Saturday, December 31, 2011

வாய்க்கரிசி,அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

                                        வாய்க்கரிசி

”இதானே”

மார்ச்சுவரி அருகே ஸ்டெரச்சரில் பெண் பிணம் காலை விரித்தபடி சாம்பல் பூத்து கிடந்தது.நான்கு மாத கர்ப்பத்தில் வயிறு பூசி இருந்தது.பக்கத்தில் போலீஸ்காரர்.

“கைவுட்டுட்டு ஓடினனே.. அந்த பொறம்போக்கு என்ன ஜாதி?”

எதிரில் இருந்தவர் முகம் இறுகி எதுவும் பேசவில்லை.

”வாய்க்கரிசி தீர்த்தம்ன்னு சம்பிரதாயத்த முடிச்சிடுங்க “

“அதெல்லாம் வேண்டாமுங்க.களுத தொலைஞ்சா போதும்”கத்தையாக ரூபாய் நோட்டுக்களை போலீஸ் கையில் அழுத்தினார்.

“அட ரிக்கார்டலதான் அனாத பொணம்.உனுக்கு நீ பெத்த பொண்ணூ.” சொல்லி முடிப்பதற்குள் அவர் போய்விட்டிருந்தார்.

வார்டுபாயிடம் கால்கிலோ அரிசியும் தண்ணீர் பாக்கெட்டும் வரவழைத்து முகத்தில் தண்ணீர் பீச்சியடித்து கொத்தாக அரிசியை வாயில் போட்டார்.
                                        ------------------

                        அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

சந்தியாவுடன் அவனும் சரிசமமாக கூடவே நடந்து வந்துக்கொண்டிருந்தான்.அவன் யாரோ? இவளுக்குத் தெரியாது.

இருவருக்கும் இடையே கால் இன்ஞ் இடைவெளிதான் இருக்கும்.அவள் செருப்பின் அடியும் அவன் ஷுவின் அடியும் பளிச்சென்ற hexagon வடிவ பிளாட்பார வில்லைகளில் மாறி மாறி வைக்கப்பட்டது. ஒவ்வொரு அடிக்கும் தன் செருப்பின் ”சரக்சரக்”கும் அவன் ஷுவின் ”டக்டக்கும்” ஒரு சினிமா பாட்டின் ரிதம் போல காற்றில் தொடர்ந்து வந்தது.

தெருவில் ஒரு திருப்பம் வந்து இருவரும் பிரிந்தார்கள்.

இணைபிரியாமல் நடந்து வந்தது எவ்வளவு நிமிடம் என்று யோசித்தாள். ஐந்து நிமிடம் என்று தெரிந்தது. அந்த hexagon பிளாட்பார கற்களைப் பார்த்தாள்.மெதுவாகப் புன்னகைத்துவிட்டு ஆபிசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

                                        ------------------                     

5 comments:

  1. சசிகலா நன்றி.

    ReplyDelete
  2. நன்றி ஹாட்லிங்க்ஸ்

    ReplyDelete
  3. சூப்பர்... ரெண்டுகதையும் நல்லா இருக்கு சார்...!

    ReplyDelete
  4. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!