Thursday, May 2, 2013

மிஸ் ஆனந்தவல்லி இறந்துவிட்டாள்

அன்றைய ஆங்கிலச் செய்தித்தாளை  ஒவ்வொரு பக்கமாக மெதுவாக திருப்பிக்கொண்டே வரும்போது அந்தப் போட்டோவைப் பார்த்தான் ஸ்ரீகாந்த்.உடம்பு உள்ளுக்குள் சற்று அதிர்ந்தது.அதில் இருப்பது ஆனந்தவல்லி.அது நீத்தார் அஞ்சலிக்காக ஒதுக்கப்படும் பக்கம்.

Died peacefully  on 19-04-2013  @  her residence leaving only son A.Kishore.May her soul rest in peace.
 
நாற்பத்து மூன்று வருடம் நான்கு மாதம் பதினைந்து நாட்கள்தான் வாழ்ந்திருக்கிறாள்.மனதில் சோகம் படரஅவள் கண்களையே உற்றுப்பார்க்க அவளும் பதிலுக்கு உற்றுப்பார்த்தாள்.சோகத்தில் காதல் கலந்து இருந்தது. இல்லாததால் காதல் வருகிறதோ?

இப்படி போட்டோவில் பார்ப்பதை கனவிலும் நினைக்கவில்லை.

பக்கத்தை மூடிவிட்டு சிறிது நேரம் கழித்து மறுபடியும் அவளைப் பார்த்தான்.இப்போது புன்னகைத்தவாறு இருந்தாள்.அவனும் புன்னகைத்தான்.போட்டோவில் புன்னகைப் பூத்த ஒரிஜனல் முகம்தான்.சமீபத்தில் எடுத்த போட்டோதான்.புருவம் திருத்தியிருந்தாள்.முகத்தில் அதே அழகு.முடியில் இரண்டொரு நரைகள்.அவள் அணிந்திருந்த புடவையின் கலரும்.... அதே பார்டரில் தைத்த பிளவுசும்.. புன்னகைத்துக்கொண்டான்.மறக்கவே முடியாது.பழசாகவே இல்லை.அவளுக்கும் போல.இதை அணிந்துதான் சமீபத்தில் போட்டோ எடுத்திருக்கிறாள்.பாவமாக இருந்தது.

பேப்பரை சற்று தள்ளிப் பிடித்து  அவளை விழுங்குவது போல பார்க்க ஆரம்பித்தான்.

”என்னங்க அவ்வளவு நேரமா பாக்ககிறீங்க?” மனைவி உஷா.

“இந்தா... நீ பாக்கனம்னு  ரொம்ப வருஷமா சொல்லிட்டு இருப்பயே அவங்க போட்டோவல  ஜம்முன்னு இருக்காங்க” முகத்தில் வலுவாக புன்னகையை வரவழைத்தவாறு சொன்னான்.

“யாரு....?” ஆர்வமாக பார்த்தாள் உஷா.

”ஆனந்தவல்லி”.விவாகரத்து ஆகி பிரிந்து போன முதல் மனைவி.

“ம்ம்ம்ம் .. களையா அழகா இருக்காங்க. ச்சே இவ்வளவு சின்ன வயசிலயா டெத் வரனம்?ரொம்ப பாவங்க”

”கரக்டுதான்...ஆனா சுமங்கலியா போய்ட்டா leaving only son A.Kishore” உஷாவைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.

“எங்க சுமங்கலி...எத உத்து உத்து பாத்துட்டு இருந்தீங்க? இதப் பாருங்க” முறைத்தாள்

பார்த்தான்.போட்டோவின் கிழே  ”மிஸ் ஆனந்தவல்லி” என்று போட்டிருந்தது.


                                             -----------------