Monday, December 17, 2012

நீதானே என் பொன் வசந்தம்-விமர்சனம்

பொதுவாக நான் பார்க்கப்போகிறேன் என்று முடிவு செய்துவிட்டு பார்க்கப்போகும் படங்களின் விமர்சனத்தை நெட்டில் படிப்பதில்லை.காரணம் அதில் பாதிக்கப்பட்டு படம் பார்த்து சொந்த ரசனை மற்றும் விமர்சனம் போய்விடும் என்பதால்.டிவிட்டரில் என் (சின்ன சின்ன ஒபினியன்கள்தான்) கண்ணில் பட்டதெல்லாம் படம் மிக மோசம் என்று வந்திருந்தது.

நண்பர் ஒருவர் எனக்கு போன் பண்ணி “என் பொண்ணுப்பாத்தாளாம்...படம் போராண்டா...வளவளவன்னு பேசிட்டே இருக்காங்களாம்”.

என்னடா இப்படி சொல்றாங்களே பார்த்தே ஆக வேண்டுமா என்று திடீரென்று ஒரு குழப்பம்.அதே சமயத்தில் ஒவ்வொருவரின் படத்தை நோக்கும் பரிமாணம் (perspective) மாறும்  என்று திடமாக நம்புபவன்.அதனால் குழப்பத்தை தூக்கிக் கடசிவிட்டு “நீதானே என் பொன்வசந்தம்” நி.நித்யா பாட்டை இரண்டு  முறை கேட்டுவிட்டு டிரைவிங்கில் அதேயே முணுமுணுத்தபடி தியேட்டரில் போய் பார்த்தேவிட்டேன். 20/12/12 க்கு பிறகு பார்க்க முடியுமா முடியாதா என்ற கவலை வேறு.
படம் மோசமா? இல்லவே இல்லை.படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

நித்யா - வருண் இவர்களின்  ஐந்து வயது முதல் இருபத்தி நாலு வரை வாழ்க்கைத் (காதல்) தருணங்கள்தான் படம் என்று டைட்டில் கார்டு வருகிறது.முக்கியமாக உணர்ச்சிகள்தான்.இதை 2.30 மணி நேரத்தில் சொல்ல வேண்டும்.இது மாதிரி படங்கள் ஹாலிவுட்டுக்கு ஓகே நம்ம ஊருக்கு ஓகேயா? அவர்கள் பின்னி பெடல் எடுப்பார்கள்.கோலிவுட் கெளதம் மேனன்?

கெளதம் மேனன் வெற்றிப்பெற்றுவிட்டார். எப்படி?நித்யா வருண் வாழ்ந்திருக்கிறார்கள்.Awesome!

எமோஷன்ஸ் பின்னிடீங்க ....நித்யா!

காரணம் 1.நித்யா-வருண் தருணங்களைச்சொன்ன விதம் 2.அந்த மாதிரி பருவங்களில் வாழ்ந்து அந்த மாதிரி தருணங்களை அனுபவித்துத் திரையில் பார்த்தது ஒரு சந்தோஷம்3.எப்ப பார்த்தாலும் பேச்சு-வார்த்தைகளை போராடிக்காமல் நகர்த்திக்கொண்டே போவதற்கு திறமை வேண்டும்.

பார்வையாளராக இவர்களின் தருணங்கள்  நம் முன்னே காட்சிகளாய் ஓடுகிறது..

அடுத்தடுத்து வரும் படக்காட்சிகளின் எமோஷன்ஸ் சங்கிலியாகப் பின்னப்பட்டு சீராக அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் படத்தின் பெரிய பலம்.
ஒவ்வொரு சீனும் அதனதன் யதார்த்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

குட்டி குட்டி சண்டையின்போது  பேசும் வசனங்கள் ரத்தமும் சதையுமாக படத்தின் எமோஷனோடு பொருந்திப்போகிறது.

ஒரு மிடில் கிளாஸ் பையனுக்கும் (அவரேஜ் அராத்து) ஒரு பணக்காரப் பெண்ணுக்கும்( திமிர் இல்லாத)  இடையே அன்பு,நட்பு,காதல்,பிடிப்பு,காதல், வெறி,காமம்,காதல்-ஹேட்(love-hate),காதல் -ஹேட், காதல்-ஹேட் மீண்டும் காதல் மீண்டும் ....தருணங்களை கிமுவில் ஆரம்பித்து கிபிவரை  சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார்.

கடைசியில்தான் கொஞ்சம் ஆற்றிவிட்டு  சூடாக கையில் கொடுப்பார் என்று பார்த்தால் மாற்றி மாற்றி மாற்றி மாற்றி மாற்றி  ஆற்றிக்கொண்டே இருக்கிறார்.

பள்ளித் தருணங்களை இன்னும் கூட நெகழ்ச்சியாக சொல்லி இருக்கலாம்.என்கிட்டே கேட்டிருந்தால் டெம்போவில் அனுப்பி இருப்பேன். பள்ளிப்பருவம் பன்னீர் புஷ்பங்கள் படத்தை ஞாபகப்படுத்துகிறது.பிற்பகுதி  கடைசி விதாவ சாயல்.

தங்கள் சண்டைகளை தாங்கள் சாடிஸ்டிக்காக ரசிப்பது கூட சில இடங்களில் வெளிப்படுகிறது.இது டைரக்டரின் வெற்றி.

சமந்தா நித்யாவாக வாழ்ந்திருக்கிறார்.கொள்ளை அழகு.கொள்ளை எமோஷன்ஸ்.ஜீவாவும் அசத்தல்.ஒரு மிடில்கிளாஸ் பையனின் குற்ற உணர்ச்சியும்,பொறுப்பும்,பயமும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.ஆனால் அவர் குடும்பதான்... அண்ணன் பவுன்சர் மாதிரி இருக்கிறார். இவர் ஒரு தமிழ் பேசுகிறார்.அப்பா “குற்றம் நடந்தது என்ன” ஜி தமிழ் டிவி டப்பிங்  தமிழ் குரல். கொசுறாக இன்னொரு தம்பி.பாலச்சந்தர் படம் போல்.

வருண் தான் வாங்கிய புது காரை நித்யாவிற்கு காட்டும் சீன் ரொம்ப நெகழ்ச்சியான சீன். இதுமாதிரி அங்கங்கே கொண்டு வந்திருக்கலாம்.

சந்தானம் ஷேவாக மாதிரி டப்பு டிப்பென்று மட்டையை சுத்தி கலகலக்க வைக்கிறார்.இவர் இல்லாவிட்டால் படம் சற்று போரடித்திருக்கும்.இவருக்குத்தான் தியேட்டரில் விசில் பறக்கிறது.காலம்!

சந்தானத்தின் காதலியாக வரும் குண்டுப்பெண் வித்யூலேகா ராமன் கலகலக்க வைக்கிறார்.குண்டுப் பெண் கிண்டல்  இது  என்.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்து இன்னும் தொடருகிறது. க்ளிஷே.

இவர் நடிகர் மோகன்ராமின் பெண்ணாமே?.


இசை இசைஞானி இளையராஜா.பாடல்கள் எல்லாம் தனியாக கேட்டால் அற்புதம்.ராஜா உணர்ச்சிகளை உள் வாங்கிப்போட்டு இருக்கிறார்.பொருத்தம்?காற்றைக்கொஞ்சம்(சூப்பராக) /சாய்ந்து/என்னோடு/படிக்கல மாமு  அற்புதமாக பொருந்தி வருகிறது.

”காதல் என்பது” இது மேல் வெர்ஷன் ஆஃப் ”முதன் முறை”.

முதன்முறை அண்ட் சற்று முன்பு இரண்டு பாட்டும்  அற்புதமான புது மாதிரியான நெக்ஸ்ட் ஜெனரேஷன் இசைக்கோர்ப்பு.உணர்ச்சிக் கொந்தளிப்பு பாடல்கள்.இதை கெளதம் பின்னணி இசை அளவுக்கு பயன்படுத்தி உள்ளார். மாண்டேஜில் விட்டு விட்டு வருகிறது.

இடைவேளைக்குப் பிறகு பாடல்கள் வரிசையாக வருகிறது.கொஞ்சம் ஹெவி டோஸ்.

என்னோடு வா வா ஆரம்பகால காதல் அரும்பும் காலத்தில் வரப்போகிறது என்று நினைத்தால் வேறு பருவத்தில் வருகிறது.

ராஜாவிற்கு  ஒன் டே மாதிரி கடைசி ஐந்து ஒவர் கொடுத்திருக்கிறார்கள். பின்னுகிறார்.

பின்னணி இசை காலத்திற்கு ஏற்றார்போல் இவ்வளவுதான் இந்தப்படத்திற்கு முடியும் என்று அளவோடு நிறுத்தி இருக்கிறார்.தேவையான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

எப்போதுமே ராஜா தனக்குப் பொருத்தமில்லாத பாடலை பாடுவதை நான் ரசிப்பதில்லை.இதில் “வானம் மெல்ல”.இந்தப் பாடல் சம்பந்தம் இல்லாமல் மாண்டேஜில் ஓடுகிறது.இதில் வரும் உணர்ச்சிகள் எல்லாம் எவ்வளவு  பேர் உள் வாங்க முடியும்.(இதில் வரும் மூன்றாவது இண்டர்லூட் அட்டகாசம்.
சிடியில் இல்லை.)

அடுத்து ஒரு சோகமான நித்யா காட்சியில் இவர் பின்னணியில் இரண்டொரு வரி தன் கட்டைக் குரலில்பாடுகிறர்.தியேட்டரில் சிரிக்கிறார்கள்.தேவையா?வேறு அற்புதமான இசைக்கருவி இசையை கொடுத்திருக்கலாம்.ஆனால்“சாய்ந்து” பாடலை யுவன் ஆரம்பிக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.

யதார்த்தம் இதுதான் ஞானி சார்!

நான் பார்த்த அன்று இளைஞர்கள் படத்தை ரசிக்கத்தான் செய்தார்கள்.படம் ரொம்ப ஓகேதான்.

2 comments:

  1. ராஜா இசையில் சிறப்பாகவும் கெளதம் வசணத்தில் சிறப்பாகவும் செய்து இருக்கின்றார் என்ன ஒரு சண்டைக்காட்சி வைத்து இருந்தால் இன்னும் சிறப்பு !

    ReplyDelete
  2. \\யதார்த்தம் இதுதான் ஞானி சார்! \\

    அதே...அதே ;))

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!