Wednesday, February 24, 2010

பத்து ரூபாய் நோட்டில் சுதா

சிண்டிகேட் வங்கி வாசலில் மோட்டர் பைக்கை நிறுத்தி சைட் ஸ்டாண்ட் போட்டான் சிவகுரு.ஸ்டைலாக சாய்ந்து நின்ற வண்டியைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான்.

சுதா தன்னை அணைத்த சூட்டை இன்னமும் உணர்ந்துக்கொண்டிருந்தான்.முதன் முறையாக சுதா பில்லியனில் உட்கார்ந்து வந்தாள். செல்லமாக தன் இடுப்பை அணைத்தபடி வந்து அவள் ஆபிசில் இறங்கிக்கொண்டாள்.

மனது முழுவதும் நிரம்பிய சந்தோஷத்தை வலுகட்டயமாக தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் திருப்பிக் குறைத்து வேகமாக வங்கிக்குள் நுழைந்தான்.தோராயமாக ஐந்தாயிரம் ரூபாய் எடுக்க வேண்டும்.மீண்டும் புன்னகைத்தவாறே கேஷ் கவுண்டரை நெருங்கினான்.

தன் வருங்கால மனைவி சுதாவிற்கு மோதிரம் வாங்கத்தான் இவ்வளவு பணம்.சுதாவுக்கு சர்ப்ரைஸ் பரிசு. காதல் வழிய வழிய அவள் வெண்டை பிஞ்சு விரலில் அணியப் போகிறான்.அவளும் ஏதாவது அணிவாள்.அணிந்தவுடன் இருவருக்கும் ஒரு கல்யாணக் களை வரும்.

கவுண்டரில் பணத்தை வாங்கி எண்ணினான். பத்து ரூபாய்களை எண்ணும்போது கடைசி நோட்டில் ஏதோ எழுதி இருந்தது. சற்று உற்றுப் பார்த்தான்.Rajesh  Sudhaa என்று ஆங்கிலத்தில் எழுதி இருவருக்கும் இடையே மன்மத அம்பு படம் போட்டிருந்தது.காதல்! இது என் சுதாவா?பெயரின் கடைசியில் ரெண்டு அதே நியூமாராலஜி “aa”.முகம் சுருங்கியது. ஏசியிலும் மெதுவாக வியர்த்தது.விறுவிறுவென வெளியே வந்தான்.


ராஜேஷ் என்பவன் இந்த பாங்கில் வேலை செய்கிறானா?யார் இவன்?.சுதாவும் இந்த வங்கியின் சுற்று வட்டாரத்தில்தான் வீடு.சட்டென்று ஞாபகத்தில் வந்தது.அவள் கொடுக்கப்போகும்  இன்விடேஷன் அட்ரஸ் லிஸ்டில் இந்தப் பெயரைப் பார்த்திருக்கிறான்.திருமணத்திற்கு முன் காதலா?அவள் அணைத்த இடம் தகித்தது.அவள் மோதிர விரல் குஷ்டமாகியது.

ராஜேஷ்-சுதா பெயர் பொருந்தம் பொருந்தி வருகிறதே.ஆனால் தன் பெயர்தான் பொருத்தம் சரியாக இல்லை என்று அவளிடம் ஒரு முறை வருத்தப்பட்டிருக்கிறான்.சொல்லும்போது அவளும் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

திருமணத்திற்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கிறது.அவளிடம் கேட்டுவிடலாமா?

அவளுக்கு போன் செய்தான்.”சொல்லு சிவா..” பதில் பேசாமல் கட் செய்தான்.மறுபடியும் செய்தான”ம்ம்ம்..சுதா ஹியர்..சொல்லு சிவா.” மீண்டும் கட் செய்தான்.
அமுக்கமானான்.எனக்கே எனக்கு என்ற சுதா இப்படிப்பட்டவளா?மனதிற்குள் புழுங்கினான்.

பைக் பிடிக்கவில்லை. பல கிலோ மீட்டர் நடந்தான்.ஏதோ ஒரு நகைக் கடைக்குப்போனான்.ஏனோதானோவென்று எதையோ வாங்கினான்.இரண்டு நாள் கழித்து அவள் விரலில் சொருகினான். அடுத்த சில நாட்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் பூச்சொரிந்து ஆசிர்வதிக்க சுதாவைக் கைப்பிடித்தான்.திருமணம் நடந்தது.

பத்து ரூபாய் நோட்டைச் சுமந்தபடியே சிவகுருவுக்குப் பத்து வருடம் ஓடி விட்டது. தாம்பதியத்தில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் பிறந்தும் ஒன்றும் மாறவில்லை.சுதாவாலும் எதுவும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

“சுதா...உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு. இன் பாக்ட் ஐ லவ் யூ சுதா!’

ராஜேஷ் புரிந்த புன்னகையும் கண்களில் தேக்கி இருந்த காதலும் அன்று ரொம்ப களையாகக் காட்டியது அவனை.அடுத்த தெருவாசிதான் ”ராஜேஷ்.இஸ் எ வெரி நைஸ் பாய்” என்று தோழி அர்ச்சனா அடிக்கடிச் சொல்லுவாள்.

சுதா ரொம்ப கட்டுபடுத்திக்கொண்டு“சாரி...! ராஜேஷ்.இது ஒத்து வராது.நான் எங்க வீடல பாக்கற பையனத்தான் மேரேஜ் பண்ணுவேன்..” சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து அவனை அன்றே மறந்தாள்.

ராஜேஷ் இன்றும் நினைவில் வந்து போனான்.


                                       முற்றும்




12 comments:

  1. அந்தக் கவிதையை போன வாரம் படிச்சதிலே இருந்து, ஒரு கதை வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டே இருந்தேன். :) புனைவு நன்றாக இருக்குங்க.

    ReplyDelete
  2. அடேங்கப்பா!--வை ஏன் எடுத்தீங்க.

    ReplyDelete
  3. Vidhoosh said...

    //அந்தக் கவிதையை போன வாரம் படிச்சதிலே இருந்து, ஒரு கதை வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டே இருந்தேன். :) புனைவு நன்றாக இருக்குங்க//

    ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  4. Vidhoosh said...

    //அடேங்கப்பா!--வை ஏன் எடுத்தீங்க//

    புரியல?

    ReplyDelete
  5. நன்றி டிவிஆர் சார்.

    ReplyDelete
  6. நல்ல கதைங்க. ஆனா இந்த கதைய விட அந்த கவிதை ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.

    ReplyDelete
  7. க.இராமசாமி said...

    //நல்ல கதைங்க. ஆனா இந்த கதைய விட அந்த கவிதை ரொம்ப நல்லா இருந்துச்சுங்க//

    நன்றி இராமசாமி.

    ReplyDelete
  8. கதை நல்லா இருந்தது சார்...
    முதல் கவிதையைப் படிக்காவிடில் இக்கதை மிகப் பிடித்துப் போயிருக்கலாம்...

    ReplyDelete
  9. தமிழ்ப்பறவை said...

    //கதை நல்லா இருந்தது சார்...
    முதல் கவிதையைப் படிக்காவிடில் இக்கதை மிகப் பிடித்துப் போயிருக்கலாம்...//

    நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!