைகள் ஞாபகம் வரும்.தொகுப்பின் பெயர் “பூரணி பொற்கலை”. இதில் வரும் குதிரைகள் கொஞ்சம் சீரியஸ்ஸானவை. கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு பதற்றமடைபவை.கோபம் கொள்பவை.ஆனால் அழகர்சாமியின் குதிரைகளுக்கு  சம்பந்தமில்லாதவை.
கதாநாயகன் அப்புக்குட்டி
அழகர்சாமியின் குதிரை அற்புதமான சிறுகதை அல்லது குறுநாவல்( கதை படிக்கவில்லை).அதன் ஜீவனைக் கலைக்காமல் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
குதிரையை மைய்யமாக வைத்து ஒரு வித்தியாசமான கிராமத்துக் கதை. இதில் கிடா மீசை,பரட்டைத் தலை(????),பட்டாபட்டி டவுசர் பாண்டி,வீச்சருவாள் கிடையாது. இரண்டு செக்கச்செவேல் கதாநாயகிகள்.செக்கச்செவேலுக்கு லாஜிக்கும் கொடுக்கிறார்கள்.சினிமாவுக்குத் தேவை.புரிகிறது ஓகே.
 
இதில் குதிரைக்கு இரட்டை வேடம்.ஒன்று மரக்குதிரை மற்றொன்று உயிருள்ள குதிரை.கிராமத்து மக்கள் நம்பும் இதுதான் அது அதுதான் இது அத்வைதம்.

1982ல் நடக்கும் கதை(போலீஸ் ஸ்டேஷன் காலண்டர் மற்றும் அலைகள் ஓய்வதில்லை).காணாமல் போன கோவில் மர குதிரைக்குப் பதிலாக கிடைக்கும்  நிஜ குதிரையை தெய்வம் போல் கொண்டாடுகிறார்கள் மல்லையாபுரம் கிராமத்து மக்கள்.வழக்கமான அபத்தங்களும் ஆச்சரியங்களும் வெள்ளையும் சொள்ளைமானவர்கள் இவர்கள்.

நிஜ குதிரையின் ஓனர் அப்புக்குட்டியின் (குதிரையின் பெயர்) ஆள் அல்லது அழகர்சாமியின் குதிரை என்று ஒருவருக்கொருவர் உயிர்.அந்த ஓனர்(அழகர்சாமி) இந்தக் கிராமத்திற்கு வந்து உரிமை கொண்டாட அதனால் ஏற்படும் பிரச்சனைதான் மீதி கதை.
 
கொஞ்சமே வந்தாலும் மனதில் நிற்பவர் அப்புக்குட்டி.மிகையில்லாத நடிப்பு.அட்டகாசமான குரல்.குதிரை உயரமே இருக்கிறார். அசலான கிராமத்து மக்கள்.இடையில் ஒரு  மெலிதான காதல் கதை.
(ஹீரோயின் அத்வைதா)
படத்தின் கழுதை(திருஷ்டி) போலீஸ் ஒற்றனாக வந்து செயற்கை காமெடி பண்ணுவதுதான்.படு மொக்கை/அசட்டுத்தனம்.அடுத்து மலையாள சாமியார்.பக்கத்தில் சிஷ்யனை வைத்துக்கொண்டு தாழ் குரலில் பேசி ஊரை ஏமாற்றுவது எவ்வளவு படத்தில்  வந்துவிட்டது. புளித்துப்போனது. மாத்தியோசிக்கலாமே.
 
“வெள்ளக்காரன்  பியூட்டிஃப்ல் ..பியூட்டிஃப்ல்லு சொன்னத கேட்டேன்.அவந்தான் திருடி இருக்கனும்” போன்ற இயல்பான காமெடிகளை இன்னும் கூட தெளித்திருக்கலாம்.

அடுத்த திருஷ்டி கிளைமாக்சில்  குதிரை “திடீர்” பஞ்சகல்யாணியாகி எல்லோரையும்  துரத்துவது. அது என்ன முரட்டுக்காளையா அடக்க முடியாமல் போவதற்கு? நம்ப முடியவிலல்லை.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஹோம்வொர்க் செய்திருந்தால் படத்தைக் காவியம் ஆக்கி இருக்கலாம்.

கிட்டத்தட்ட 20 வருடத்திற்குப் பிறகு இளையராஜாவிற்கு அச்சு அசலான கிராமத்துப் படம். டைட்டில் இசை பாலுமகேந்திரா படம் போல இருக்கிறது.அந்நியப்படுகிறோம்.

வித்தியாசமாக கிராமத்து இசையை முயற்ச்சித்திருக்கிறார் என்று கட்டாயம் தெரிகிறது.சில இடங்களில் weird ஆக இருக்கிறது.சில இடங்களில் கிராமத்து உணர்ச்சிகள் இல்லை.

அழகர்சாமி குதிரையுடன் அறிமுகம் ஆகும் பின்னணி அசத்தல்.

Monday, May 16, 2011

ஆத்தா நீ பாஸ்ஸாயிட்ட! ஆனா ஃபெயிலாயிடாத!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி....அவ(ள்)ன் நாலாறு மாதமாய்
வேண்டி... கொண்டு வந்தானடி ஒரு தோண்டி.... மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டு உடைத்தாண்டி...என்று இரண்டாவது முறை முதலமைச்சராகும்போது  செல்வி ஜெயலலிதா & சசிகலா போட்டுடைத்தார்கள். எல்லாம் சிதறியது.

அடுத்து ஆட வந்த  (2006) அய்யா மட்டுமில்லாமல் குடும்பமே கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தது.ஏன் கூத்தாடினோம் என்று  ரூம் போட்டு சிந்திப்பதற்கு  ஓய்வு வேண்டும்(2011) என்று கருணாநிதி  சொல்லிவிட்டு போய்விட்டார்.

            (இலவசமா  எவ்வளவு கொடுத்தேன்... ஒண்ணும் பிரியல பிரதர்ஸ் &சிஸ்டர்ஸ்)


புது ஐஓசி டாங்க் சட்டசபை  பேய் வீடு ஆகிவிடும். 500 கோடி போச்சு.மேடம் கூச்சப்படாம போய் குடி இருங்க.உங்க மரியாதை கூடும்.ஆனா மாட்டீங்க.ஏன்னா அது ஆய்.உங்கள பத்தி எல்லோருக்கும் தெரியும் மேடம்.மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆள வந்தவங்க. ஐஓசி டாங்கையும் ஆளுங்க.


ஜெயலலிதா மீண்டும் கூத்தாடாமல் தோண்டியை பாதுகாப்பது
நலம்.காரணம் கருணாநிதிக்கு எதிரான ஓட்டுக்கள்தான் முக்கால்வாசி.முதல் ஒரு வருடம் ”அய்யோ கொல்றாங்களே” கைதுகள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே “ Mummy returns .....I am there shortly  Mr.Azhagiri" என்று சொல்லிவிட்டார்.


கைது வாய்தா என்று வழக்கமான காட்சிகள் அடுத்த ஆறு வருடங்களுக்கு திரையில் ஓடி சிரிப்பூட்டும்.திமுகவும் அதிமுகவும் விளையாடும் மங்காத்தா  விளையாட்டு.

உங்களுக்கு அடுத்து யார் என்பதையும் இப்போதே சிந்திப்பது  உத்தமம்.உங்களுக்கும் வயது ஆகிக்கொண்டேபோகிறது.

உங்களுக்கும் கேப்டனுக்கும் பிடிக்காத ஒரே சொல் “லஞ்சம்”. கேட்டவுடன் எங்ளுக்கு  பிடிக்கும் வார்த்தை “ சிரிப்பு மூட்டாதீங்கடா டேய்” 
 
உங்கள் அமைச்சர்களின்  இன்கம்டாக்ஸ் ரிட்டன்களை போட்டோகாபி எடுத்து தனியாக ஒரு பைலில் போட்டுவைத்துக்கொண்டால்  appraisalலில் மார்க் போடுவதற்கு  வசதியாக இருக்கும்.

முக்கியமாக புதிதாக பதவி ஏற்கும் தேமுதிகவின் MLAக்களின் இன்கம்டாக்ஸ் ரிட்டன்களை போட்டோகாபி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் மேடம்.எல்லாம் புதுசு. சும்மா கை துறு துறுவென்று இருக்கும். தேர்தலில்  நிறைய மூதலீடு செய்து இருக்கிறார்கள்.

யார் வந்தால் என்ன ?சென்னையில்  ஆட்டோ மீட்டர்(சூடு இல்லாத) போட்டு ஓட்டுவதற்கு பத்தாயிரம் வருடங்கள் காத்திருக்க வேண்டும்.



Saturday, May 14, 2011

இளையராஜா- King of Sweet Shehnai

தமிழ்நாட்டுக்கு நாத(க)ஸ்வரம் எப்படி மங்களகரமான வாத்தியமோ அதேபோல் வட இந்தியாவிற்கு ஷெனாய்.வட இந்தியாவின் நா(க)தஸ்வரம்.



அங்கு திருமணம், திருவிழா,ஊர்வலம் போன்றவைகளுக்கு வாசிக்கப்படும்.ஆனால் நமக்கு இது யாராவது தேசத் தலைவர்கள் இயற்கை எய்தினால் ரேடியோவில் வாசிக்கப்படும் சோக இசைக்கருவி என்று ஒரு மைண்ட் செட். காரணம் இதன் உணர்ச்சி ஒப்பாரி அல்லது புலம்பல்.

பூம் பூம் மாட்டுக்காரர் கையில் இருக்கும் ஒன்று என்ற ஒரு எண்ணம் வேறு உண்டு.

 வட இந்திய குதூகல ஷெனாய் :- 



ஷெனாயில் இரக்கம்/கருணை உணர்ச்சியும் நிறைய வெளிபடுவதாக என் எண்ணம்.

மேஸ்ட்ரோ  சில சமயம் புத்திசாலித்தனமாக மற்ற இசைச் கருவிகளுடன்  சேர்த்து வாசிக்கிறார்.இதனால ஷெனாயின் சோக உணர்ச்சிகள் மழுப்பபட்டு  தேவையான உணர்ச்சிகள் கிடைக்கிறது.

உதாரணம்:
புல்லாங்குழல் vs ஷெனாய். 

இரண்டும் வெவ்வேறு உணர்ச்சிகளில்.புல்லாங்குழல் மென்மையாக.ஷெனாய் கொஞ்சம் பச்சையான சோகம்.
 Shehnai-1-Kadhal Oviyum-82-KuyileKuyile.mp3

0.20-0.29 ஷெனாய் இசை வயலின் கலந்த வித்தியாசமான உணர்ச்சிகள்.
Shehnai-1-Raasa Magan-94-kaathirunthen.mp3

ஷெனாய் நாதத்தின் மெட்டு ஒரே பாணியில்(pattern) வந்து அசத்துகிறது.
Shehnai-Sakkalathi-79-Ennapattu Paada.mp3


0.13-0.22 குழந்தைத்தனமான ஷெனாயின் இடையே மேகங்களாக கடந்துச் செல்லும் வயலின் கவிதை. Hats off Maestro! பாமரத்தனமாக மெட்டமைக்கப்பாட்டில் இடையிடையே வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்கள்.
Shehnai-1Mullum78 Malarum-Senthazham Poovil.mp3

தமிழ்ப்படங்களில் சோகக் காட்சிகளில் ஒப்பாரியாக இசைக்கப்படும்.90க்கு பிறகு மிகவும் குறைந்து
விட்டது.முஸ்லீம் கதாபாத்திரங்கள் இருந்தால் கட்டாயம் ஷெனாய் இசை இருக்கும்.உதாரணம்-சாதனை/சகலகலாவல்லவன்.

மகிழ்ச்சிக்கும் வாசிக்கப்பட்டிருக்கிறது.”கண்ணன் பிறந்தான்”படம்: பெற்றால்தான் பிள்ளையா-1966(எம்.எஸ்.விஸ்வநாதன்)."நிலவே என்னிடம் நெருங்காதே”(சோகம்)-ராமு-1966.காதலுக்கும் வாசிக்கப்பட்டிருக்கிறது.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.....

பிரமீளாவே வருத்தமாக மாமனாரிடம் புலம்புகிறார். பின்னணியில் ஷெனாய்  அதை சோகத்தில் பிழிந்து வடிக்கட்டுகிறது.சூப்பர் சோக effect கொடுக்கிறது ஷெனாய்.கொடுத்தவர் எம்.எஸ்.வி.
Shehnai-1Thangapathakkam-74-sodhanaimelsodhanai.mp3

ஷெனாய் கலைஞர் பண்டிட் பாலேஷ்.இளையராஜாவிற்கு வாசிப்பவர்

இளையராஜா அவர்கள் இதை எப்படி கையாண்டிருக்கிறார்?இவருக்கு எல்லாமே இசைதானே.இதையும் ”ஒரு காட்டு காட்டி” இருக்கிறார்.எப்படி?

வழக்கமான மேதமை+ஆத்மா+புத்திசாலித்தனம்+பல பரிமாணம்+இனிமை

எல்லா வித உணர்ச்சிகளுக்கும் இதை முயற்ச்சித்திருக்கிறார்.இதை நாதஸ்வரத்திற்கு camouflageஆக சில இடங்களில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.அதாவது இதன் நாதம் நாதஸ்வரமாக ”காட்டப்பட்டிருக்கிறது”.

மேஸ்ட்ரோ மற்ற இசைச் சரங்களை இதனுடன் தொடுப்பதால் உணர்ச்சிகள் மாறுகிறது. நிறைய பாடல்களில் ஷெனாயுடன் புல்லாங்குழலை தொடுக்கிறார்.

சில இசைத்துளிகள் ஷெனாய்தான் என்ற யூகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

அதன் இயல்பான எமோஷனான சோகத்திலேயே முதல் பாட்டை ஆரம்பிப்போம்:

மூன்று ஷெனாய் மூன்று வித உணர்ச்சிகளில் வாசிக்கப்படுகிறது.0.06-0.15, 0.43-0.56, 1.06-1.08. கடைசி ஷெனாயை நெருங்கும் திகில் வயலின்(செல்லோ) அருமை.
Shehnai-1Mann Vaasanai-Pothivacha-83-SAD.mp3

இதில் தனி ஸ்டைல்.0.33ல் கோரஸ் வயலின் ஷெனாயின் மொழியை அப்படியே ராயலாக வாரியிறைப்பது அருமை.கடைசியிலும் ஸ்டைல் அருமை.
Shehnai-Alaioosai84-Neeya Azhaithathu.mp3

Fast beat. 0.13-0.26 அட்டகாசம்.ஷெனாயுடன் அதே வேகத்தில் அதே மாதிரி இன்னொரு இசைநாதமும் வருகிறது.அது என்ன?
Shehnai-Rakshasadu-86-Giliga Gili Giliga.mp3

இதன் இசை உணர்ச்சிகள் படுத்தும்.ராஜாவின் இசையில் ஒரு மைல் கல்.  முடிந்தால் முழுப் பாட்டையும் கேட்கவும்.
Shehnai-Enakkaka Kathiru-81-Panimazhai Vizhum.mp3

வயலின் சுனாமிகளுக்கிடையே மாட்டிக்கொண்ட ஷெனாயின் கதறல் அருமை.stunning emotions!
Shehnai-Panner Pushpangal-81-Anantha raagam ketkum.mp3

கன்னிப் பெண்ணின் குஷி
Shehnai-KungumaChimizh-85-Poongatre.mp3

00.10 -0.25 ஷெனாயிக்கு முன் வாசிக்கப்படும் தாளம் ஆத்மாவை வருடும்.
Shehnai-1Manassinakkare-03- Marakkudayal.mp3

வித்தியாசமான தாளக்கட்டுடன் ஷெனாய் நாதம் அருமை.கொண்டாட்ட மன நிலை.
Shehnai-Ninaivellam -82-Nithya-Kanniponnu.mp3

வித்தியாசமானது.புல்லாங்குழல்-ஷெனாய் உரையாடல் அருமை.
Shehnai-Ponvaanam-83-Indru Nee Naalai Naan.mp3

0.00-0.10 கிடார்- ஷெனாய் கலவை புதுசு.
Shehnai-My Dear Kutti-84-Chellakuzhandhaikale.mp3

வயலின் - ஷெனாய் உக்கிர உரையாடல்.மேஸ்ட்ரோவைத் தவிர யாரால் போட முடியும்.
 Shehnai-Vaidheki Kathirunthaal-84-AzhaguMalar.mp3

மிருதங்கம்-ஷெனாய்
Shehnai-Paayum83Puli-Pothukittu.mp3

Shehnai-Mudhal-86-Vasantham-Aaru Athu.mp3

எனக்கு மிகவும் பிடித்த பழைய ஷெனாய் இசைப் பாடல் பற்றி:
  • இரண்டுமே ஆபோகி ராகத்தில் இசைக்கப்பட்டது.
  • இரண்டிலும் ஷெனாய் வாசிக்கப்பட்டுள்ளது
  • கலைக்குயில்(முழு) பாடல் ஓடும் நேரம் 3.33.காலை நேர(முழு) பாடல் ஓடும் நேரம் 4.49. ஷெனாய் முடிந்தவுடன் ராஜா இசைக்கோர்ப்பை சற்று நீளமாக(இயல்பான rich orchestration) இழுக்கிறார்.ஆனால் எம் எஸ்வி சுருக்கமாக முடிக்கிறார்.
கலைக்கோயில்-1964 ” தங்கரதம் வந்தது”-விஸ்வநாதன் - ராமமூர்த்தி(சுசீலா-பாலமுரளிகிருஷ்ணா)

ஷெனாய் அருமை.ஷெனாயின் பின் வரும் தாளத்தை கவனியுங்கள்.stunning!இதிலும் பு.குழல்/வீணை/வயலின் எல்லாம் உண்டு.

அம்மன் கோவில் கிழக்காலே-1986 "காலை நேர பூங்குயில்” finishing touch அருமை.
Shehnai2Amman Kovil Kizha-86-KalaiNera(Janaki).mp3

 Shehnai-Dharmakshetrami92-Are Inka Jankai.mp3


Shehnai-Oru Oodai Nathi-83-Thendral Ennai.mp3

0.26-0.45 கருணை/சுய இரக்கம்/ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்? 
0.50-1.00(தி.ஜானகிராமன்தான் வர்ணிக்க வேண்டும்)
Shehnai-BGM-92Devar Magan.mp3

0.12-0.23 புல்லாங்குழல்-ஷெனாய் உரையாடல் அட்டகாசம். இந்த மாதிரி காம்பினேஷன் எப்படி யோசிக்க முடிகிறது.
Shehnai-Kakki Chattai-85-KanmaniyePesu.mp3

Shehnai-1Sadhanai-86-EngeNaan.mp3

Shehnai-1Puthumai Penn-79-Kasthuri Maane.mp3

Shehnai-Yathra-85-Yamune Ninnude.mp3

பல வித கலவைகளில் ஷெனாய் கொடுக்கப்படுகிறது.
Shehnai-82-Sakalakala Vallavan-Nethu Rathri.mp3

Shehnai-Pacha Kuthira -06-Oru Thottavaadi.mp3

ஹம்மிங்கோடு கலந்துக்கொடுக்கப்படுகிறது.
Shehnai-Walter93Vetrivel-Chinna Rasaave Chitharembu.mp3

Shehnai-Ellame En Raasathan-Azhagana.mp3

வாலிபமே வா வா-ராதா-கார்த்திக்
வாலிபமே வா வா-1982-பொன்வான பூங்காவில்
 29 வருடம் ஆனாலும் ஷெனாயில் வாலிபம் இருக்கிறது.
 Shehnai-1Vaalibame Vaa Vaa-82- Pon Vaana.mp3

Shehnai-BGM-Nayagan.mp3

Shehnai-How to Name-DoAnything.mp3

Shehnai-BGM-Thooral Ninnu Pochu-82 -Sogam.mp3

0.03-0.10 சிம்பிளாக எதனுடனோ உரையாடுகிறது ஷெனாய்.
Shehnai-Ejamaan-93-AalappoolVelappool.mp3

Shehnai-Jyothi-83-SirichaKolliMalai.mp3

Shehnai-Mahanadhi-93-Thai Pongalum Ponguthu.mp3

Shehnai-Mahanadhi-94-SrirangaRanga.mp3

Shehnai-Naan Mahan Alla85-MalaiSoodum.mp3


Shehnai-16Vayathinile-77-SenthooraPoove.mp3

Tuesday, May 10, 2011

ஐபிஎல்லும் இலவசமும் இளையராஜாவும் மற்றும் ஸ்ரீதரும்

சென்னையில் நடக்கும் ஐபில்  கிரிக்கெட் விளையாட்டிற்கு எதிராக நீதி மன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதன் விவரம்:-
  1. கேளிக்கை வரி வசூலிக்காமல் தமிழ்நாடு அரசு சும்மா இருக்கிறது
  2. அதிக விலைக்கு டிக்கெட்டுக்கள் விற்க்கப்படுகிறது
  3. இரவில் நடப்பதால் நிறைய மின்சாரம் செலவாகிறது.பவர் கட் நேரத்தில் இது தேவையா?பகல் நேரத்தில் நடத்த வேண்டும்.
இது தவிர பொது புலம்பல்கள்:
  1. டிவி சீரியல்கள் அடி வாங்குகிறது
  2. தியேட்டர் வசூல் பாதிக்கப்படுகிறது
  3. தூக்கம் கெடுகிறது 
  4. உப்புசப்பு இல்லாமல் இருக்கிறது
  5. எதிரி இல்லாமல் friendlyஆக இருக்கிறது
  6. விசுவாசத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.டெண்டூல்கரை விசுவாசிக்கும்  சென்னை ரசிகர்கள் அவர் சென்னைக்கு எதிராக ஆடும்போது விசுவாசத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.இது  மாதிரி விசுவாசம் மாறி மாறி வரும்.எல்லா அணிக்கும் /விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்.
________________________________________________


போன வாரம்  ஒரே எரிச்சலான வாரம்.கத்திரி வெயில்? இல்லை. என் இளையராஜா பதிவுகளில் பதிந்திருக்கும் "மிதக்கும் ஆடியோ பிளேயர்" எதுவும் வேலை செய்யவில்லை. யாஹூ தளம் கொடுக்கும் அற்புதமான பயனுள்ள floating media player.அதில் பிரச்சனை இல்லை.பிரச்சனை  Fileden.com என்ற  தளம்.இங்குதான் mp3  கோப்புகள் சேமிக்கப்பட்டு,தொடர்பு கொண்டு,  யாஹூ ஆடியோ பிளேயரில் பிளே ஆகிறது.

பங்களூரு நண்பர்/பதிவர் பரணி ராஜன்(தமிழ்ப்பறவை) அவர் கணினியிலிருந்தும் வேலை செய்யவில்லை என்றார்.பிரச்சனை கணினி இல்லை என்பது தெரிந்தது.

பதிவிற்காக உழைக்கும் உழைப்புக்காக ஒவ்வொரு தடவையும்  படிப்பவர்களால் மனமுவர்ந்து  எப்போதும் பாராட்டப்படுவதில் ஒரு திருஷ்டி.

புது பார்வையாளர்கள் நிறைய பேர் ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பார்கள்.
 
அலைவரிசை(spectrum?) பிரச்சனை

நான் இலவசத் திட்டத்தின் பயனாளர். bandwidth ன் அளவு நிரம்பிவிட்டது காரணம் என்று தெரிகிறது.தளமும் சொல்கிறது. ஓகே ...ஏன் பழைய பைலகள் வேலை செய்யவில்லை.

இலவசமாக பெற்றுக்கொண்டால் சில துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த bandwidth,பதிவு படிப்பவர்கள் தரவிரக்கம் செய்தால் அளவு குறைய ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.சில சமயம் போலியாக காட்டுகிறது.

பைல்களின் பெயரயோ அல்லது போல்டர் மாற்றுதலோ (பதிவு போட்டவுடன்) இருந்தால் தரவிரக்கம் செய்யமுடியாது என்று FAQ சொல்கிறது. போல்டர் மாற்றம் செய்தேன். ஒவ்வொரு பைலையும்(350 பைல்கள்) பெயர் மாற்றம் செய்வது என்பது பைத்தியம் பிடிக்கும் வேலை.அதற்கு திகார் ஜெயிலில் இருக்கலாம்.பெட்டர்.மாற்றி வேலை செய்யாவிட்டால்??????????

”இதுதான் காரணமா?” என்று கேள்விக்கு வாடிக்கையாளர் உதவியில் புகார் கொடுத்தும் ஒன்றும் பயனில்லை.வேறு இருவரின் தளங்கள் வேலை செய்கிறது. FAQல் அலைவரிசை மீறினால் ஆடியோ இயங்காது என்று தெரிவித்தால் எவ்வளவு நல்லது.

இலவசக்காரர்களுக்கு முன்னுரிமை கிடையாதோ?

Fileden.com தளம்.கேட்டறிந்தவகையில்  மற்றும் அனுபவத்தில் அது reliable  தளம் இல்லை என்று உணர்ந்தேன்.ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் வந்தது.நித்ய கண்டம் பூர்ண ஆயிசு என்பதற்கு உதாரணம் Fileden.com.

வலை நிர்வாக கோளாறுகள் உள்ளத் தளம்.Professionalஆக நிர்வாகிக்கப்படவில்லை.பட்டால் சூப்பராகிவிடும்.

கடைசி செய்தி:

என்னுடைய bandwidthஐ மாற்றம் செய்திருக்கிறார்கள்.ஆனால் மீண்டும் பிரச்சனை. மீண்டும் போல்டர் மாற்றினேன்.நல்லவேளை பைல்கள் பெயரை மாற்றவில்லை. இப்போது வேலை செய்கிறது.

பின்ணணியில்  ராஜாவின் கோரஸ் வயலின்/ஹம்மிங்/கிடார் /வீணை இசைக்க மகிழ்ச்சி பிரவாகம்.
____________________________________________

அந்தக்கால  பெரிய டைரக்டர்களின் சில பழைய படங்களைப் பார்க்கும் போது மகா மட்டமாக இருக்கிறது.இவ்வளவு பெரிய டைரக்டர்கள்  ஏன் சினிமாவில் கதைச் சொல்லும் முறையின் அடைப்படை விதிகளைக் கூட கடைப்பிடிப்பதில்லை.

இவர்கள் எடுப்பது எல்லாம் வெகுஜன ரசனை சார்ந்ததுதான்.தியேட்டரில் பார்க்கும்போதும் வெகுஜன ரசனையே இல்லை.டிவியில் சகிக்கவில்லை.

படம்:வைரநெஞ்சம் -1975-டைரக்டர் ஸ்ரீதர்-கிரைம் த்ரில்லர்

”செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரில் வந்தது கண்ணே... தான்” It is come by the chariot, dear! என்று வந்தக் காற்று சப்டைட்டிலில் நிற்கிறது.

படம்:உன்னை தேடி வருவேன் -1985 -டைரக்டர் ஸ்ரீதர்-கிரைம் த்ரில்லர்

இதில் பாத்ரூம் காட்சி  ஒன்று வரும். இதை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள் என்று பல வருடமாக ரூம் போட்டு யோசித்ததுண்டு.

Saturday, May 7, 2011

கன்னித்தீவை தேடி சலூனில்- கவிதை




சி-18072



கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள் 
கண்ணாடி கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள்
கண்ணாடி கன்னித்தீவு போய்கொண்டே இருக்கிறது

வாடிக்கையாளர்களும்  நேர் கண்ணாடி எதிர் கண்ணாடி
கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள் 
கண்ணாடி கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள்
கண்ணாடி மாறி மாறி தொலைகிறார்கள்

கன்னித்தீவு கதை மாந்தர்கள் 
எங்கு முடி வெட்டிக்கொள்கிறார்கள்
என்று யாருக்கும் தெரிவதில்லை

சலூன் உரிமையாளர்கள் 
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
முடிவெட்டிக்கொண்டே இருக்கிறார்கள்