Monday, February 14, 2011

யுத்தம் செய் -விமர்சனம்

பல சந்தர்ப்பங்களில் நம் முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்க திராணி இல்லாமல்”இவனுங்களை எல்லாம் நிக்க வச்சு சுடனும்” என்று மனதிற்குள்ளேயே பல்லைக் கடித்துக்கொண்டு நிழல் யுத்தம் நடத்தி வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.
(அமைதியாக இருக்கும் இந்த இடத்தை அடுத்த சில நிமிடத்தில் ஜேஜேவென கூட்டம் காட்டுவது அருமை)

”யுத்தம் செய்” படத்தில் ”ஒரு குரூப்” தனக்கு நேர்ந்த அநியாயத்தைக்கண்டு மனம் திரிந்து பின் அதற்கு எதிராக ஒரு அர்ஜெண்ட் ரெளத்திரம் பழகி  பின்னால் ஸ்கெட்ச் போட்டு கொரில்லா யுத்தம் செய்கிறார்கள்.யுத்தம் செய்யும் போது  யாரிடமும் மாட்டாதபடி SOP,Six Sigma,Kaizen, why why analysis கடைப்பிடித்து யுத்ததில் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

ஏற்கனவே இது மாதிரி ஒரு தாத்தாவும் (இந்தியன்),இன்னொரு தாத்தவும்(ஒரு கைதியின் டைரி) மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் கதாநாயகர்கள் தங்கள் நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கினார்கள்.

என்ன அநியாயம்? காமவெறி பிடித்த வக்கிர(voyeuristic) மூத்த குடிமகன்கள் நேரலை செக்ஸ் காட்சிகளுக்காக நகரத்தில் பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.கொலை செய்யப்படுகிறார்கள்.இதை ரெளடிகளும், தீய ஆட்டோ டிரைவர்களும்,போலீஸ் கருப்பு ஆடுகளும் கூட்டணிப் போட்டு செய்கிறார்கள்.பணம் புரளுகிறது.

சிபிஐ சிஐடி அதிகாரியான சேரனின் தங்கையும் கடத்தப்படுகிறார். தன் சொந்த வேலையாகவும் அரசு வேலையாகவும் இதை எடுத்துக்கொண்டு சேரன்
துஷ்டர்களை கண்டுப்பிடிப்பதுதான்  கதை.இவரும் இந்த வளையத்திற்குள் நல்லவன் கம் கெட்டவன் என பயணிக்கிறார்.

டைரக்டர் மிஷ்கின் கதையைச் சுவராசியமாகச் சொல்லி இருக்கிறார்.படம் கிரைம் த்ரில்லர் என்றாலும் ஒரு horror படத்திற்குண்டான திகிலும் கலந்திருக்கிறது.பாராட்ட வேண்டிய விஷயம்.பல காட்சிகள் அசத்துகிறது.
முக்கியமாக கடைசிக் காட்சிகள் அருமை.

ஆபாசம் காட்ட வாய்ப்பு இருந்தும் காட்டாமல் விட்டதற்கு பாராட்டியே ஆக வேண்டும்.

மிஷ்கினின் காட்சி ஊடக மொழி வித்தியாசமாக இருக்கும்.இதன் குறிகோள் என்ன?காட்சியின் ஆழமும் உயிர்துடிப்பும்  பார்வையாளனை ஒன்ற வைத்து வசனத்திற்கு வேலை இல்லாமல் காட்சியை நகர்த்துவதுதான். காட்சியின் ஒவ்வொரு துளியும் பார்வையாளனைப் பாதிக்கவேண்டும்.


இந்தப் படத்தில் இவரின்  காமிரா  மொழி சற்று ஓவராகி ஓட்டம் மெதுவாகிறது.கிரைம் த்ரில்லார் படத்துக்கு வேண்டிய விறுவிறுப்பு முன் பாதியில் இல்லை. பஸ் பயணத்தில் அங்குங்கு சாப்பாட்டுக்கு நிறுத்துவது போல் இவர் கேமராவை காட்சிகளில் காமிராவை நிறுத்தி நிறுத்தி ”பிலிம்”
காட்டுகிறார்.காட்சியின் ஆழம்தான்(நடுநிசியில் அசோக் நகர் காவல் நிலையம் ) காமிராவின் போக்கிலேயே உறைக்கிறதே. இப்படி நிறுத்துவது படத்திற்கு என்ன மதிப்பு கூட்டுகிறது என்று தெரியவில்லை.

(தன் ரூமில் இறைந்துக்கிடக்கும் புத்தகங்களில் நடுவில் உட்கார்ந்திருக்கும் காட்சி,எட்டுகால் பூச்சி காட்சி,மற்றும் வேறுஒரு காட்சி, காட்சியின் தீவிரத்தைக் காட்டாமல் வருடாந்திர காலண்டர் பக்கங்களுக்கான "photoshoot" போல் படுகிறது)

அதற்குப்பதிலாக முன்பாதியின் கதையை பார்வையாளர்கள் புரிந்துக்கொள்ளும்படி புத்திசாலித்தனமாக நகர்த்தி இருக்கலாம்.பின் பாதி சுறுசுறு விறுவிறு.முடிச்சு அவிழ்ந்து மர்மம் விலகும் காட்சிகள் கலக்கல்.

படம் எந்த ஒரு தனித்தன்மை இல்லாமல் ஒரு கலவையாக இருக்கிறது.அடிக்கடி யதார்த்தைவிட்டு  தடம்புரண்டு விலகி மீண்டும் சேருகிறது.காமிரா மொழி?இதே மாதிரி கிரைம் த்ரில்லர் ”ஈரம்” படம் எந்தவித பந்தா இல்லாமல் அதில் பார்வையாளர்கள் ஒன்றி சுவராசியமாக காட்சிகள் ஓடியது.இது ஏன் அப்படி இல்லை?

இம்முறை கையோடு டார்ச் லைட் எடுத்துக்கொண்டுபோய் அடித்துப்பார்த்ததில் குறியீடு ஒன்றும் தெரியவில்லை.

 நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

பாத்திரங்களுக்குத் தேர்வான எல்லா நடிகர்களும் அருமை. இசக்கியாக வரும் அசோக் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலக்குகிறார்.ஜெயபிரகாஷ்,செல்வா,
லட்சுமிராமகிருஷ்ணன்,மகேந்திரன்,வில்லன்கள், போலீஸ் ஆபிசர்கள் அருமை.

சேரனும் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.மிடுக்குக் காட்ட வேண்டிய இடங்களில் ஏன் காட்டமாட்டேன் என்கிறார்.குழப்பமாக இருக்கிறது.

சேரனின் உதவியாளர்களாக வரும் திபா ஷா,ஷங்கர் இருவரும்தான் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவலில் வரும் பரத்,சுசீலா கணக்காக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கிருஷ்ண குமார்.

இசை கே என்னும் கிருஷ்ண குமார்.முதல் படம். அதுவும்
கிரைம் த்ரில்லர்.சவாலான வேலை.நன்றாகச் செய்திருக்கிறார். வித்தியாசமாக இருக்கிறது.வாழ்த்துக்கள். ஆனால் சில இடங்களில் காட்சியோடு ஒட்டாமல் அமெட்சூர் நெடி அடிக்கிறது.முதல் காட்சியில் ஏன் வயலினை இந்த உரசு உரசுகிறார்.இது என்ன விதத்தில் இந்தக் காட்சியின் ஆழத்தைக் காட்டுகிறது என்று புரியவில்லை.அதே வயலின் அட்டைப்பெட்டிக் காட்சிகளில் பொருந்தி அசத்துகிறது.

சேரன் பாலத்தில் போடும் சண்டை, சண்டையா? காமெடியா?யதார்த்தமாகவே இல்லையே.ஜப்பான் படத்தில் இப்படித்தான் போடுவார்களோ?இந்தக் காட்சியின் பின்னணி ராஜாவின் இசையின் இருந்து சுடப்பட்டது?

சேரன் தன் தொலைந்துப் போன தங்கையின் போட்டோவைக்காட்டி வருத்தத்தோடு ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் பதில் சொல்லாமல் நக்கல் அடிப்பது யதார்த்தமாகவே இல்லையே.இது மாதிரி சில இடங்கள் யதார்த்தைவிட்டு விலகி ஒட்டாமல் நிற்கிறது.

குற்றம் குறைகள் இருந்தாலும் சுவராசியமான ஒரு கிரைம் த்ரில்லர்.மிஷ்கின் தன்னுடைய உலகத்தரமான காமெரா மொழியை காட்டாமல் அடுத்தப் படத்தில் ”காட்ட” வேண்டும்.

8 comments:

  1. //இம்முறை கையோடு டார்ச் லைட் எடுத்துக்கொண்டுபோய் அடித்துப்பார்த்ததில் குறியீடு ஒன்றும் தெரியவில்லை.//
    அதெல்லாம் நந்தலாலாவிலேயே ஏறக்கட்டிட்டார்...

    //சேரன் பாலத்தில் போடும் சண்டை, சண்டையா? காமெடியா?யதார்த்தமாகவே இல்லையே//
    இது 'அஞ்சாதே' படத்தில் நரேன் ஆஸ்பத்திரியில் போடும் சண்டையின் பாதிப்பே. அப்படத்தில் அந்த சீன் கலக்கலாக இருக்கும். அதேபோல் வைத்தது...(மஞ்சப்புடவை குத்துப்பாட்டு உட்பட...)

    மிஷ்கின் இப்படத்தில் கொஞ்சம் அதிகமாகவே கமர்ஷியல் விஷயங்களைக் கையாள ஆரம்பித்திருக்கிறார். இரண்டாம்பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் முதல் க்ளைமேக்ஸ் வரை அதீத நாடகத்தனம். ஆனால், அதுதான் படத்தின் கல்லாப்பெட்டியை நிரப்புவதாகத் தகவல்.
    இதில் வரும் விஷயம் ஏற்கெனவே 'அலிபாபா' படத்தில் வந்ததுதான். அந்தப்படம் நன்றாகவே இருக்கும். இன்ட்ரெஸ்டிங்க் ட்விஸ்ட்ஸ் நிறைந்தது. சரியான விளம்பரமில்லாததால் கவனிப்பிழந்து போனது. (இப்பவும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பினால் பார்க்கத் தவறாதீர்கள்.)
    கிட்டத்தட்ட இதே தீமில்தான் 'ஈசன்' படமும் வந்த வேகத்தில் சென்றது.
    இசையமைப்பாளர் படம் தேடிப் போட்டதற்கு நன்றி...
    //இருவரும்தான் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவலில் வரும் பரத்,சுசீலா கணக்காக இருக்கிறார்கள்//
    திபாஷா டிஷர்ட் போட்டு வரலையே...அப்படியே வந்தாலும், அதில் வாசகங்கள் பார்த்த ஞாபகமில்லை :P

    ReplyDelete
  2. ரொம்ப வித்யாசமான விமர்சனம் இது தான்...ஒரு சாரார் இதை ப்ளூ பிலிம் ரேஞ்சிலும்...உன்னோரு சாரார் இதை மணிமகுடத்தில் வச்சு போற்றி பாதுக்கக்கும் ரேஞ்சிலும் தான் படிச்சேன்...நீங்க இன்னும் ஆழமாய் review பண்ணிருக்கிரிங்க...நன்றி...

    ReplyDelete
  3. இது ஒரு நடுநிலையான சரியான விமர்சனமாக இருக்கிறது வாழ்த்துக்கள் :)
    http://ethamil.blogspot.com/2011/02/blog-post_15.html

    ReplyDelete
  4. நன்றி sakthistudycentre-கருன்
    நன்றி அநன்யா மஹாதேவன்

    ReplyDelete
  5. //அதேபோல் வைத்தது...//
    மத்த சீன் எல்லாம் யதார்த்தம் தளும்புது.இது மட்டும்?

    //இரண்டாம்பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் முதல் க்ளைமேக்ஸ் வரை அதீத நாடகத்தனம். ஆனால், அதுதான் படத்தின் கல்லாப்பெட்டியை நிரப்புவதாகத் தகவல்.//

    பார்வை வேறுபடுகிறது.நீங்கள் இதன் அசல்களைப் பார்த்துவிட்டது காரணம்.சினிமாவே வியாபாரம்தான்.
    கல்லக்கட்டு! லாஜிக்க ஏறக்கட்டு!

    நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  6. நன்றி ஆனந்தி.

    நன்றி சுதர்ஷன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!