Saturday, December 27, 2008

சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை


 சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை                  

தொலைந்துப் போனால் அபசகுனம் என்று மனசு வாடி வதைந்து விடுவோம் என்று காசியில் ரயில் ஏறியதிலிருந்து அந்த புனித கங்கை ஜலம் அடைத்த சொம்புள்ள பையை தன் மடியில்தான் வைத்து இருந்தார் அப்பா. யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வீடு சேர்த்தார்.  

குடும்பத்தோடு போன காசி யாத்திரை எந்த வித இடையூறும் இல்லாமல் இனிதாக முடிந்தது. அப்பாவிற்கு பரம திருப்தி. இந்த காசி யாத்திரை எவ்வளவு நாள் கனவு. அதுவும் இந்த கங்கை புனித நீர் அடைத்த சொம்பு வாங்குவது. கடைசி தருணம் இதுதான் என்று எப்படி அறிந்து காசியில் போய் உயிர் விட முடியும்? இறந்தவுடன் கங்கையும் இங்கு நமக்காக வரப்போவதில்லை. கங்கையையே அடைத்து இங்கு எடுத்து வந்தாயிற்று. ஷாம்பு போல. இறந்ததும் பிள்ளைகள் உடைத்து தெளித்து விடுவார்கள். மோட்சம்தான். 


"நா பிராணன விட்டதும் ...நீங்க என்ன செய்யனனுன்ன " என்று ஆரம்பித்ததும் வீட்டில் எல்லோரும் காதை பொத்திக் கொள்வார்கள். உடனே நிறுத்தி விடுவார். இந்த சொம்பை எப்படி உடைக்க வேண்டும்,ஜலத்தை எப்படி தெளிக்க வேண்டும் என்னென்ன மந்திரங்கள் எப்படி சொல்ல வேண்டும் என்று அக்கு வேறு ஆணி வேராக சொல்ல ஒவ்வொறு தடவையும் முயற்சிப்பார். இந்த பேச்சை எடுத்தாலே,முழுதாக முடிக்க விட மாட்டார்கள் குடும்ப உறுப்பினர்கள். அப்பாவின் சாவு பேச்சு காதுக்கு அமங்கலம். அபத்தம். 

பூஜை ரூம் ஷெல்பில் தன் கண்ணில் தினமும் படுகிற மாதிரி வைத்தார். சொம்பு ஒரு வாழ் நாள் சாதனை போல் அதை தினமும் பார்ப்பார். ஒரு நாள் மொட்டை மாடியில் எல்லோரும் கூடியிருந்தார்கள். போன வாரம் இறந்துப் போன தன் நண்பன் சாவைப் பற்றி பேச ஆரம்பித்தார். 

"அது கல்யாண சாவு.என்ன கூட்டம். பொண்ணு பையன் எல்லோரும் அமெரிக்கா,ஆஸ்திரேலியான்னு வந்துட்டாங்க. பேரன் பேத்தின்னு வீடு நெறைய மனுஷா. பாடிய நடு ஹால்ல வைச்சு, அந்த கங்க சொம்ப நேக்க பிசிறு இல்லாம உடைச்சு, தலையில் ஆரம்பிச்சு ஒவ்வொறு இடமா மந்தரம் சொல்லி பாந்தமா தெளிச்சு கால்ல வந்து முடிச்சாங்க. ஒரு சொட்டுக்கூட மிச்சம் இல்ல. அவர் மேல பட்டதும் அவரு கண் திறந்து சிலித்துக்கிட்ட போல ஒரு பிரமை எல்லார் மனசுலேயும். கண் கொள்ளாக் காட்சி.இதே மாதிரித்தான் எனக்கும் நீங்க பண்ணனும் என்று கண் மூடி திறப்பத்தற்க்குள் "டக்" என்று சொல்லி முடித்தார்.குடும்ப உறுப்பினர்கள் திகைத்துப்போய் அசடு வழிந்தார்கள்.

அந்த மொட்டை மாடி பேச்சு முடிந்த அடுத்த வருடத்தில் அப்பா இறந்து போனார்.

இறந்த அன்று அந்த சொம்பு காண வில்லை.வழக்கமாக இருக்கும் இடத்திலும் இல்லை.வீட்டில் ஒரு இடம் இல்லாமல் தேடி ஆகிவிட்டது.எங்க போச்சு? "என்ன இவ்வளவு நேரமா தேடறிங்க " ஹாலில் படுத்திருந்த அப்பாவின் பிணம் கேட்பது போல் ஒரு பிரமை எல்லோருக்கும் இருந்துக்கொண்டேயிருந்தது.

பிணத்தை நடு ஹாலில் வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் தேடுவது.கடந்த ஒரு ஆறு மாதமாகவே அம்மாவின் கண்ணில் பட்டாற்போல் தெரியவில்லை. ஏன் கண்ணில் படவில்லை. அம்மாவுக்கு பிடிபடவில்லை.கடைசியில் கிடைக்கவே இல்லை. 

கங்கை சொம்பு தொலைந்த துக்கம் யாருக்கும் தாங்க முடியவில்லை.அதுவும் அம்மாவிற்கு எது சொல்லியும் மனதை சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லோரிடையும் சொல்லி சொல்லி மாளாமல் புலம்பினாள். அவர் நண்பர் சாவு போலவே வீடு கொள்ளாமல் நண்பர்கள்,உறவினர்கள் , மகன்கள்,மகள்கள்,.பேரன் பேத்தின்னு வீடு நெறைய கூட்டம். கங்கை ஜல சொம்புதான் இல்லை. இல்லாதது ஒரு பெரிய குறைதான். மாற்று சொம்பும் எங்கும் கிடைக்கவில்லை. கடைசியில் கிணற்று நீர்தான். எல்லாம் முடிந்து பிணத்தை கடைசியில் எடுக்கும்போது அம்மா பீரிட்டு விட்டாள். குறை வைத்துவிட்டோமே என்று. சமாதானம் ஆக ரொம்ப நாள் ஆயிற்று.

பதினைந்து நாள் கழித்து துக்கம் கேட்க குடும்ப நண்பர் பேங்க் மேனேஜர் விஷ்ணு பிரசாத் வந்திருந்தார்.அப்பாவுடன் நெருங்கிப் பழகியவர். அப்பா இறக்கும் போது வெளியூரில் இருந்தார். அம்மா அவரிடமும் கங்கை ஜல சொம்பைப் பற்றிச்சொல்லி ஒரு பாட்டம் அழுதாள்.

”பேங்க் லாக்கர்ல பாத்தீங்களா?” பேங்க் மேனேஜர் கேட்டார்.

“லாக்கர்லயா? இல்லையே...உங்களுக்கு எப்படித் தெரியும்?” அம்மா

“இல்ல...” மேனேஜர் சற்று தயங்கினார்.

“சொல்லுங்க”

அப்பா சொன்னதை அப்படியே சொன்னார்.


“நானும் அந்த கங்கை சொம்ப ஒரு விவேகத்தோடுதான் வாங்கினேன்.ஆனா தினமும் அத பாக்கும் போது அடி வயத்துல “மரண பயம்” வந்து நாளாக நாளாக சங்கடப்பட்டேன்.ராத்திரி தூக்கம் போயிடுச்சு. எதிர்பாத்ததவிட சிக்கிரமே பிராணன் போய்டும்னு ஒரு பீலிங் வந்து வதைக்க ஆரம்பிச்சிது. விவேகம் போயிடுச்சு. வீட்ல இருந்தா நெலம மோசம் ஆயிடும்னுதான் இத லாக்கர்ல வைக்கறேன் விஷ்ணு. யாருக்கும் தெரிய வேணாம்.மனசு நிம்மதிதான் முக்கியம்.பின்னாடி பாத்துக்கலாம்”

முற்றும்


 

14 comments:

  1. நிஜம் போல மனதை வலிக்கிறது ரவி...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. மனசு கனக்கிறது. விவேகத்தை பயம் வென்றுவிட்டதோ?

    ReplyDelete
  3. ச்சோ.. அருமையா இருக்குங்க கதை..

    ReplyDelete
  4. ரவி ஆதித்யா,

    சார் உங்க கவிதை
    நிஜம் போல இருக்கிறது,
    ரவி சார்.

    அன்புடன் உன் நன்பன்,

    ReplyDelete
  5. அருமையான கதை

    ReplyDelete
  6. திரு ரவி ஆதித்யா...


    உங்கள் கதை அருமை. இது கற்பனை கதை என்பதில் எனக்கு சந்தேகமே..

    காசி சொம்புடன் நமது வீட்டில் இருக்கும் பெரியவர்களை காட்டிலும்..

    காசி நகரத்தில் இறந்தால் மோக்ஷம் என்ற சித்தாந்தத்தில்.. 70 வயதுக்கு மேல் அங்கு சென்று இறப்பை எதிர் நோக்கி தினம் தினம் வாழ்கிறார்கள்.
    அவர்களின் மன நிலையை சிந்தித்து பாருங்கள்..

    அவர்களில் சிலரை நான் சந்தித்திருக்கிறேன்.

    விரைவில் இதை பதிவாக்க உள்ளேன்.
    அதில் நான் குறிப்பிட்ட வரிகள்..

    ".....
    காசி ஓர் இறப்பு நகரம்.
    இறந்த உடலுக்கு ஆன்ம மோக்ஷம்.
    இருக்கின்ற உடலுக்கு ஆணவ மோக்ஷம்.
    ...."
    காசி இறப்பை பதிவு செய்யும்

    ஒளிபட காட்சியின் சுட்டி இங்கே...

    ReplyDelete
  7. அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் ரவி. எத்தனையோ குடும்பத்துக் கதைகள் இதில் அடக்கம்.

    காசிச் சொம்பைப் பார்க்கும்போது நினைவு வருவது அந்த அப்பா சொன்னதுதான்.
    எங்கள் அப்பா கங்கையைன் மேல் அதீதமான பிரேமை வைத்திருந்தார்,.

    சொம்பைத் தேய்ட்த்து,அதற்குச் சந்தன்னம் குங்குமம் வைத்து ,பயமில்லாமலயே ஒரே நாள் உடல் நிலைசரியில்லாமல் பகவானிடம் போய்ச் சேர்ந்தார்.
    மிக்க நன்றி. எனக்கும் எங்கள் பெற்றோரைப் பற்ற்றிக் குறிக்க ஒரு இடம் கொடுத்ததற்கு.

    ReplyDelete
  8. //விவேகத்தை பயம் வென்றுவிட்டதோ?//

    வென்றுவிட்டதோ ...

    (ரிப்பீட்டி போரடிக்குது :)))

    ReplyDelete
  9. அன்புடன் அருணா,நானானி,
    முத்துலெட்சுமி கயல் விழி, சின்ன அம்மிணி,ஸ்வாமி ஓம்கார்,வல்லி
    சிம்ஹன்,சதங்கா(Sathanga),
    A N A N T H E N

    எல்லோருக்கும் நன்றி!நன்றி!நன்றி!

    வல்லி சிம்ஹன்:
    எங்கள் வீட்டில் கங்கைச்
    சொம்புத் தண்ணிரை கிணற்றில்கொட்டினோம்.ஏன்?துருபிடித்து ஒரு மாதிரியாகி விட்டது.தாத்தா வாங்கியது 1960.இறந்தது 1995.

    ஸ்வாமிஜி
    நீங்கள் சொல்லும் காட்சியை பல தடவை பல ஊடகங்களிலும்/நேரிலும்
    பார்த்துள்ளேன்.
    நன்றி.

    ReplyDelete
  10. :) நல்லா இருக்கு.

    மரண பயத்தை தொலைப்பது என்பது சாமான்ய விஷயமல்ல.

    சில கேள்விகள் (அதற்கு நானே சொல்லிக்கொண்ட பதில்கள் )

    1. பாங்க் மானேஜர், குடும்ப நண்பர் என்றால் சாவிற்கு ஏன் வராமற் போனார்? (சரி வெளியூர் போயிருந்தார் போலும்)

    2. இத்தனை நாளாய் நொடிக்கு நூறு முறை தன் பிரியாவிடையைப் பற்றி குறிப்பிட்டவர், விஷ்ணுவிடம் சொம்பு விஷயதை சொன்னவர், ஏன் மனைவிடமோ, பிள்ளைகளிடமோ கூறவில்லை ? (அது தான் விதி என்று கதை கூறாமல் கூறுகிறது)

    சிறுகதை பூடகமாய் ஒன்றே ஒன்றை விளக்குகிறது.

    யார்யார்க்கு எப்படிப்பட்ட.....

    இன்னொன்றும் இலைமறைக் காய் மறைவாய்...

    எத்தனை தத்துவம் பேசினாலும், இறுதியில் க்ஷண நேரமாயினும் மரண பயம் என்பது ஆட்கொண்டுவிடுகிறது. சிலரே விதிவிலக்கு


    கதையும் முடிவும் நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. Oh God....This one did not sound like a story but it was as if reading a real life situation.

    You have handled a sensitive story in a delicate manner....I wish the father's last wish was fulfilled, though....

    Cheers...Viji

    ReplyDelete
  12. Viji,

    Thanks a lot for honouring my invite and wrote your honest review. I normally avoid melodrama/preaching/injected humuor/artificiality. I combine 20%real + 80% fiction to compose a story.
    Please visit now and then
    throw your comments so that I can improve on.
    Thanks once again!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!