Monday, July 26, 2010

குலதெய்வம் - திக் திக் திகில்கதை

ஈஸ்வரியின் காதல் கல்யாணம் வெகு விமர்சையாக  நடந்தது.குறை எதுவும் யாருக்கும் இல்லை. இவள் குலதெய்வத்திற்க்குதான் குறை ஏற்பட்டு விடுகிறது.

கல்யாணம் என்றாலே அடுத்தது சாவு என்று மாற்றிவிட்டது குல தெய்வம்.

நினைத்தவுடன் குலை நடுங்கியது ஈஸ்வரியின் அம்மா சீதாவுக்கு.

இதற்கு முன் நடந்த கல்யாணங்களின் தொடர்ச்சியாக சீதா தன் கணவனை இழந்தது.முதல் பெண்ணின் கணவன் விபத்தில் இறந்தது.அவளின் இரண்டாவது கணவனும் மகா கோரமாக இறந்தது.இரண்டாவது பையனுக்கு பிறந்த குழந்தைகள் இறந்தது. இரண்டாவது பெண்ணின் தொட்ட காரியங்கள் எல்லாம் தடங்கல்.

திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தப்போது மிகப் பெரிய விபரீதம் நடக்கும். இந்த கல்யாணம் வேண்டாம் என்று ஜோசியர் சொன்னார்.சீதாவும் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.ஈஸ்வரிதான் பிடிவாதமாக நின்றாள். காதலித்தவனயே கைப்பிடித்தாள்.

”மாப்பிள.... என் பொண்ணு கொடுத்து வச்சவ..ரெண்டு பேரும் சீரும் சிறப்புமும எந்த குறையும் இல்லாம வாழனும்”

”எல்லா நல்லா நடக்கும்ங்க....கடவுளோட ஆசிர்வாதம் இருக்கு..”

”நம்ம தெய்வம்தான் குத்திக் கொல்லுதே.கல்யாணம் ஆன கையோட
பிரார்த்தனய முடிக்கனும். அதுவும் ஈஸ்வரியோட முதல் தீட்டு முடிஞ்ச பிறகு ஏழாவது நாள்ல முடிக்கனும்”

”எந்த ஊர்ல இருக்கு உங்க குல தெய்வம்?”

”மாயவரத்துக்கிட்ட ஏதோ ஒரு குக்கிராமம்.பேரு பட்டினம்காப்பு. அங்க அரிசாமின்னு ஒரு ஆம்பள சாமி... ஆனா..” சீதா கேவினாள்.

“என்னம்மா  ஆச்சு...” ஈஸ்வரி அம்மாவின் கையை ஆறுதலாகப் பிடித்தாள்.

”எங்களுக்கு வந்து வாச்ச சாபம் மாப்பிள.பிரார்த்தனைய வீர்யமா முடிச்சாலும் அவல்ங்கள் நடக்கும்.பிரார்த்தனைய. ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்..! போ..சனியனேன்னு விடரதுக்கும் பயமா இருக்கு.யாரோ நடுவுல ஏதோ தப்புப் பண்ணிட்டாங்க.”

”பிராத்தனைய முடிச்சுட்டு  அந்த ஊர் பெரியவங்க கிட்ட கேட்டுப் பார்த்து முடிவு எடுப்போம்..”மகாதேவன் ஆறுதல் சொன்னான்

“முக்கியமா ஈஸ்வரியோட முதல் தீட்டு முடிஞ்ச பிறகு ஏழாவது நாள்ல.....”
 
மாமியார் சாமி விவரங்கள அடங்கிய பெட்டியை கொடுத்தாள்.வாங்கும் போது திகிலாகத்தான் இருந்தது மகாதேவனுக்கு.இடது கையால் வேறு வாங்கினோமே.

உள்ளே துரு ஏறின தகட்டில் முட்டிக்கால் போட்டபடி நிற்கும் சாமிதான் அரிசாமி பட்டினம்காப்பு. அது தவிர உளுத்துப் போன காகிதங்களும் அதில் மந்தரங்களும் அப்புறம் சில ருத்திராட்ச மாலைகளும்.

பட்டினம்காப்பு பூசாரிக்கு லெட்டர் போட்டுப் பத்து நாள் ஆகியும் பதில் இல்லை.ஆரம்பமே அபசகுனமாக மகாவுக்கும் ஈஸ்வரிக்கும் கவலை வாட்டியது. சீதா சுரத்தே இல்லாமல் வீட்டிற்க்குள் நடமாடிக்கொண்டிருந்தாள்.

இருவரும்  கிளம்பி போய்  அங்கேயே பூசாரியை பார்த்துப் பிராத்தனையை  நிறைவேற்றுவதாக  கிளம்பினார்கள்.

அங்கு(மாயவரம்) பெரிய ஹோட்டலில் ரூம் எடுத்தார்கள்.குளிக்கப்போன அடுத்த நிமிடம் கெய்சரில் ஷாக் அடிப்பதாக மகாதேவன் கவலையோடு வெளியே வந்தான்.ஈஸ்வரி பதறிப் போய் உட்கார்ந்துவிட்டாள்.

பச்சைத் தண்ணீரில் குளித்து முடித்தார்கள்.பதறுவாள் என்று அம்மாவிடம் சொல்லவில்லை.

"நம்ம பிராத்தனைய முடிப்போம் முதல்ல...யாரு சாமின்னு அப்புறம் பாக்கலாம் .” பயத்துடன் சொன்னாள் ஈஸ்வரி.மகா தலையாட்டினான்.

சாப்பிட்டு விட்டு அந்த குக்கிராமத்தைப் பற்றி ரூம் பாயிடம் விசாரித்தார்கள்.

”அந்த ஊரா.....? அரிசாமியா? டிராவல்ஸ் அரேஞ் பண்ணித் தரேன். ஆனா எல்லைல விட்டுட்டு போய்டுவான் டிரைவர். உள்ள வரமாட்டான்..!  சரியா...?”

இருவரும் சுரத்தில்லாமல் தலையாட்டினார்கள்.கேட்காமலே இருந்திருக்கலாமோ?

”நீங்க சொல்ற பூசாரி எங்க சொந்தகாரர்தான்.இருபது நாளுக்கு முன்னாடி  இறந்துட்டாரே? ”கார் டிரைவர் வண்டியை ஓட்டியபடி பேசினான்.

கேட்டதும் இருவரும் அதிர்ந்தார்கள்.

”இறந்த நாள் சொல்ல முடியுமா?”

“ஆக்சிடெண்ட்டு.ஏதோ லெட்டர் வந்திருக்குன்னு போஸ்ட் ஆபிசுக்கு போகும்போது லாரிகாரன் அடிச்சுட்டான். ஒரு 12 மணி இருக்கும்..!”தேதியும் சொன்னான்.

ஈஸ்வரிக்கு திக்கென்றது.என் லெட்டரை வாங்கப் போனாரா?நடப்பதெல்லாம் தற்செயலா? ஒரே போடாகப் போடப்போகிறது இந்த சாமி.

கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுத்தாள்.

மாதந்திர பிரியட் எப்படியும் ஹோட்டலில் கழிந்து புறப்படலாம் என்பது நடக்கவில்லை.அது வேறு கவலையை வாட்டியது.என்ன தைரியத்தில் புறப்பட்டோம்.  இனம் புரியாத பயத்தோடு ஜன்னல் வழியே  விர் விர்ரென்று ஓடும் காட்சியையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நாலு மணி நேர பயணத்தில் நாலு தடவை வண்டி  ரிப்பேர் ஆகி நின்றது. எதிர்படும் கோவிலில் எல்லாம்  டிரைவர் நின்று சாமிக்கும்பிட்டு  பிரயாணத்தைத்  தொடர்ந்தான்.

மாலை நேரம்.ஊரைத் தொட இன்னும்  ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

”பசுமாடு ஒண்ணு செத்துக்கிடக்குது. இனிமே வண்டி எடுக்க மாட்டேன். திரும்பி போய்டலாம்.இல்லேன்னா நீங்க இறங்கி நடந்துபோங்க. செல்லுல என் நம்பரை கூப்பிடுங்க. வரும்போது இங்க பிக்-அப் பண்றேன்.”

”என்னங்க இப்படி சொல்றீங்க...? உங்கள நம்பிதானே வந்தோம்.இது எல்லை மாதிரி தெரியலையே?”

“வண்டிய எடுக்கும்போதே சொன்னேன்.எல்லைவரைதான்னு.வாக்க காப்பாத்திட்டேன்.இதுதான் எல்லை”
”இது சரி இல்லீங்க....” ஈஸ்வரி கோபத்துடன் சொன்னாள்.

“பயப்படாதீங்க.எல்லாம் நல்ல படியாய் நடக்கும்.உங்க முகத்துல ஏதோ கடாட்சம் தெரியுது. சார்தான் டல்லா இருக்கார்..அதோ தெரியுது பாருங்க பெரிய வீடு.அங்க  மாசானம் பிள்ளைன்னு ஒத்தரு இருப்பாரு.அவரு எல்லாம் ஏற்பாடும் செய்வாரு..”

இறக்கிவிட்டு அவன் பாட்டிற்கு போய்விட்டான்.

”மாடு லாரில அடிப்பட்டு செத்துருக்கு..” மகாதேவன் சொல்ல ஈஸ்வரி தலையாட்டினாள்.

லேசாக இருட்ட ஆரம்பித்தது. கிராமம் ” ஹோ” என்று வெறிச்சோடி அங்கும் இங்குமாக சில கூரை வீடுகள். வயல்கள்.தோப்புகள்.எங்கோ ஒரு வீட்டில் புகை வந்துக்கொண்டிருந்தது.

நடக்கையில்  குலதெய்வத்தின் மண்டிப் போட்ட உருவம்  ஈஸ்வரியின் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது.போகும் வழியில் தற்செயலாகப் கண்ணில் பட்டுவிடுமோ? பயத்துடன் துப்பட்டாவை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டாள்.ஆராய்ச்சியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.பிராத்தனையை முடித்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான்.

காதல் வாழ்க்கை எவ்வளவு ஜாலியாக இருந்தது.ஹனிமூன் போய் அனுபவிக்க வேண்டிய பொழுதில் இக்கிராமத்தில்...?   சே.. ! இது என்ன  வாழ்க்கை?.இருவரும் ஒட்டியபடி முன்னும் பின்னும் பார்த்தபடியே தொடர்ந்தார்கள்.மகாவின் முகம் இறுகி இருந்தது.

எங்கோ டூரிங்  டாக்கீசில் “மாரியம்மா” என்று பாட்டு காற்றில் அலைந்து வந்தது.

வழியில் ஒரு உருவத்தைப் பார்த்து மிரண்டு ஈஸ்வரிக்கு வயிற்றை வலிக்க ஆரம்பித்தது. அது சோளக் கொல்லை பொம்மை என்று மகாதேவன் தேற்றினான்.

மாசானம் பிள்ளை வீட்டை அடைந்தார்கள்.இவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் மாசானம்.விவரம் சொன்னார்கள்.

“வர வழில சாமி எதுவும் பாக்கல.. இல்ல?”

இருவரும் பயத்துடன் இல்லை தலையாட்டினார்கள்.

“நல்லது.. முதல்ல சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க”
 
வீட்டுப் பெண்கள் முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள்.வயிற்று வலியைப் பற்றிச் சொன்னதும் அதிர்ந்தார்கள்.

”உங்க சொந்த பூமில முடிச்சிட்டு வந்திருக்கலாமே. சரி! எல்லாம் நல்ல படியா நடக்கும். இங்கதான் பிராத்தனைக்கு வரவங்க தங்கி நேர்த்திக்கடன நிறவேத்துவாங்க. சுத்துபத்திய நிறைய சாமிங்க இருக்கு.” அவளுக்கு தனி அறை ஒன்றைக் கொடுத்து உபசரித்தார்கள்.

சாப்பிடுகையில் எல்லா விவரங்களையும் ஒரு வரிவிடாமல் மகாதேவன்  அவரிடம் சொன்னான்.கவலையுடன் கேட்டுக்கொண்டார்.மூன்று நாள் வெளியில் எங்கும் போகாமால் வீட்டிலேயே கழித்தார்கள்.

நாலாவது நாள்...

” பூசாரி செத்துட்டதால.... புது பூசாரிக்கு பட்டம் கட்டல.இவங்க வேற தீட்ட இருக்காங்க.எப்படி பட்டம் கட்டறது.உங்க குடும்பத்துல வேற நிறைய துர் சம்பங்கள் நடக்குது.இங்க நாங்க மதிக்கிற  கிராமப் பெரிசு. ஒருத்தரு... வயசு 99.அவருகிட்ட கேட்டு செய்வோம்.ஆனா திடீர்ன்னு நெனவு இல்லாத போய்டுவாரு.நெனவு வர சமயத்தில புடிக்கனும்.சொன்னார்ன்னா...! அதான் வேத வாக்கு! வேத வாக்கு கேட்டு கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆச்சு”

கேட்டதும் ஈஸ்வரி ரொமப கவலையானாள்.வழக்கமான பிராத்தனையைக் கூட முடிக்க முடியாதுப் போல இருக்கே.இன்னும் ஒரு நாள்தான்இருக்கிறது.
அம்மாவிடம் எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருப்பதாக செல்லில் தகவல் சொல்லிக்கொண்டிருந்தாள்.

காலை 12 மணி.மகா தேவனும் ஈஸ்வரியும் டென்ஷனோடு வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மாசானம் பிள்ளை ஓடிவந்தார்.

”வாங்க... வாங்க... நீங்க அதிர்ஷடம் செஞ்சவங்க...ஊர் வேத வாக்கு பெரிசு நினவு வந்து பேசறாரு. குல தெய்வப்பெட்டியை ஈஸ்வரி எடுத்துக்கொண்டாள்.

மாட்டு வண்டி குலுங்கி குலுங்கி மெயின் ரோடு வந்ததும் வேகம் பிடித்தது. பெட்டிக்குள் ஏதோ ஊர்வது போல் நினைப்பு வந்து திகிலுடன் அழுத்திப் பிடித்து அதயேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.அரை மணி நேரத்தில் வேதவாக்கு பெரியவரின் வீடு வந்தது. வெளியில் ஸ்ரீகண்ட முதலியார் அவர்கள் இல்லம் என்று போட்டிருந்தது.

கிராமத்து சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.ஈஸ்வரியைப் பார்த்து மெலிதாக சிரித்து பக்கத்தில் உட்காரச்சொன்னார்.

இருவரும் நமஸ்கரித்து பொட்டியை அவர் கையில் கொடுத்தாள்.விவரங்களைச் சொன்னார்கள்.

பழுத்துப்போன காகிதத்தை கண்ணாடிப்போட்டபடி படித்தார்.அரிசாமி தகடையும் பார்த்தார். மீண்டும் படித்துவிட்டு பார்த்தார். தகடைத் தள்ளி வைத்து விட்டு ஈஸ்வரியைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தார்.

“புது பூசாரிய வச்சு பிரார்த்தனய நிறவேத்திடலாமா... டைம் ஷார்டா இருக்கு” ஆர்வத்துடன் கேட்டாள்.

”உங்களுக்கு குல சாமியும் கிடையாது,பிரார்த்தனயும் கிடையாது.உங்களுக்கு நீங்கதான் சாமி. உங்கள நீங்களே கும்பிட்டுக்கனும்.புதுச கல்யாணம் ஆனா அர்த்த நாரி சாமின்ற பாவனை. பொண்டாட்டியும் புருசனும் சரி சமம்.புள்ளயார் படத்துக்கு முன்னாடி பெரிய கோலத்துப்போட்டுட்டு முன்னால நின்னு மாலைய மாத்திட்டு நமஸ்காரம் செஞ்சிட்டு வாழ்க்கைய தொடங்குங்க” சிரித்தார்.

”அப்போ பட்டினம் காப்பு அரிசாமி?” மாசானம்  கேட்டார்.

”இனிமே அரிசாமிக்கு ஒண்ணும் கிடைக்காது.கிடைக்கனும்னா குலதெய்....”
முடிக்காமல் நினைவிழந்தார்,

9 comments:

  1. நல்ல நடை.!..சொல்லாடல் கச்சிதம்!..முடிவு தான் புரியவில்லை.!

    ReplyDelete
  2. Blogger M.G.ரவிக்குமார்™..., said...

    // நல்ல நடை.!..சொல்லாடல் கச்சிதம்!..முடிவு தான் புரியவில்லை.!//

    முதல் வருகைக்கு நன்றி.கடைசி பாராவைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.அது சும்மா ஒரு படிப்பவரை சுத்தி விடுவதற்கு வைத்தது.

    நன்றி.

    ReplyDelete
  3. Blogger tamildigitalcinema said...

    // உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil///

    அழைப்புக்கு நன்றி.ஆனால் இப்போதைக்கு ஆர்வம் இல்லை.
    அது ஏன் மூணு தடவை கூப்பிடுறீங்க.

    July 26, 2010 3:23 PM

    ReplyDelete
  4. திக் திக் கொஞ்சம் கம்மிதான் சார். அடிக்கடி காட்டப்படும் 'சாவு'கள் கதையை நீர்த்துப் போகச் செய்வது போல் தோன்றுகிறது.
    முடிவு நல்லா இருக்குது....

    ReplyDelete
  5. ///முதல் வருகைக்கு நன்றி.கடைசி பாராவைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.அது சும்மா ஒரு படிப்பவரை சுத்தி விடுவதற்கு வைத்தது.///


    ....இது என்ன கலாட்டா? ஹா,ஹா,ஹா,ஹா....

    ReplyDelete
  6. July 26, 2010 4:55 PM
    தமிழ்ப்பறவை said...

    // திக் திக் கொஞ்சம் கம்மிதான் சார்.//
    கரெக்டுதான்.

    //அடிக்கடி காட்டப்படும் 'சாவு'கள் கதையை நீர்த்துப் போகச் செய்வது போல் தோன்றுகிறது//

    ஒரு தாக்கத்திற்காக மற்று்ம் சஸ்பென்சுக்காக.
    மற்றபடி யாரையும் கொலை செய்ய ஆசை இல்லை.
    // முடிவு நல்லா இருக்குது....//.

    நன்றி.

    ReplyDelete
  7. Chitra said...
    // ....இது என்ன கலாட்டா? ஹா,ஹா,ஹா,ஹா....//

    நன்றி. கதை எப்படின்னு சொல்லலியே?

    ReplyDelete
  8. ஸாரி கேஆரெஸ், முடிவும் புரியலை, திக்கும் இல்லை, திகிலும் இல்லை. சவ சவன்னு இருக்கிறது.

    ReplyDelete
  9. July 27, 2010 8:34 PM
    ஆதிமூலகிருஷ்ணன் said...

    // திக்கும் இல்லை, திகிலும் இல்லை//
    இது உண்மைதான்.முதலில் வேறுவிதமாய் போய் அப்போது இந்தத் தலைப்பு பொருந்தியது.


    // முடிவும் புரியலை//
    புரியலையா?ஆச்சரியமாக இருக்கிறது ஆதி.

    //சவ சவன்னு இருக்கிறது.//
    கதையின் போக்கிலேயே எழுத்துக்களும் போகிறது.

    நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி ஆதி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!