Friday, March 12, 2010

வீடியோ மாரியம்மன் - சிறுகதைகள் -இமயம்

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு தென் தமிழக வட்டார வழக்கு இல்லாத “சென்னைத் தமிழ்”வட்டார வழக்குக் கதைகள் நிறைந்த ஒரு கதைத் தொகுப்பைப் படித்தேன்.எழுதியவர் இமயம் என்னும் எழுத்தாளர்.கடலூர்வாசி என்பதால் “சென்னைத் தமிழ்” நெடி அடிக்க கதைகள் புனைந்துள்ளார்.இவரின் சில கதைகளைச் சிறு பத்திரிக்கைகளில் படித்ததுண்டு.

தொகுப்பின் பெயர் “வீடியோ மாரியம்மன்”.மொத்தம் 11 கதைகள்.சிறு பத்திரிக்கைகளிலும் பிரசுரமானதும் ஆகாததுமாக.

இமயம், அச்சு அசலாக வட்டார வழக்கில் அபத்தமான உலகத்தில் அபத்தமான கதை மாந்தர்களை உலவ விட்டு சுவராஸ்யமாக கதைச் சொல்கிறார்.சில கதைகள் ஆழம் அதிகம்.மிகைப் படுத்தல் இல்லை.ஒரு சில கதைகள் நாடகத்தன்மையுடன்.இவரின் கதை மாந்தர்கள் 98% சதவீதம் வறுமை கோட்டுக்கு கிழேதான்.தலித்,மற்றும் உயர் ஜாதி ஏழைகள்,தாழ்த்தப்பட்டவர்கள் என்று கலந்துக்கட்டியாக.அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள்.

சில கதைகளில் அடை அடையாக  தேனீக்கள் போல் கேரக்டர்கள்.

முக்கியமாக கதைகள்,உரையாடல்கள் தெளிவாக இருக்கிறது. அதே சமயம் சில கதைகள்,உரையாடல்கள் ரொம்பவும் நீண்டுபோய் அலுப்புத் தட்டுகிறது.ஒரே விதமான எண்ண ஓட்டங்கள் உணர்ச்சிகள் உள்ள கதை மாந்தர்கள் காரணமாக இருக்குமோ?





இவரது நடையில் எதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது.
எனக்குப் பிடித்தக் கதைகள் :-

நாளை:
வித்தியாசமான கரு.இதில் வரும் செல்லாம்மாளும் சின்னசாமி உடையாரும்,ஆட்டிகுட்டியும்,மாலதியும் மகேந்திரன் படத்தில் வரும் கேரக்டர்கள் போல் இயல்பாக வந்து மனதில் இடம் பிடிக்கிறார்கள்.செல்லாம்மாளும் சின்னசாமி உடையாரும் யதார்த்தமாக உலவுகிறார்கள்.

இதில் வரும் ஒரு வசனம்:

“இப்ப ஊட்டுக்கு ஊடு டி.வி. பொட்டியக் கொண்டாந்து கொடுத்துட்டான்.இப்ப சனங்க அந்தப் பொட்டியில பேசுற மாதிரிதான் பேசுறாங்க.என்னால அப்படிப் பேச முடியாது”

பயணம்:
ரொம்ப நீண்ட பயணம்.கணவன் இல்லாத குடும்பத்தில் மனைவியின் தலையில் விழும் பொறுப்புகள் அதை ஒட்டிய பிரச்சனைகள்.கதை பூராவும் வரும் லோகம்மாளின் உள்ளத்து உணர்ச்சிகள் நம்மை கனக்க வைக்கிறது.

உயிர்நாடி:
உயிருக்கும் மேலாக நேசிக்கும் தன் நிலத்தை கம்பெனிக்கு விட்டு தர மறுக்கும் தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் கதை.அப்பா-மகனாக உறவை விளித்துச் சொல்லாமல் இவர்களைகிழவர் -ராமசாமியாக்வே கதை முழுவதும் இவர்களை ஒட்டாமல் உலாவ விடுகிறார் கதைச்சொல்லி.அருமை.யதார்த்தமான நடை.முடிவு நாடகத்தன்மை?

ஊர்வம்பு:
சாதாரண ஒரு பஸ் சம்பவத்தை உணர்வுபூர்வமாக கொண்டுவந்து கண் முன் ந்நிறுத்துகிறார்.

நல்லசாவு:
அபத்தமான ஊர்.அபத்தமான சம்பவம்.அபத்தமான மனிதர்கள். சுவையாக மிகைப்படுத்தாமல சொல்கிறார்.டிராமடிக் முடிவு எதற்கு?

சத்தியக்கட்டு: இதில் வரும் ஒரு பெண்ணின் மரணம் மனதை என்னோவோ செய்கிறது.அருமையான கதை கரு.ஆனால் பெரிய கதை.சுருக்கலாமோ?முதலில் படித்திருந்தால் ஒட்டி இருக்குமோ?

2 comments:

  1. சென்னைத்தமிழ் என்றா சொல்கிறீர்கள்? முயற்சிக்கவேண்டும்.

    ReplyDelete
  2. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //சென்னைத்தமிழ் என்றா சொல்கிறீர்கள்? முயற்சிக்கவேண்டும்.//

    படியுங்கள்.நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!