Wednesday, December 21, 2011

ரொம்ப தூரத்து உறவு - கவிதை


எப்பவோ பார்த்திருந்த
தூரத்து உறவு அத்தைப் பாட்டி
இறந்துவிட்டதாக தகவல் வருகிறது

பண்டரிபாய் போல்
முகம் இருந்திருக்கிறது
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுத்திருக்கிறார்
சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி இருக்கிறார்
ஈரத்தலையைத் துவட்டி விட்டிருக்கிறார்
சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறார்
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்திருக்கிறார்
அம்மா அடிக்கும்போது தடுத்திருக்கிறார்

இப்படியாக
அன்பு சுரந்து முடிகையில்
அவரே வீட்டிற்க்கு வருகிறார்

இறந்தது அவர் இல்லை
வேறு யாரோ ஒரு தூரத்து உறவு


பண்டரிபாய் போல்
முகம் இருக்கவில்லை
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுக்கவில்லை
அல்லது சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி விடவில்லை
ஈரத்தலையைத் துவட்டி விடவில்லை
சினிமாவுக்கு அழைத்துப் போகவில்லை
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்ததில்லை
அம்மா அடிக்கும்போது தடுக்கவில்லை

அந்த இறந்துப் போன
வேறு யாரோ ஒரு தூரத்து உறவின் மேல்
அன்பு சுரக்கிறது

அத்தைப் பாட்டிக்குச் சுரந்ததை விட
இரண்டு படி அதிகமாகவே சுரக்கிறது


4 comments:

  1. எனது புரிதல் படி நன்றாக இருக்கிறது...இந்தப்பாட்டிக்கு, அந்தப் பாட்டிக்குக் கிடைத்ததுபோல் கிடைத்திருக்குமாவென்ற எண்ணம் அன்பை அதிகரிக்கச் செய்ததோ...???

    ReplyDelete
  2. அந்த இறந்துப் போன
    வேறு யாரோ ஒரு தூரத்து உறவின் மேல்
    அன்பு சுரக்கிறது
    அருமை

    ReplyDelete
  3. நன்றி சசிகலா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!