Wednesday, September 30, 2009

மீனும் எமெர்ஜென்சி விளக்கும்





பூட்டிய
பிரம்மாண்டபங்களாவின்
உட்புறம்
மேலும் கீழுமாக
அந்தப் பக்கமும்
இந்தப் பக்கமும்
சில சமயங்களில்
ஓரங்களில் நின்று
உற்றுப் பார்த்தபடி
தன்னந்தனியாக
கண்ணாடித் தொட்டியில்
நீந்திக்கொண்டிருக்கிறது
ஓரே ஒரு
சின்னஞ்சிறிய
வண்ண மீன்
 ஒளிர்ந்துக்கொண்டிருக்கும்
எமெர்ஜன்சி விளக்கின்
ஒற்றை குழல் விளக்கைப்
பார்த்தபடி


படிக்க திரை விமர்சனம்:

“ஈரம்” படம் - முதுகு தண்டில் “சில்”


Tuesday, September 29, 2009

ரெயில்வே RAC லிஸ்ட் சினிமா பாடகர்கள்

பல சந்தா(Pala Shanda),ப்ரியா, தர்ஷினி கோபி,சுவி,சுர்முகி(Surmukhi)பெஃபி
(Febi)பீலாஹிண்டோ(PellaHinto),சைந்தவி,ஜனனி,நவீன்,ரீட்டா,கெளசிக்,ஜானகி ஐயர்,பிரசன்னா,ஷீபா,பாலாஜி,ரம்யா,பிரியாஹேமேஷ்,விவேகா,சரிதா,ரேகா,கீதா,
வின்செண்ட்,,ஸ்வேதா,ஹரிகுமார்,கிளிண்டன்,சோலார்சாய்,ஷான்,பல்ராம்,
நான்சி,கீர்த்தி சஹாத்தியா,ஷாயில் ஹதா,மேகா,மஹேஷ் வினயகராம்,கல்யாணி,சங்கீதாராஜேஸ்வரன்,கிருஷ்ண ஐயர்,ஷோபா சேகர்,வேல் முருகன்...


............மற்றும் பலர்.


இவர்களெல்லாம் யார்?ரயில்வே RAC லிஸ்டில் இருப்பவர்களா? இல்லை.


பின்னணிப் பாடகர்கள்.வெளிவந்த மற்றும் வரப்போகிற படங்களின் பாடல்களைப் பாடியவர்கள்.இன்னும் கூட நிறைய பேர் இருக்கிறார்கள்.

இன்னும் கூடவா? ஐய்யோ..! அம்மா!

டீவி சேனல்களில் ஜுனியர்,சீனியர்,ஹையர்,லோயர் பாடல் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்றவர்கள் யாராவது  இதில் இருக்கிறார்களா? பைனா குலர் வைத்துப்பார்த்து இருந்தால் சொல்லலாம்.

இவர்கள் டீவி சீரியல்களில் பாடினாலும் சினிமா ஆசை அவர்களை விடாது.
தீவிர சினிமா பாடல் ரசிகர் கூட இவர்கள் பாடிய பாடலை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்.


கார்பரேஷன் தினக்கூலி  நமக்கு இன்று வேலைக்கிடைக்குமா  என்று வாசலில் நிற்பது மாதிரி இவர்கள் தாங்கள் பாடிய குறுந்தகடைக் கொடுத்து இசையமைப்பாளர்கள் வீட்டு வாசலில் சான்சுக்காக நிற்க வேண்டும்.

அப்படியே சான்ஸ் கிடைத்தாலும் முன்னாள் மாதிரி 10 -20 வருடம் ஓட்ட முடியுமா?புதுபுது கதா நாயக/கிகள் மற்றும் இசையமைப்பாளர்கள் தோன்ற இவர்கள் மறைய ஆரம்பிப்பார்கள்.

இது தவிர சின்மயி,ரஞ்சித்,அனுராதா,நரேஷ்,பென்னி,சுசித்ரா,சுதா,கிருஷ் மது,திப்பு ,ஸ்ரீலேகா,மகதி என்று முன்னணியில் இருக்கும் பின்னணிப் பாடகர்கள்.


கடைசியாக:
 

முன்னெல்லாம் திரையில் ஒரு 10 அல்லது 20 வருடம் அனுபவப்பட்டு “திரை உலகைத் திரும்பிப் பார்க்கிறேன்” அல்லது “நான் கடந்து வந்த பாதை” என்று டீவியில் தோன்றி பேட்டி கொடுப்பார்கள்.
 

இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்.

Monday, September 28, 2009

“ஈரம்” படம் - முதுகு தண்டில் “சில்”

மழை, தென்றல்,சாரல் போன்ற சொற்களுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதைப் போல “ஈரம்”என்று சொல்லுக்கும் நிறையவே உண்டு.உச்சரிக்கும் போதே சற்று நனைவது போல ஒரு ஈர்ப்பு.

இந்த ஈரத்தை சொதசொதக்க வைக்காமல் ஒரு வசீகரமான பய ஈர்ப்பை அட்டகாசமாக கொண்டுவந்திருக்கிறார்கள். பொருத்தமானத் தலைப்பு.






அசட்டுத்தனமான ராத்திரி 12மணி,பேய்,எலும்புக்கூடு,முக்காடு,வெள்ளை உடை,’ஊஊ” என்ற ஊளையிட்டு பயமுறுத்தாமல் ரொம்ப நாளைக்குப் பிறகு பார்த்த புத்திசாலித்தனமான “சஸ்பென்ஸ் திரில்லர்”படம் ”ஈரம்”.(eeram).ஓமன், எக்ஸார்சிட் போல பேயில்லாமல் தண்ணீரை வைத்து ஒரு திகில் படம்.

உண்மையாகவே ”அடுத்தது என்ன” ”சீட் முனை” ”நகம் கடிக்க வைக்கும்”சஸ்பென்ஸ் என்று ஒவ்வொரு காட்சியிலும் உணர வைக்கும் படம்.

”அவிங்க” “இவிங்க”மதுரை அறுவை இல்லாத வித்தியாசமான கதை.

ஒரு பிளாட்டில் புதிதாகத் திருமணமான பெண். கடிதம் எழுதிவிட்டு நிறைய தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு  குளியலறைத் தொட்டியில் பைப்பை திறந்து விட்டபடி தற்கொலைச் செய்துக்கொண்டு தண்ணீரில்  முழ்கி இறக்கிறாள்.கொலையா? தற்கொலையா? துப்புத் துலக்குகிறான் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் அசிஸ்டெண்ட் கமிஷனர்.

அதைத் தொடர்ந்து அந்த பிளாட்டில் வசிக்கும் இரண்டு பேர்,வாட்ச்மேன்,வேறொருபெண்ணின் பாய் பிரெண்ட் அடுத்தடுத்து ஈரம்(தண்ணீர்) சம்பந்தப்பட்டே சாகிறார்கள்.மற்றும் இரண்டு பேர் ஈரத்தால் மிரட்டப்படுகிறார்கள்.சாவுகளுக்கு காரணம் யார்? ஈரம் என்ற அமானுஷ்யமா? வேறு ஆளா?இதுதான் கதை.படத்தைப் பாருங்கள்.

ஆரம்ப காட்சியே  அட்டகாச மேகமூட்ட நீல மூட் லைட்டிங்கில்தான் பிரம்மாண்டமான பிளாட்டில் ஆரம்பிக்கிறது.பிளாட் கொலை முடிந்து பிணத்தை எடுத்து முடித்தவுடன் அந்த பாத்  டப்பின் அவுட்லெட்
”பச்சக்” என்று மூடப்பட  படம் விறுவிறு.

அப்போது ஆரம்பித்ததுதான் மெதுவான தூரல் படம் முழுவதும் முக்கால் வாசி சிரபுஞ்சிதான்.

காட்சிகள் ப்ளாஷ் பேக்கிற்கும் நடப்பு காட்சிகளுக்கும் உறுத்தாமல் அற்புதமாக முன்னும் பின்னும்(cascade) வழுக்கிக்கொண்டுப்போகிறது.




நடிப்பில் முதல் மார்க் புதுமணப்பெண்ணாக வந்து இறக்கும் சிந்து மேனன். ஒரு இஞ்ச் கூட சிதறாமல் உருவாக்கியிருக்கிறார்கள்.நம்பகத்தன்மை.
அடுத்து நந்தா.அதுக்குப்பிறகுதான் மற்றவர்கள்.ஹீரோ ஆதி அனிமேஷன் ஹீரோ உணர்ச்சிகளாக் காட்டுகிறார்.தனுஷ் ஜாடை.

கேமராமேன் மனோஜ் பரமஹம்சா தண்ணீரையே நடிக்க வைத்திருக்கிறார்.படம் முழுவதும் மேக மூட்டம்.பக்கத்து பிளாட்டின் நடக்கிற மாதிரி இருக்கிறது.சில காட்சிகளில் நம்மேல் சாரல் அடிக்கிறது.

 நிறைய க்ளோசப் காட்சிகள் அருமை.இசை பாய்ஸ் படத்தில் நடித்த “தமன்”.இவரும பின்னணி இசையில் தண்ணி காட்டுகிறார்.காதல் காட்சி பின்னணியில் ராஜா சாயல்.பாட்டு ரஹ்மாரிஸ்.நல்ல தியேட்டர். நல்ல சவுண்ட் எபெக்ட்..

எல்லா சாவுகளுமே ஒரு சாதாரண ஆக்சிடெண்ட் என்றாலும் அதற்கு வேறொரு பரிமாணத்தைக் காட்டியது, அடுத்து தியேட்டர் சாவு சாதாரண ஆக்சிடெண்ட்  என்றாலும் அதில் ஒரு அமானுஷ்யதனம் காட்டியதற்கு  டைரக்டர் அறிவழகனுக்கு பாராட்டுக்கள்.

தியேட்டர் சாவு மற்றும் இரண்டு மூன்று இடங்களில் “லாஜிக்” மீறி அமானுஷ்ய காட்சிகள் உள்ளன. இது ஒரு திசைத் திருப்பும் உத்தி.இந்த சுதந்திரம் டைரகடருக்குக் கொடுக்கலாம். நன்றாகத்தான் இருக்கிறது.திரில்லர் படங்களுக்கு சற்று தேவைதான்.

குறைகள்:
முதல் பாதி விறு விறு இரண்டாவது பாதியில் இல்லை.படத்தின் நீளம்.கடைசி 25நிமிடங்கள்  ஒரு திருஷ்டி.யதார்த்தமாக முடிக்க வேண்டியதை “சொத சொதவென சேறாக்கி ஒரே சொதப்பல்”.கதாநாயகிக்கு துரோகம் செய்ததால் அவன் கதாநாயகன் கையில் உதை வாங்க வேண்டும் என்ற ஃபார்முலாவின்
-படி  உதைப்படவைப்பது.

அவ்வளவு பெரிய அபார்ட்மெண்டுக்கு ஒரே வாட்ச்மேனா? ஏன் கொலை ஸ்பாட்டுக்கு  நாய் வரவில்லை.

அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆன பிறகும் காலேஜ் ஸ்டூண்ட் மாதிரியேதான் இருக்கிறார்.அடுத்து அவர் விசாரணனையும் யதார்த்தமாக இல்லை. போலீசும் சற்று ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கிறார்கள்.

மேலுள்ள சிறிய குறைகளை ஒதுக்கிவிட்டு கட்டாயம் பார்க்கலாம்.
சவுண்ட் எபெக்ட் முக்கியமானதால் நல்ல தியேட்டரில் பார்க்கவும்.

 கதாநாயகி மனதை கனக்க வைக்கிறார் வீடு திரும்பிய பின்னரும்.

தயாரிப்பாளர் சங்கருக்குப் பாராட்டுக்கள்.

Friday, September 25, 2009

ஹைகூக்கள்...! ஹைகூக்கள் ...!

தினசரி வாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightning அனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும்உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப்படுத்துவதுதான் ஹைகூ.மற்றும் வேறு விதிகள் உண்டு.இது ஒரு நேரடி அனுபவம்.சமுதாய சாடல்/நீதி தவிர்க்க வேண்டும்.

Haiku only describes, does not prescribe or tell or preach.


ஓடும் காரின் மேல்
தொப்தொப்பென்று
விழும் நிழல்கள்

பழைய வயலின்
சுருதி சேர்க்கையில் வெளிப்பட்ட
அம்மா

இடி சத்தம்
பயத்தில் விழுந்த
காலண்டர்

ரொம்ப ரொம்ப தனியாக
கண்ணாடித் தொட்டியில்
ஒரு மீன்

குட்டையில் விழுந்த
நிலாவைப் பார்க்கும்
மற்றொரு நிலா

எல்லோரையும் ரோடின்
ஓரத்திற்கு விரட்டியது
தீடிர் மழை

குட்டையில் குதிக்கும்
தவளைகள்
உடையும் நிலா

இறந்து போனவரின்
பாய் தலையணை
குப்பைத் தொட்டியில்

காரின் மேல் விழுந்து
தொலைந்து போகின்றன
நிழல்கள்



அப்பாவின்
பிண்டத்தைச் சாப்பிடும்
அணில்கள்



படிக்க சிறுகதை:

ஸ்மைல் ப்ளீஸ்

 

Wednesday, September 23, 2009

ஸ்மைல் ப்ளீஸ்

அதைப் பார்த்ததிலிருந்தே ஏதோ ஒரு ஏக்கம் வாட்டி எடுத்தது கல்யாணிக்கு.ஏன் பார்த்தோம் என்றாகிவிட்டது.

அவள் பார்த்தது முப்பது வருடத்திற்கு முன் எடுத்த ஒரு குரூப் போட்டோ. அரதப்பழசான போட்டோ.அரதப் பழசே ஒரு லட்சணம்தான்அந்த போட்டோவிற்கு.அவள் பள்ளியில் எடுத்தது.ஒன்பதாவது  வகுப்பு வருட இறுதியில் பள்ளி ஆண்டு விழாவிறகு முன் எடுத்த போட்டோ.மாணவ/மாணவிகள் சேர்த்து மொத்தம் 35 பேர் போட்டோவில்.

மகள் ஹரிணிக்காக புத்தகம் ஒன்றை தேட எல்லாப் பெட்டிகளையும் குடையும் போது இந்தப் போட்டோ அகப்பட்டது.ஹரிணியை விட்டு விட்டு இதில் முழுக ஆரம்பித்தாள்.

பின்னணியில் தொங்கும் ஏற்றலும் குறைச்சலுமாக தொங்கும் கந்தல் படுதா.அதன் முன்னால் தன் பள்ளி வகுப்புத்தோழி/தோழர்கள்.அனாதை ஆசிரம குழந்தைகள் போல முக பாவங்கள்.கிளாசில் செய்யுள் ஒப்புவிப்பதுப் போல கையைக் கட்டிக்கொண்டு போஸ்.கசங்கிய உடைகள்.போட்டோகிராபஃர் “ஸ்மைல் ப்ளிஸ்” சொல்லவே இல்லையா?உம்மென்று யார் முகத்திலும் சிரிப்பு சுத்தமாக இல்லை.போட்டோ என்றால் ஹிட்லரின் நாஜி முகாமா அப்போது? 


இவளுக்குதான் சிரிப்பு வந்தது.மனது முழுவதும் சந்தோஷ ஊற்றுக்கள் கிளர்ந்தெழ“so sweet"  சொல்லியபடி போட்டோவிற்கு முத்தம் கொடுத்தாள்.

ஒவ்வொருவரையும் உற்றுப்பார்த்து அடையாளம் கண்டு வருகையில் கூடவே  மக்கிப் போன பிளாக் அண்ட்ஓயிட் நினைவலைகள் பின் படுதாவில் ஓடியது. முடித்தவுடன் இந்த முப்பது வருட பழசு உடனே எல்லோரையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கிளப்பிவிட்டது.

ஏன் என்று இவளாள் இனம் கண்டுக்கொள்ள முடியவில்லை.ஒரு வேளை இதுதான் முதலில் தோன்றிய அந்த இனம் புரியாத ஏக்கமா? பள்ளி படிப்பு முடிந்ததும் யாருடனும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் அப்போது இல்லை.ஆனால் இந்த பிளாக் அன்ட் ஒயிட் பழசு அந்த எண்ணத்தை இப்போது கிளப்பிவிட்டது.

எங்கு போய் தேடுவது?உலகத்தின் எந்தெந்த மூலையில் இருக்கிறார்களோ?தன்னை மாதிரி இவ்வளவு பெரிய போஸ்டில் எவ்வளவு பேர் உயர்ந்தார்களோ?முகம் கொடுத்துப் பேசுவார்களா?இதே அலைவரிசை ஏக்கம் அவர்களுக்கு இருக்குமா?கல்யாணி ஊர் விட்டு ஊர் மாறி எங்கோ வந்து விட்டாள்.போட்டோவை பத்திரப் படுத்தி உள்ளே வைத்தாலும் அதில் உள்ளவர்கள் உயிரோடு கண் முன் வந்து கொண்டிருந்தார்கள்.

ஏதோ சாமிக்கு நேர்த்திக்கடன் போல் இந்த குரூப் போட்டோ உள்ள 35 பேரில் ஒருத்தரையாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல் கல்யாணியைப் பிராண்டி எடுத்தது.குடும்ப உறுப்பினர்கள் ஒன்றும் புரியாமல் தலையை சொறிந்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத்தான் முடிந்தது.

அடுத்த இரண்டு நாளில் பல வித தேடல் முயற்சிகளில் இறங்கி இந்தப் போட்டோவில் இல்லாத கிளாஸ் டீச்சர் ஸ்டெல்லா ராணியின் விவரங்கள்தான் கிடைத்தது.போன் நம்பர் எதுவும் கிடைக்கவில்லை.கிடைத்த இதுவே அவளுக்கு உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுத்தியது.


தன் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் தூரத்தில்தான் டீச்சர் வீடு.தன் காரை எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு கிளம்பினாள்.


தேடிப்பிடித்து டீச்சர் ஸ்டெல்லா ராணியின் வீட்டை அடைந்தாள் ரொம்ப பழைய வீடு.ஆர்வத்துடன் காத்திருந்தாள்.டீச்சரும் வந்தாள்.ஸ்கூல் பழக்கத்தில் மரியாதையாக எழுந்து நின்றாள். டீச்சரின் வயது முதுமை கல்யாணிக்குப் பார்க்க சகிக்கவில்லை.இந்த கோலத்தில் கற்பனைச் செய்துப் பார்க்கவில்லை.கையில் ஸ்கேலோடு எப்படி கிளாசில் பாடம் எடுப்பார்.


 துக்கம் தொண்டையை அடைத்தது.டீச்சர் ரொம்பவும் ஒடுங்கிப்போயிருந்தார்.வேலைக்காரி உதவியுடன்தான் நடந்து வந்தார்.

”குட் மார்னிங்..மேம்!”பார்த்தவுடன் தன்னை அடையாளம் தெரியவில்லை.கல்யாணிக்கு வருத்தம்தான்.அறிமுகம் செய்து விவரம் சொன்னாள்.குரூப் போட்டோவைக் காட்டி அடையாளம் தெரிய சற்று நேரம் ஆயிற்று.இருவரும் கையைப் பிடித்துக்கொண்டு மனம் நெகிழ்ந்தார்கள்.

”விஷயம் தெரிஞ்சுதான வந்துருக்கயா கல்யாணி?”


“தெரியாது.என்ன விஷயம் மேம் ?”


“.................”


”அந்த போட்டோவ பாத்தியா?”

தன் எதிரே வரவேற்பு அறையில் மாட்டியிருந்த போட்டோவை நோக்கிக் கைக்காட்டினார் டீச்சர்.ஆர்வம் மேலிட எழுந்துப் பார்த்தாள் கல்யாணி.

சந்தோஷம் தாங்கமுடியவில்லை.அதே தன் சின்ன வயது பள்ளி வகுப்பு மாணவ/மாணவிகளின் குரூப் போட்டோ.ஆனால் வயது 25-26 இருக்கும். அடப்பாவிகளா! என்னை விட்டு விட்டு இவர்கள் டீச்சரைச் சந்தித்திருக்கிறார்கள்.பழைய போட்டோவில் தன் பக்கத்தில் இருந்த  சாம்பவி-அனுசுயா என்ற இரட்டையர்கள் மட்டும் இல்லை.மீதி எல்லோரும் இருந்தார்கள்.சே! மிஸ் பண்ணிட்டோம்.சற்று அவமானமாகக் கூட இருந்தது.

” சே! இவங்கெல்லாம் உங்க மேல குரு மரியாதை வச்சு சிரத்தையா அன்போடு ஒண்ணு சேர்ந்து உங்கள சந்திச்சுருக்காங்க...நாந்தான் மிஸ் பண்ணிட்டேன்.ஐ ஆம் அன் லக்கி மேம்..”

” நோ..நோ...! யூ ஆர்  வெரி லக்கி கல்யாணி...!”

“ஏன் மேம்?”

“ஒ,,,ஜீசஸ்....” என்று சொல்லி சிலுவை குறி போட்டபடி “இவங்க யாருமே உயிரோட இல்ல.என்ன சந்திச்சிட்டு  இவங்க ஒரு மலைப் பிரதேச டூர் போனங்க.மலையில் இருந்து பஸ் உருண்டு ஆத்துல விழுந்து எல்லோரும் இறந்துட்டாங்க”தட்டு தடுமாறி வார்த்தைகள் வந்தது.

“ஓ காட்! நம்பவே முடியல”அதிர்ந்து போய் தன் இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.சே!இதைக் கேட்பதற்கா இவ்வளவு தூரம் மெனக்கெட்டது? ஒரு விதமான பயத்தில் உடம்பு லேசாக நடுங்கியது.அந்த குரூப் போட்டோ தன் பார்வையில் படாமல் இருக்க தலையை தாழ்த்திக்கொண்டாள்.

சோகமும் பயமும் கலந்த ஒரு விதமான தாக்கத்தில் பேச வார்த்தைகள் ஒன்றும் பிடி படவில்லை.
இருப்பும் கொள்ளவில்லை.ஐந்து நிமிடம் மெளனமாக ஓடியது.

திஸ் இஸ் வெரி வெரி சாட் அண்ட் குரூயல் மேம்.அப்புறம்....அந்த சாம்பவி-அனுசுயான்னு டிவின்ஸ் இருந்தாங்களே....அவங்க இப்ப எங்க இருக்காங்க மேம்.அட்ரஸ் தெரியுமா. ஐ வாண்ட் டு சீ தெம்?”

”அவங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷம் முன்னாடி கேன்சர்ல இறந்துட்டாங்க”சிலுவை குறிப் போட்டுக்கொண்டார்.


                                             முற்றும்



படிக்க கவிதை:புன்னகையில் நழுவும் காதல்


Thursday, September 17, 2009

கடியோ கடி..!.செம்ம கடி!

என்னங்க ஏன்  அடிக்கடி சமையல்  ரூம்  பக்கம் போகிறீங்க?
 டாக்டர் சுகர்
  இருக்கான்னு  அடிக்கடி  செக் பன்னிக்க  சொன்னார் அதான்.
 
______________________________________________________


டாக்டர் என் மனைவி  ஓவரா டி.வி.  பாக்குறா''  
 எந்த  அளவுக்கு   பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும்,  டார்ச் அடிச்சி பாக்குற  அளவுக்கு!!!
 ______________________________________________________

*ஒரு பொண்ணு  போட்டோவுல  தேவதைமாதிரி  இருந்தாலும்
 *நெகடிவ்ல பிசாசு  மாதிரிதான் இருப்பா*
 
______________________________________________________
 

 அப்பா அடிச்சா  வலிக்கும்  அம்மா அடிச்சா  வலிக்கும்
 ஆனால் சைட்  அடிச்சா  வலிக்காது
  ______________________________________________________
 உன்னை யாரவது  லூசுன்னு சொன்னா  கவலை படாதே!
 வருத்த படாதே!  ஃபீல் பண்ணாதே!
  உங்களுக்கு  எப்படி  தெரியும்ன்னு  கேள்!
  ______________________________________________________
 காதல் ஒரு மழை  மாதிரி,   நனையும் போது  சந்தோஷம்.
 நனைந்த பின்பு  ஜலதோஷம்.
   ______________________________________________________

 மகனே பரிட்சையில்
  எத்தனை கேள்வி  வந்தது?
 ஐந்து கேள்விப்பா!
நீ எத்தனை கேள்வி
   விட்டுட்டே?
 முதல் மூணும்
  கடைசி  இரண்டும்
 வெரிகுட் கீபிடப்
 
______________________________________________________
 
 டேய் என்  ஜாதகப்படி  எனக்கு அறிவு ரொம்ப  ஜாஸ்தியாம்.
 இப்பவாவது
  தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை  நம்புறதில்லைன்னு???????
______________________________________________________

 நீங்க உடனடியா  மீன்,  ஆடு, கோழி   சாப்பிடுவதை  நிறுத்த வேண்டும்.
 அதுக சாப்பிடுவதை
  நான் எப்படி நிறுத்த  முடியும் டாக்டர்.
______________________________________________________

 வக்கீல்: உனக்கு  திருமணமாகிவிட்டதா?
 சர்தார்:
  ஆகிவிட்டது.  
வக்கீல்: யாரைத்  திருமணம் செய்து  கொண்டிருக்கிறாய்?
 சர்தார்: ஒர்
  பெண்ணை.
 வக்கீல்: பெண்ணைத்
  திருமணம் செய்து  கொள்ளாமல் ஆணையா
 திருமணம் செய்து கொள்வார்கள்?
 சர்தார்: ஆம் என்
  தங்கை செய்து  கொண்டிருக்கிறாளே!!!..
______________________________________________________

 சார்,
  டீ மாஸ்டர்டீ  போடறாரு,
 பரோட்டா
  மாஸ்டர்பரோட்டா  போடறாரு, 
மேக்ஸ்  மாஸ்டர்மேக்ஸ்  போடறாரு,
நீங்க
  ஹெட்மாஸ்டர்  தானேஏன் மண்டய போட
 மாட்டேங்கிறீங்க?...
______________________________________________________

 ''நம்ம பையன் எங்க
  பணம் வைத்தாலும்  எடுத்திட்டு போயிடறாங்க''
 ''அவனுடைய காலேஜ்
  புத்தகத்தில் வை....  பத்திரமா இருக்கும்''
______________________________________________________

 ஒரு காப்பி
  எவ்வளவு  சார் ?
 5 ரூபாய். எதிர்த்த கடையில 50
  காசுன்னு  எழுதியிருக்கே ?
 டேய்.
  சாவுகிராக்கி  அது XEROX காப்பிடா!
______________________________________________________

 உங்க கிட்னி
  பெயில்  ஆகிடுச்சு.
 நான் என் கிட்னிய
  படிக்க வைக்கவே  இல்லயே  டாக்டர் அது எப்படி
பெயில் ஆகும்.

______________________________________________________
 இன்னிக்கி 8  மணிக்கு  கடுமையான மழையும் காற்றும் வரும்னு  டி.வி  யில சொன்னாங்க.
 நீங்க
  கேட்டீங்களா?  
 இல்லை அவங்களே
  சொன்னங்க...
______________________________________________________


எனக்கு அடிக்கடி மெயிலில் நிறைய கடி ஜோக்ஸ் வரும். சிலது நல்லாவும் இருக்கு.


படிக்க: கவிதை:

விநாயகர் குடையும் ஒரு கெமிஸ்ட்ரியும்

 

கவுண்ட்டவுனில் பிராண அவஸ்தை

நான் காத்திருக்கும்
இந்த சிக்னல் நிறுத்தம் பிடிப்பதில்லை
நான்கு ரோடுகள் கூடும்
பெரிய நிறுத்தம்
இதே மாதிரி
அடுத்த ஜன்மத்தில்
கோழிகள் பஜாஜ் எம்-40  ஓட்ட
இந்த கசாப்புக்கடைக்காரனும்
தலைகிழாகத் தொங்கி
பிராண அவஸ்தைப் பட வேண்டும்
நேர்ந்துக்கொள்கிறேன்
ஏன் போன ஜன்மத்தில் 
கோழிகள் பஜாஜ் எம்-40  ஓட்டி
இவன் தலைக்கிழாகத் தொங்கி
பிராண அவஸ்தைப் பட்டிருக்கலாம்
அடுத்த நினைவு அடுக்க -
அதற்கு அடுத்த நினைவாக
இவன் பஜாஜ் எம்-40 ஓட்ட
அதுகள்  பிராண அவஸ்தைப் பட
பத்திக்கு இதுகள் பஜாஜ் எம்-40 ஓட்ட
அவன்  பிராண அவஸ்தைப் பட -
 மாறி மாறி இருவரும்
 பஜாஜ் எம்-40 ஓட்டிக்கொண்டிருக்கும்
இந்த  110  சிக்னல் நிறுத்தம்
பிடிப்பதில்லை
கவுண்ட் டவுனமுடியும் நேரம் வரை
நிறைய யோசித்து யோசித்து
இதுகள் மாதிரி பட வேண்டியிருக்கிற்து
பிராண அவஸ்தை



படிக்க: இளையராஜாவின் வயலின் உருக்கம்

Wednesday, September 16, 2009

புன்னகையில் நழுவும் காதல்





ஒவ்வொரு முறையும்

ஏதோ சொல்ல வந்து

சொல்லாமல் நழுவிப் போகும்

தருணங்களை  சந்திக்கும்

நம் புன்னகை

சொல்லிவிடுகிறது

ஏதோ சொல்ல வந்து

சொல்லாமல் நழுவிப் போகக்கூடும்     

இந்த முறையும்



Tuesday, September 15, 2009

இளையராஜாவின் வயலின் உருக்கம்

”இத்தாலியில் ராஜா நேரலை”(Raja live in Italy) என்ற தலைப்பின் கிழ் இந்த இந்த இசைக்கோர்ப்பைக் கேட்டேன்.இந்த இசைக்கோர்ப்பில் குரல் கிடையாது.இசைக்கருவிகளின் இசைப்பு மட்டும்தான்.இந்தக் கோர்ப்பு அவரின்
இசையில் வந்த ஒரு தமிழ்படத்தின் பாட்டுதான்.வழக்கமான ராஜாவின் ஜீனியசான இசை.



ஜானகி சோலோ.பாடும் கதா பாத்திரத்தின்  உணர்ச்சிக்கொந்தளிப்பை உருக்கமாக வெளிப்படுத்தும் பாடலின்  வரிகள்.

நான் சொல்லப்போவதில்லை.கேட்டால் தெரிந்துவிடும்.



இதன் சிறப்பு:
திருமணத்தில் முகூர்த்தத்தின் போது மணப்பெண் ஒரு விதமான ஒப்பனை கம் உடையில்  அழகாகக் காட்சியளிப்பாள்.அதே மணப்பெண் மாலை ரிசப்ஷனில் வேறு விதமான ஒப்பனை கம் உடையில் அழகாகக் காணப்படுவாள்.


 அது மாதிரி நம்மூரின்  வழக்கமான தமிழ் சோகப்பாட்டு இத்தாலியில் இசைஞானியின்  இசைக்கோர்ப்பால் அதே ஜாடையில் வேறுவிதமாக உருவெடுக்கிறது.



இசைஞானி தன்னுடைய இசையையே இன்னும் மேம்படுத்தி கொடுத்ததுதான் இந்த இசைக் கோர்ப்பு.ரீமிக்ஸ் என்கிற வாந்தி இல்லை.



ஒரிஜனல் பாட்டில்(5.20 நிமிடங்கள்)முதலில் மிருதங்கம்/ஆண் சோக ஜதிகள்/ ஜலதரங்கத் தட்டல்கள்.நடுவில் கிழிக்கும் வயலின்,புலம்பும் ஜானகியின் ஹம்மிங்குகள்.இடையிடையே வரும் சோக ஷெனாய்.கடைசியில் வயலின்,  ஜதிகள் பொறியாகப் புறப்பட்டு அடங்கும்.


இனி இசைக்கோர்ப்பு...............


முதலில் ”கும்” என ஒரு கிடார் தீற்றல்.அடுத்து வயலினில் ஒரு சோகமான இசைப்பு மிகவும் அற்புதம் அந்த வயலினைத் தொடரும் மற்ற உப வயலின்கள் என 4.20 நிமிடங்களுக்கு இசை சோக மழை.முழுவதும் வயலின் புலம்பலகள்.நடுவில் வேறு இசைக்கருவிகள்.

இது ஹிந்துஸ்தானி ராகத்தில் போடப்பட்டதாக ஒரு யூகம்.தவறு இருந்தால் திருத்தலாம்.ராகம் பெயர் தெரியவில்லை.




கேட்க & பார்க்க:
                                                  Raja Live in Italy





(நமக்கு முன்னாடி  ராஜா விசிறியார், பதிவர்  தமிழ்ப்பறவை கேட்டுருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிறேன்)





Monday, September 14, 2009

விநாயகர் குடையும் ஒரு கெமிஸ்ட்ரியும்

Pillayar (Ganesh, Vinayaka) Chathurthi by Velachery Balu.









வருடா வருடம் 
களிமண் பிள்ளையாரை
சம்பிரதாயமாக கடலில் 
கரைத்துவிட மனம் இருந்தாலும்
வண்ணக் குடையை அவருடன்
அனுப்புவதற்கு மனது வரவில்லை


அவர் போனதும் பரணில் 
தங்கிவிடுகிறது


அதைப் பற்றி
கரைந்தப் பிள்ளையார்
வருத்தப்பட்டதில்லை


அடுத்து வரும் அடுத்த வருட 
புதுப் பிள்ளையாரும்
அலட்டிக் கொண்டதில்லை

பரண் மீறி ஏறிப்பார்த்து-

ஒன்றுக்கு நான்காக
பரணில் இருக்கும் 
எல்லா குடைகளையும்
ஒருசேர தலைக்கு மேல் பிடி 
என்றும் அடம் பிடித்ததில்லை

கடலுக்கு கரையக் கிளம்பும் போதும்
எல்லா குடைகளையும் கையோடு
எடுத்தச்செல்ல பிடிவாதம்
பிடிப்பதில்லை

கனவிலும் வந்து படுத்துவதில்லை
குற்றம் குறையில்லாமல்தான்
கடலில் கரைகிறார்

ஒவ்வொரு வருடமும்
புதுப் பிள்ளையாருடன்
புது குடையும் வாங்கப்படுவதால்

இந்த விஷயத்தில்
எங்களுக்கும் பிள்ளையாருக்கும்
ஒர்க் அவுட் ஆகிறது 
நல்ல கெமிஸ்டரி

Wednesday, September 9, 2009

இரண்டு வார்த்தைக் கதைகள்

தலைப்பு:  ”அய்யோ பாம்பு! ” என்றதும் இளம்பெண் மரணம்.

கதை:  கேண்டிட் கேமரா
__________________________________

தலைப்பு:  தேர்வு எழுதிய 40%சதவீதம்  சாப்டுவேர் இன்ஜினியர்கள்

கதை: வங்கி கிளார்க்
__________________________________

தலைப்பு:  மரத்தடியின் கிழ் வைத்த  என் வீட்டுப்  பிள்ளையார்

கதை: எங்கு போனார்?
_________________________________

தலைப்பு: வீட்டில் பார்த்த  வரன் பத்துப் பொருத்தமும் பொருந்தி வர எஸ் எம் எஸ் அனுப்பினான்

 கதை:  என்ன மறந்திடு!
_________________________________

தலைப்பு:"ஏன் சார் இப்படி? நாலாவது தடவை  ஓயெஸ்(OS) மாத்தறேன்”
  
கதை:அசடு வழிந்தேன்
_________________________________

Monday, September 7, 2009

கமலின் “உன்னைப்போல் ஒருவன்”-பாடல்

கமல் மகள் ஸ்ருதிஹாசன் “உன்னைப்போல் ஒருவன்” படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.இந்தப் படம் ஹிந்தியில் வெளி வந்த “A Wednes Day" என்ற படத்தின் தமிழாக்கம்(ரீமேக்).இதில்கமல், மோகன்லால் நடித்துள்ளனர்.


கமல் நடித்துள்ளதால் இப்படம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இசை ஸ்ருதிஹாசன்? தந்தை 8 அடி பாய்ந்தால் ஸ்ருதிகுட்டி 16 அடி பாயுமா?பார்க்கலாம்.





மொத்தம் ஐந்து பாடல்கள்.மனுஷ்ய புத்ரன் பாடல்கள் எழுதி உள்ளார்.எல்லாப் பாடலுமா? தெரியவில்லை.


1.அல்லா ஜானே ...கண்ணீர் அறியா கண்கள் உண்டோ!
கமல் (சோலோ)பாடுகிறார்.மிகச் சோகமான சுப பந்துவராளி ராகத்தில்(”பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுப்போனால் அய்யனை.. நீ காணலாம்...” என்ற பாட்டு இதே ராகம்) பாட்டின் ஆரம்ப இசையும் ,முதல் சரணத்திற்கு முன் வரும் இசை வித்தியாசமாக இனிமையாக இருக்கிறது.ஆல்பத்தில் இந்தபாட்டு ஒன்றில்தான் டெக்னாலஜியை வைத்துக்கொண்டு வெறும் சத்தமாக இரைக்காமல் it is simply musical. கமல் நல்ல நடிகர்.நல்ல பாடகரா?பாடும்போது நடிக்கக்கூடாது.சில இடங்களில் சுருதி சேரவில்லை.

2.அல்லா ஜானே -2..கண்ணீர் அறியா கண்கள் உண்டோ!
ஸ்ருதி ஹாசன் பாடியது.இனிமையான குரல்.ஸ்ரேஷ்யா/சாதானசர்க்கம் போல் மழலைத் தட்டவில்லை.தமிங்லிஷ் இல்லை.ஆரமபத்தில் இசை நன்றாக ஆரம்பிக்கப்படுகிறது. பிறகு?சோக மெலடிக்கு எதற்கு இந்த பப்பி லஹரி மியூசிகல் சேர் குமுக்கு இசை.அப்பா பாட்டு போல் வித்தியாசமாக இசைத்திருக்கலாமே! அங்கங்கே ஹிந்தோளம் ஹம்மிங் சோகமாக ஒலிக்கிறது.பாட்டின் நடுவில் ”கடவுள் பாதி” என்று கமல் மாதிரி வசனம் பேசுகிறார் ஸ்ருதி.


3.நிலை வருமா? கமல்-பம்பாய் ஜெயஸ்ரீ
நல்ல மெலடி.மெலிதான இசை.”நிலை வருமா” என்ற வரிகளுடன் பாடலின் நடுவில் கமல் ஜெயஸ்ரீடன்  சேரும் இடம் இனிமை. பின் வரும் ஆலாபனையும் நல்லா இருக்கு.ஆனால் பாட்டின் இனிமையையும் இசையையும் கடைசி வரை நீட்டிக்க முடியவில்லை.அனுபவம் வேண்டும்.முயற்சி செய்தால் வரும். Born with silverspoon என்று அசிரத்தைக் காட்டினால அம்பேல்.


4.வானம் எல்லை இல்லை:
ஸ்ருதி ஹாசன், பிளேசி பாடியது.இதில் ஸ்ருதி ஹாசன் குரல் அற்புதம்.ஆனால் பாட்டு மேற்கத்திய இசையின் கும்மாங்குத்துப் பாட்டு.வழக்கமான பிளேசியின் கடித்து குதறி ”தமிங்கிலீஷ் சாமி” வந்து ஆடி பாடும் பாட்டு.


மேற்கத்திய இசையை கொஞ்சம் புத்திசாலித்தனமாக இசைக்கலாமே!கூர் கட்டி அடிக்கனுமா?சுமார். தாங்க முடியவில்லை.அம்மணி! டெக்னாலாஜியை வைத்துக்கொண்டு சவுண்டு உடக்கூடாது.உட்ட இனிமையா வுடனும்.


5.உன்னைப்போல் ஒருவன்:
இந்தப் பாட்டை 11 பேர் பாடுகிறார்கள். இந்த ஒரு வரியும், மற்றும் கீதையின் சுலோகமான “பரித்ராணய சாதுனாம்...”தான் திருப்பிப் திருப்பி வருகிறது.இதுவும் சுமார். உயிரே இல்லாமல் பாட்டு.மனதைத் தொடுவது மாதிரி மெட்டுப் போட வேண்டாமா?


ரெஹ்மான்,ஹாரிஸ்,யுவன் தாக்கம் (ஒரளவுக்கு) இல்லாமல் இருப்பதற்கு பாராட்டலாம்.அம்மணிக்கு ஒரு யோசனை.பாட்டில் முடிந்த அளவுக்கு டெக்னாலிஜியை வைத்து இனிமைக் கொண்டு வாருங்கள்.தொப் தொப் தட்டுவதில் பிரயோஜனம் இல்லை.


சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.


கடைசியாக ஏர்டெல் சூப்பர் சிங் ஸ்டைலில்................


selected?   rejected?   wait listed?


Wait listed........................!


பாடல் கேட்க:

http://tamil-theater.blogspot.com/2009/09/download-unnai-pol-oruvan.html



Sunday, September 6, 2009

என் வாய் நாத்தமடிக்துங்கறாள்

முத்தமிழ் தவிர  ”விளம்பரத் தமிழ்” என்ற ஒன்று இருக்கிறது.எண்பதுகளில்ஆங்கிலம் அல்லது இந்தியில் தயாரிக்கப்பட்ட பற்பசை(tooth paste)விளம்பரம் ஒன்று தமிழில் டப் செய்யப்படும்போது எப்படி நாறுகிறது பாருங்கள்!தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.


மழுங்க ஷேவ் செய்யப்பட்ட வட இந்திய காதலன் தன் காதலியின் முகத்திற்கு  அருகே சென்று ஆசையாகப் பேசுவான்.சட்டென காதலி முகத்தைத் திருப்பிக்
கொள்வாள்.அடுத்த ஷாட்டில் காதலியின் தோழி “என்னாச்சு” என்பாள்.


காதலியின் பதில்: “அவர் வாய் நாறுது” .


வேறொரு விளம்பரப் படம்.அதே சீன். ஆனால அடுத்த ஷாட்டில் காதலியின் தோழிக்கு பதில் காதலனின் தோழன்  “என்னாச்சு!? ஏன் முகத்தைத்திருப்பிக்
கொள்கிறாள்” என்பான்.


காதலன் பதில்:“என் வாய் நாத்தமடிக்துங்கறாள்”


இதன் ஆங்கில உரையாடல்களை உங்களால் ஊகிக்க முடிகிறதா?மொழிபெயர்ப்பு அவ்வளவு மணக்கிறது!கொஞ்ச காலம் கழித்து  காதலி டப்பிங்கைத் திருத்திக்கொண்டாள் “அவர் வாய் துர்நாற்றம் வீசுது”





இப்போதெல்லாம் இந்த ”விளம்பரத் தமிழ்” நிறைய முன்னேறி விட்டது.நல்ல மொழி பெயர்ப்பு.சரியான  டப்பிங் தமிழ் பேசும் ஆட்கள்.அடுத்து நேரடி தமிழ் விளம்பரங்கள்.


அதிக ”போஷாக்கு”  என்பது மாறி அதிக “சக்தி”(அ)”ஊட்டச் சத்து”


ஆனாலும் குழந்தைகள் பேசும் (ஆங்கிலம் அல்லது இந்தியில் எடுக்கப்பட்ட) விளம்பரப் படங்களில்  டப்பிங் தமிழைக் கேளுங்கள்.உணர்ச்சியற்று ஒப்பிப்பதுப் போல இருக்கும். ஏன் அது? synchronisation?


எல்லா தலைமுறையும் கேட்டு வளர்ந்த விளம்பரப் படம் “ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைஃப் பாய்.......லைஃப் பாய் எவ்விடமோ.......”


யூ டியூபில் ஒரு டூத் பேஸ்ட் விளம்பரம் பாருங்கள். சூப்பர்!

சிறுகதையின் கடைசி டிவிஸ்ட்?


Friday, September 4, 2009

அந்த ”அனானி” யார்? சொல்லமுடியுமா?




இந்த பிரபஞ்சத்தில் எல்லோருமே நிச்சியமாக ஆயுளின் ஏதோ ஒரு கணத்தில்    நின்று அதைப்பற்றி யோசனைச்செய்திருப்போம்.

எதைப் பற்றி?

இந்த பிரபஞ்சம் பற்றிதான்.

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?நாமெல்லாம் யார்? எப்படி வந்தோம்?எதற்கு வந்தோம்?கோடானகோடி அண்டங்களின் கதை-வசனம்-டைரக்‌ஷன் யார்?ஏதேதோ மனதில் யோசித்து விட்டு அடுத்த வேலைக்குப்போய்விடுவோம்.ஏன் என்றால் விடை தெரியாது.

ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.

ஒரு பானை இருந்தால் செய்தவன் (குயவன்),செய்வதற்கான கருவி (சக்கரம்),செய்யும் முறை,(சுத்திவிட்டு கையால் பிடிப்பது),செய்பொருள்
(களிமண்) (raw materials).


இந்தப் பிரபஞ்சத்திற்கு உண்டான Man,Machine,Method,Materials?வடமொழியில் ஒரு வஸ்துக்கு தேவை உபாதானம்,நிமித்தம்,ஸஹகாரி என்பார்கள்.


 500,00,00,000 கோடி வருடங்களுக்கு முன் சூன்யம் அல்லது எங்கும் தூசு மண்டலம் (தூசு எப்படி வந்தது?சூன்யம் ஏன்?).இத்தூசுகளுக்கு இடையே ஏற்பட்ட இயக்கத்தின் காரணமாகஇவைகள் ஈர்க்கப்பட்டு,மோதி விளையாடி,சுற்றி, சின்ன சின்னக் கோளங்களாக உருவாகி சுற்றத் தொடங்கின என்கிறது விஞ்ஞானம்..

அடுத்து நமது பூமி ஒரு பெருவெடிப்பில் (bing bang theory) சூரியனிடமிருந்து பல லட்சம் உஷ்ணத்தில் துண்டாகப் பிரிந்து பல கோடி ஆண்டுகள் மழை மற்றும் காற்றால் குளிர்ந்து ஏற்பட்டதுதான் என்கிறது விஞ்ஞானம்.


(இந்த பிரபஞ்சத்தில் நான் இருக்கும் தெரு எங்குள்ளது?)


பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தா கடவுள்தான்.இவர்தான் பிரபஞ்ச காரணன்.பிரம்மாதான் படைத்தார்.விஷ்ணுதான் அட்மினிஸ்ட்ரேஷன்.சிவன்தான் அழித்தலைப் பார்த்துக்கொள்கிறார் என்கிறது என்கிறது மதம் .

மற்ற மதங்களும் அவரவர் கடவுள்கள்தான் என்று சொல்லுகின்றன.

ஜகத்மித்யா அதாவது உலகம்(ஜகம்) மாயத்தோற்றம்.நமது ஜீவாத்மா மாயத்தோற்றத்தில் மயங்கி இருக்கிறது.(கயிறு பாம்பாகத் தோற்றம் அளிக்கிறது மாயை என்ற போர்வையால்)மாயத்தோற்றம் நீக்கி பெருவெளியில் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவை இந்த ஜீவாத்மா உணர்ந்தால் ஒன்றும் கிடையாது./அஹம் பிரம்மாஸமி. அதுதான் இது தத்வமஸி என்கிறது வேதாந்தம்.




இதைத் தவிர பாட்டி, அம்மா, செவிவழி,சந்தமாமா கதைகள் நிறைய உண்டு.


எப்படி தோன்றியது என்று எல்லாம் சொல்கிறது.ஏன் தோன்றவேண்டும் என்பதற்கு விடை இல்லை.

எதற்குப் பானை? புரியாத புதிர்தான்.

தெரியாமல் இருப்பதுதான் சுவராசியம் என நினைக்கிறேன்.

ஆனால் கலர்கலரான கோடானகோடி அண்டசராசரங்கள் அற்புதம்.வாயைப் பிளக்க வைக்கும் ஆச்சிரியம். அதை ரசிக்கவும் அதைப் பற்றி யோசிக்கவும் அறிவைக்கொடுத்த அந்த முகம் தெரியாத  “அனானி”க்கு நன்றி.








Wednesday, September 2, 2009

புதிய தலைமுறை -அதிஷா/யுவகிருஷ்ணா

அதிஷா “புதிய தலைமுறை” என்ற (என்ன”திரி”... வாரந்?) ஒரு பத்திரிக்கை அனுப்பி என் விமர்சனத்தைக் கேட்டிருந்தார்.ஞானி 400 ரூபாய் கேட்ட மாதிரி சந்தா கேட்பாரோ என்று பயந்தேன்.கேட்கவில்லை.இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை.விலையும் இல்லை.ஆசிரியர் இலாகா விவரங்களும் இல்லை.தனிச்சுற்றுக்கு மட்டும்.வெள்ளோட்டத்தில்(test marketing) இருக்கிறது.(?)



பாத்தவுடன் முதல் எண்ணம் இப்போதைய சூழ்நிலையில் புதுப் பத்திரிக்கையா?சாதாரணமாகவே புது டீவி சானல்,அரசியல் கட்சி, FM ரேடியோ ஆரம்பித்தாலே இருக்கிறது போதாதா என்ற எரிச்சல் வரும்.


ஏன் புதுப் பத்திரிக்கையா? வழக்கமான காரணங்கள்.இண்டர்னெட்/டீவி சேனல்கள்/செல் போன் பேச்சு,டிவீடி,வார அவுட்டிங்குகள்,சினிமாக்கள்,FM ரேடியோக்கள்,வாக்கிங்க்,ஜாக்கிங்......


ரொம்ப தைரியம் ஜாஸ்தி மாலனுக்கு.(மாலன் ஆசிரியர் என்று தெரிகிறது).இப்போது இருக்கும் ஆவியே சர்குலேஷனில் முக்கி முணகுகிறது.காரணம், அதன் மாற்றம் பாதிப்பேருக்குப் பிடிக்கவில்லை. தன் உருவத்தை இப்போது மாற்றிவிட்டது. குமுதத்தை பீட் செய்ய முயற்சிக்கிறது.


அடுத்த எண்ணம் மறுபடி மறுபடி படித்ததுதான் வரப்போகிறது. என்ன புதுசா சொல்லப்போறாங்க என்பது ?சுஜாதா சொன்னமாதிரி இவை “ஆனந்தவிகிடகுமுதகல்விகுங்குமம்”.எல்லாம் ”சேம்” ”சேம்”தான்.


முன்னமே திசைகள் என்று இளைஞசர்களை குறிவைத்து ஒரு பத்திரிக்கை வந்து (மாலன் ஆசிரியர்)பல வருட்ங்கள் முன் ஆரம்பித்து வெற்றிப் பெறவில்லை.


சரி பத்திரிக்கைக்கு வருவோம்.


எனக்கு வந்தது ரொம்ப பழசாக இருக்கிறதே.லேட்டாக அனுப்பப்பட்டது?

இனி போஸ்ட்மர்ட்டம்:

உருவம்:

இந்தியா டுடேயின் சாயல். கல்கியின் ”இளைஞ்சர் கல்கி” மாதிரி கொண்டு வந்தால் எப்படி ? அதேதான்.உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் வர்ணங்கள் ரொம்ப அழகாக உள்ளது.பேப்பரும் கந்தக நாற்றம் இல்லாமல் வழ வழ.அட்டையும் பள பள.எழுத்துருக்களும் நன்று.பெயருக்கேற்ப டார்கெட் ஆடியன்ஸ் அவர்கள்தானா?

உள்ளடக்கம்:

அந்த கால தேவர் படங்களில் முதல் சீனில் “வெற்றி! வெற்றி!” என்று சென்டிமெண்ட் வசனத்தோடு ஆரம்பிக்கும். இதிலும் முதல் பக்கம் “வெற்றி!வெற்றி! வெற்றி! வழக்கமாக தீபிகா பள்ளிகல் மற்றும் ஜோஸ்னா(ஸ்க்வாஷ்) இவர்களை தொடை தெரிய போட்டோ பேட்டிகளைப்(குமு/ஆவி) படித்துப் பழக்கம்.இதில் பாஸ்போர்ட் ஸ்சைதான்.அதனால் யாரோ மாதிரி இருக்கிறார்கள்.

பேட்டியின் நோக்கம் உண்மையாகவே புதிய தலைமுறைதான்.நல்லா இருக்கு.


அடுத்து என்ஜினியரிங் கவுன்சலிங் பற்றிக் கட்டுரை. கட்டுரையாளர்கள் நம்ம அதிஷா/யுவகிருஷ்ணா இரட்டையர்கள்(சுபா?).ஆனால் ரொம்ப பழசு.


சினிமா விமர்சனம்:வாமனன்.கதை எங்கிருந்து சுடப்பட்டது என்று குறிப்பு இதில் புதுசு.


அடுத்து சீமான் பேட்டி: தலைப்பு பார்த்தால் அரசியல் மாதிரி தெரிகிறது.ஆனால் கேள்விகள் சினிமா பற்றியது.இந்த பேட்டியில் பிழை ஒன்று. “ஓண்ணு தெரி........12 வயசுக்கு மேற்பட்ட” என்ற இடத்தில் 12 வயசுக்கு கிழ் என்று வர வேண்டும்.சரியா?சீமானின் வழக்கமான பொறி பறக்கும் அறிவுபூர்வமானப் பேச்சு.


இதில் ”இப்போதைய சினிமா”வை எடுத்துவிட்டு அந்த இடத்தில் “”இப்போதைய பத்திரிக்கைகள்” என்று மாலனிடம் கேட்டால் என்ன சொல்வார்.


பக்கம் 14 “கடவுள்..” கட்டுரை நல்லா இருக்கு.படமும் சூப்பர்.


பக்கம்17ல் இந்த சர்க்கரை நோய்ப் பற்றி கட்டுரை.இதுப் பற்றி வராத ஒரே பத்திரிக்கை கல்யாணப் பத்திரிக்கை மட்டும்தான்.வழக்கமான இப்போதெல்லாம் சர்க்கரை நோய் 30 வயதிலேயே “புதிய தலைமுறை”க்கு வந்துவிடும் காரணம்தான் கட்டுரைக்கு காரணம்.


பக்கம் 21 ல் பைக் வாங்குவது பற்றி. இது மாலன் ஸ்டைல் கட்டுரை.சுமார்.உமா ஷக்தி கவிதை.நகையும் சதையும் போல புத்தரும் ஈழமும் என்று ஆகிவிட்டது.கவிதை ஓகே.படம் நல்லா இருக்கு.நடுப்பக்கத்தில் வாரிசு அரசியல் இந்தியா மேப்பில்.”வாழ்க ஜனநாயகம்” இது எதற்கு?சுற்றுலா கட்டுரையும் நல்லா இருக்கு.புது இடம்.






















சினிமா கட்டுரை: விரிவான அலசல்.பேட்டி.கார்டூன் ஓகே.வைரமுத்துவின் வழக்கமான கலக்கல் எழுத்து.யூத்துகளை ரொம்ப கவர்ந்தவர்.”நிறைந்தவர்” என்ற சிறுக்தை ஓகே.வட்டார வழ்க்கில் எழுதி இருக்கலாமோ? நல்ல தாக்கம் இருந்திருக்கும்.இதிலும் இளைஞ்ன்.


பாலமுருகன் கட்டுரை ஒரு விழிப்புணர்ச்சி.மாணவரை விட கட்டுரையாளர் ரொம்ப கோபப்படுகிறார். ரிப்போட்டிங்கில் கட்டுரையாளர் விலகி நின்று எழுதவேண்டும் என்று ஒரு மாண்பு இருப்பதாக கேள்வி. ஜூவி கட்டுரைகளின் கடைசி பாராவில் இப்படித்தான் ஒரு புலம்பல புலம்பி விட்டு முடிப்பார்கள்.


சொலவது சரியா? யுவகிருஷ்ணா சொல்லுங்களேன்?


கடைசி மூன்று பக்கங்கள்: கணினியில் தமிழில் எழுத மென்பொருள் விவரங்கள்.உருப்படியானத் தகவல்கள்.அடுத்தப் பக்கம் “புத்தக அறிமுகம்” படிக்க வேண்டிய பகுதி.


முடித்தவுடன் ஏதோ ”மிஸ்ஸிங்” பீலிங்.


ஒரு டீசண்டான ”இளைஞசர் கல்கி” டைப்கொண்டுவரும் முயற்சியைப் பாராட்டலாம்.பத்திரிக்கை படிக்கும் கிட்டத்தட்ட ஒழிந்தே விட்ட இந்த தலைமுறையை மீட்டெடுக்கும் முயற்சி.


அன்றைக்கே கஷ்டபட்டு தொலைநோக்குப் பார்வையில் முழுமூச்சில் “திசைகள்” வளர்ந்திருந்தால் “புதிய தலைமுறை” எதிர்நோக்கப் போகும் சங்கடங்களை அலட்சியமாக கடந்திருக்கும்.


வாழ்த்துக்கள்!


படங்கள்: நன்றி: www.blog.sanjaigandhi.com


படிக்க: சிறுகதை

"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா