Wednesday, April 4, 2012

மெல்லிசை ஹிம்சைகள்/கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்

மெல்லிசைக் கச்சேரிகளுக்கு நான் செல்லுவது இல்லை.திறந்த அல்லது மூடிய (Closed hall)அரங்கு எல்லா கச்சேரிகளும் இதில் அடக்கம். முக்கியமாக மூடிய சின்ன கல்யாண மண்டபங்களில் ரிசப்ஷனில் வைக்கப்படும் கச்சேரிகள்.அதுவும் லோக்கல் இசைக் குழுக்கள் இசைக்கும் இசை?பட்டீஸ் டிட்டீஸ் என்று ட்ரம்ஸ்ஸூம் கொய்ங் என்ற கீபோர்ட்டு ஒலியும்.இதில் பாடுபவர்கள் அமுங்கிப்போய் ஈன ஸ்வரத்தில் கேட்கும்.

முக்கிய காரணம் இசை இரைச்சல் ஹிம்சை.ஒலி அமைப்புகள் சரியாக இல்லாமை.அதற்கேற்றார் போல் மண்டபங்கள் வடிவமைப்பதில்லை.மேடையில் உட்காரும் ஆர்கெஸ்ட்ரா குழு ஷேர் ஆட்டோவில் உட்காருவது மாதிரி நெருக்கி அடித்து உட்கார்ந்து இசைப்பது.மறுஉருவாக்கத்தில் சுத்தமாக லட்சணம் இல்லாமல் இருப்பது.

அதன் நடுவில் பாடகி-பாடகர்கள்(பின்னணியில் ஓவர் சவுண்டு)பாடுவது சோகம்.சத்தியமாக ரசித்துப் பாடுவது மாதிரி தெரியவில்லை.இசைக் குழுக்களுக்கும் வேறு வழியில்லை.வயிற்றுப் பிழைப்பு.

இப்படி கேட்பது கண்டிப்பாக ஆரோக்கியமும் இல்லை.

அடுத்து அசல் அசல்தான் அது பழசோ புதுசோ நாம் ரசித்து அனுபவித்து வாழ்ந்த பாடல்களை அதன் ஒரிஜனல் இசைக்கருவிகளுடன் இசைக்கப்படாமல் கேட்டால் என்னவோ மாதிரி இருக்கிறது.அதுவும் ராஜாவின் பாடல்கள் சத்தியமாக அவராலேயே மீண்டும் உருவாக்க முடியாது.

ஏதோ வைக்கவேண்டுமே என்று திருமணங்களில் இசைக்கச்சேரி வைக்கப்படுகிறது.இதில் மாப்பிள்ளை-பெண் வீட்டுக்காரர்களின் பந்தாதான் இசை மேல் காதல் இல்லை.

தவிர்க்க முடியாவிட்டால் வெளியே வெகு தூரத்தில் நின்றுகொள்வேன்.இரைச்சல் குறைந்து ஒரளவுக்கு ரசிக்கலாம்.

எப்படி இருக்க வேண்டும்?பின்னணியில் ரம்யமாக மெல்லிசை ”மெலிதாக”இசைத்தபடி இருக்க பார்வையாளர்கள் கல்யாண குஷி காட்சிகளை ரசித்தவாறு இருக்க வேண்டும்.ரசித்தவாறே உறவுகளிடம் உரையாடலாம்.

வீணை வித்தகி ரேவதி கிருஷ்ணா
 

பாடல்: காலையும் நீயே மாலையும் நீயே படம்: தேன் நிலவு

இதே வீணையில் இவர் "மன்மதா ராசா” பாட்டும் வாசித்துள்ளார்.”உன் சமயலறையில்” பாட்டும் அருமை.

நான் விரும்பும் உண்மையான மெல்லிசை “ மெலிதான இசை”. சினிமா அல்லது கர்நாடக கீர்த்தனைகளை ஒற்றை இசைக் கருவிகளில் (புல்லாங்குழல்/வயலின்/சிந்த்,வீணை) வாசிப்பது.முக்கியமாக பின்னணியில் தாளக் கருவிகள் தபேலா,டோலக்,மிருதங்கம்.ஓவர் சவுண்டு இல்லாமல் மற்ற இசைக் கருவிகள் இருக்கலாம்.

இதுதான் மூடிய கல்யாண மண்டபங்களுக்குத் தோதுபட்டு வரும்.இல்லாவிட்டால் சத்தம்தான்.மார்பு கூடு அதிரும்.இல்லாவிட்டால் 1965க்கு முன் உள்ள பாடல்களை இசைக்கலாம். இசைக் கருவிகள் குறைவு.

சமீபத்தில் கலந்துக்கொண்ட திருமணத்தில் மெல்லிசைக் கச்சேரி.ஆச்சர்யம் பிளஸ் அதிர்ச்சி.(திருமண பத்திரிக்கையில் இதைப் பற்றி இல்லை) காரணம் இதை ஒட்டிய (annexe) இன்னொரு மண்டபம் தியான மண்டபம் கம் கோவில்.
அதில் பக்தி பஜனை நடக்கிறது.இதில் மெல்லிசை.சபாஷ் சரியான போட்டி.ஸ்டார்ட் மியூசிக்!

எஸ்கேப்...! எங்க? அவுட் சைட் டிஸ்டென்ஸ் ஸ்டாண்டிங்தான்.

கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்


தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் தன்னுடைய 75 வருடத்தைக் கொண்டாட இருக்கிறது.இப்போது பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு கூடி கலைக் கல்லூரிகள் மங்கிவிட்டன.அப்போது கலைக் கல்லூரிகளிலேயே இது தனித்தன்மை கொண்டது.

ஒன்று கோ-எஜூகேஷன் சிஸ்டம்.இரண்டு இதன் இயற்கை சூழல்.


இப்போது தெரியாது ஆனால் அதன் அன்றைய தோற்றத்தை நினைக்கும்போது சிலிர்க்கிறது.இருபுறமும் மரங்கள் அடர்ந்து பொதிந்த இயற்கையின் ஊடே கல்லூரி வளாகம்.... சர்வகலாசாலை?உள்ளே நுழைந்து ஒரு முறை பார்த்து வருவதே பெரிய பாக்கியம்.ஆறு மாதம் (???)படித்த அனுபவம் உண்டு.ஈஸ்ட் இண்டியா காலத்தில் கட்டப்பட்ட கல்லூரி.

ஒரே மாதிரி தோற்றத்தில் சேலையூர்,செயிண்ட் தாமஸ், பிஷப் ஹீபர் என்று மூன்று ஹாஸ்டல்கள்.கண்ணைக் கட்டி விட்டால் அடையாளம் காண்பது கஷ்டம்.

மாணவ மாணவிகள் ஜோடி ஜோடியாக சுதந்திரமாக உள்ளே வளைய வருவார்கள்.கண்டிப்பு கிடையாது.படிப்பதை விட கேர்ள்பிரண்ட்ஸ் கிடைக்கும் என்று சேர்வதில் நிறைய பையன்கள் துடிப்பார்கள்.அப்போது கேர்ள் பிரெண்ட்ஸ் இப்போது “பிகர உசார் பண்ணுவது”.

கோ எஜூகேஷன் என்பதால் பெற்றோர்கள் சேர்ப்பதற்கு தயங்குவார்கள்.  இங்கு படித்துப் பட்டம் பெற்ற மிடில்கிளாஸ் பெண்களுக்கு மாப்பிள்ளை சற்று தயக்கத்துடன்தான் கிடைப்பார்கள்.

பாவாடை தாவணி(half saree) பெண்களுடன் மார்டன் உடை பெண்களும் சேர்ந்து படித்த அபூர்வ காலேஜ். ஜீன்ஸ் அணிந்த பெண்களை முதன் முதலில் பார்த்தது இங்குதான்.வெளி நாட்டு மாணவி/மாணவர்கள் இங்கு பார்க்கலாம். புத்த பிட்சுக்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.


கலைக் கல்லூரிதான் ஆனால் இதில் படித்து பட்டம் பெற்ற ஜாம்பவான்கள் பலர் பெரிய லெவலில் இருக்கிறார்கள்.சிபிஎம் கட்சி பிரகாஷ் கரத் முன்னாள் மாணவர்.மறைமலையடிகள் மற்றும் பரிதிமாற்கலைஞர் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள்.

இங்கு நிதி நிர்வாகம் செய்பவரை “Bursar" என்பார்கள். இது bursa(purse) என்கிற லத்தீன் சொல்லின் மூலம். முதன் முதலில் காண்டீன் என்பதை கேப்டீரியா என்றுதான்(cafeteria) இங்கு மாணவர்கள் ஸ்டைலாக சொல்வார்கள்.

Tuesday, March 20, 2012

DTS கர்ணா..நீயும் நானுமா!என்டிஆர் டப்பிங் வாய்ஸ்

அப்போது கர்ணன்,வீ.பா.கட்டபொம்மன்,ஆ.ஒருவன்,காதலிக்க நேரமில்லை, இத்யாதிகள் எல்லாம் ஒரு cult படம் ஆக இருந்தது.ஒரிஜினல் ரீலீஸ் முடிந்து பல மாதங்கள் கழித்து ‘புத்தம் புதிய காப்பி” “கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும்” “கடைசி இரண்டு நாள்” ” இன்றே கடைசி” “வைகுண்ட ஏகாதேசியில் இத்துடன்” ”ஏதோவை முன்னிட்டு” என்று தியேட்டர்களில் ரீரிலிஸ் செய்யப்படும். ஒவ்வொரு ரீலிசுக்கு கூட்டம் முண்டியடிக்கும்.

முக்கியமாக இளைஞர்கள் கூட்டம்.

பழைய கர்ணன்
முதல் காரணம் சிம்ம குரலோன் சிவாஜி!இரண்டாவது இதிகாசம் அதுவும் கர்ணனைப் பற்றி. அடுத்து அப்போது ஸ்பெஷல் எபக்ட்ஸ் கம்புயூட்ட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் சிரத்தையோடு எடுத்த பிரம்மாண்ட படம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அட்டகாசமான உயிர்துடிப்பான இசை மற்றும் பாடல்கள்.

பலவித சரித்திர புராண இதிகாச கதாபாத்திரங்களை சிவாஜியின் பிம்பத்தில்தான் ஒரு தலைமுறை உருவகபடுத்தி உள்ளோம்.கர்ணன் பெயரை உச்சரிக்கும்போதே சிவாஜியின் கம்பிரமான உருவம்தான் கண்முன் தோன்றும்.” இரவும் நிலவும்” பாட்டின் ஒரு இடத்தில் சிவாஜியின் நடைக்கு விசில் பறக்கும்.

இந்தப் பாட்டின் சில வரிகள் இலக்கிய நயத்தோடு இருந்தாலும் டபுள் மீனிங்கும் இருக்கு என்று அப்போதைய யூத்துகள் கிசுகிசுப்பார்கள்.(சுபாங்கி கர்ணன் மனைவி)

சுபாங்கி: மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே
கர்ணன்:  மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே.... அங்கு
சுபாங்கி: இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
கர்ணன்: நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே

இப்போது இந்த ஏற்கனவே கம்பீரக் கர்ணனை சினிமாஸ்கோப்பில் உப்ப வைத்து(blow up)  DTSல் இசையை செலுத்தி மெருகேத்தி ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.சிவாஜி குடும்பத்தார்.புதிய தலைமுறை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்.

DTS  Karnan
பல முறை டிவி சேனல்களில் ஓடிற்று.அப்போது புதிய தலைமுறை பார்த்ததா?காலம் மாறிவிட்டது.ரசனைகளும் மாறிவிட்டது.நேரம்?பொறுமை?????

எனக்கே கூட இந்த டிடிஎஸ் கர்ணனைப் போய் பார்ப்பதைவிட சின்ன வயதில் பார்த்து அந்த நினைவில் ஓடும் கர்ணன்தான் பிடித்திருக்கிறது.

இந்தக் கர்ணன் வெளி வந்ததும்தான் ஒரு விஷயம் நேற்று எனக்குத் தெரிய வந்தது.அது என் டிஆர் படத்தில் சொந்தக்குரல் கிடையாது.டப்பிங் குரல் என்று.சின்னவயசில் அவர்(கிருஷ்ணர் )தமிழ் குரலாக உள்வாங்கி நேற்றுவரை அதே நினைப்பு.

அவருக்கு டப்பிங் பேசியவர் கே.வி.சினுவாசன் என்பவர்.போட்டோவில் ஒய்ஜி மகேந்திரனுடன் இருக்கும் முதியவர்(92).சிவாஜி கணேசனை ஒரு டிராமா கம்பெனிக்கு சிபாரிசு செய்தவர். சிவாஜியால் அய்யர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.

இவரின் சுவராசியமான பேட்டி பார்க்கவேண்டிய ஒன்று.

NTR Voice - K V Srinivasan Exclusive interview

Thursday, March 15, 2012

ஆ.. இவங்களா இப்பத்தானே!லாஜிக் லஞ்சம்?எட்டுக்கால் பூச்சி கேள்விகள்

வாழ்க்கையில் இந்த திடுதிப் சந்தோஷம் ஏதாவொறு விஷயத்தில் நம்முன் திடுதிப்பென்று தோன்றி பரவசப்படுத்தும்.உள்ளுணர்வில் அதைப் பற்றி திடுதிப்பென்று உதிக்க அதே சமயத்தில் நம் கண் முன்னால் நடக்கவும் செய்தால் விவரிக்க முடியாத குஷி.

போன(11-03-12) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட உள்ளுணர்வு முன்னால் தூர்தர்ஷன் சினிமா நிகழ்ச்சியும் அதை நடத்திய பெண்ணைப் பற்றியும்தான்.அதை நினைத்தவாறு டிவியை ஆன் செய்ய விஜய் டிவியில் (நீயா நானா) கைத்தட்டல் ஒலி அதனூடே நடந்துவருபவர் சற்று முன் என் உள்ளுணர்வில் வந்த தூர்தர்ஷன் ”மெட்ரோ ப்ரியா”.

மார்க்கெட் போய் கல்யாணம் ஆகி குடும்பம நடத்தும் தமிழ் நடிகைகளின் அதே உப்பல் கன்னம் உடம்பு தொகுப்பாளினிக்கும்.


அப்போது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு சேனல்.இவரும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு  தமிழ் டிடி மெட்ரோ டூவின் முதல்(?) பெண் தொகுப்பாளினி.ஒரு மணி நேர நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.

கையை ஆட்டி ஆட்டி தொகுக்கும் ஸ்டைலை அப்பவே கொண்டு வந்தவர்.துடிப்பாக பேசுவார்.இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.பிறகு லாவண்யா என்ற பெண்ணை வைத்து (பாட்டு பாடவா கதாநாயகி) இதே மாதிரி முயற்சித்தார்கள் ஆனால் வெற்றி அடையவில்லை.

இப்போது எவ்வளவு சேனல்கள் எவ்வளவு கை ஆட்டல்கள்/தலையசைத்தல்கள்/கத்தல்கள் ... தோன்றி மறைந்துவிடுகிறார்கள்.காரணம் இப்போது supply is more and demand is less. அப்போ Demand is more because supply is less.

அந்த நிகழ்ச்சியைப் பார்க்க:
டிவி பார்ப்பதில் வீட்டில் சண்டை
________________________________________
லாஜிக் லஞ்சம்?

சமீபத்தில் ஆரணி அரசு ஆசிரியர் பணிக்கு பன்னிரெண்டு,பத்து,எட்டு என்று லஞ்சம் கொடுத்து நிறைய பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.(வாங்கிய ஹெட்மாஸ்டர் போலீசிடம் சிக்கிவிட்டார்)ரொம்ப வருடமாகவே நடக்கிறது. கால் காசனாலும் கவர்மெண்ட் வேலை அதன் பயன்கள் என்றாலும் டீச்சர்கள் லஞ்சம் கொடுப்பதில் லாஜிக் புரியவில்லை.

ஆர்டிஓ,பத்திரப்பதிவு,தாலுக்கா ஆபிஸ் இத்யாதி வேலைகள் என்றால் கொடுத்த லஞ்சத்தை மீட்டு எடுக்க வழி இருக்கிறது.டீச்சர் வேலையில்?இதை நேர்மையாக சம்பாதித்து மீட்பதற்கே 6 அல்லது 7 வருடம் ஆகாது? அதுவும் இந்த கேசில் 5000 அல்லது 6000தான் சம்பளம் வாங்குகிறார்களாம்.

ஒரு வேளை இவர்கள் ஹெட்மாஸ்டர் ஆகி மீட்டு எடுப்பார்களோ?

புரியலா ...தெரிஞ்சா சொல்லுங்க!
________________________________________
எட்டுக்கால் பூச்சி கேள்விகள்


16 பூச்சிக் காலுக்கு எத்தனை கால்?
சூர்யா நடத்தும் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” யை “எல்லோரும் 6.40 லட்சம் வரை வெல்லலாம்” என்று கிண்டல் செய்யப்படுகிறது.ஏன் என்றால்  6.40 வரை கேட்பதெல்லாம் “எட்டுக்கால் பூச்சி” (எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்)கேள்விகள்.

ஏன்? நிறைய பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும்.நிறைய
பார்வையாளர்கள் நிறைய விளம்பரம். நமக்கு இருக்கும் பொது அறிவுக்கு பிபிசி லெவலில் கேள்விகள் கேட்க முடியாது.”அச்சு..அச்சு..” என்றால் 1. இருமல் 2.கொட்டாவி 3.தும்மல் 4.விக்கல் என்று கேட்டு பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும்.

மேலும்....

இது குவிஸ் கம் சூப்பர் சிங்கர் கம் கதையல்ல நிஜம் கம் நீயா நானா கம் ரியாலிடி ஷோவாக நடத்துகிறார்கள்.”அப்பாவுக்கு நெஞ்சு வலி தேவலயா?” என்று கேட்டுவிட்டு கேள்வியை சூர்யா ஆரம்பிக்கிறார். கலந்துக்கொள்ளும் சில இளம் பெண்கள் முதலில் ஜொள்ளை துடைத்துக்கொண்டுதான் சேரில் உட்காருகிறார்கள்.
நிகழ்ச்சியின் அரங்கம்,கலர்,இசை,லைட்டிங் எல்லாம் அட்டகாசம். ரொம்ப கிராண்ட்.Professional to the core. அசட்டுத்தனம் இல்லை.

கேபிசியின் டெம்பிளேட் பார்மட்தானே.

கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி -சன் டிவி குவிஸ்


பணம் என்றால் டெட் பாடி ஆல்சோ ரெடி என்ற சித்தாந்தத்தில் இதுவும் வருவதால் பார்வையாளவர்கள் வாய் பிளந்து கலந்துக்கொள்ள தூண்டப்படுகிறது.கையில் அள்ள முடியாத கட்டுகட்டாக பணம்,பெண் செக்யூரிட்டிகள், ஏழு கேள்விகள் என்று பணத்தைத் துரத்திக்கொண்டு போகும்விளையாட்டு.

ஏழு கேள்விவரை விளையாட வேண்டும்.போதும்பா என்று கழட்டிக்கொள்ள முடியாது.சுலபமாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். இந்த நிகழ்ச்சி எனக்குப்பிடித்திருக்கிறது.

ஆறு கேள்விகள் வரை ஒரு கோடியை விடாமல் ஜெயித்துவிட்டு ஏழாவது கேள்வியில் தவறினால் ஒரு கோடி ஊத்தி மூடிக்கொண்டுவிடும்.

தாங்கமுடியாது.ஏழாவது பதில் தப்பாக இருக்கக்கூடாவே கூடாது. ஆப்ஷனும் கிடையாது. ஆனால் தோற்றால் ஆறுதலாக சன் டிவியின் ஒரு லட்சம் உண்டு.



Friday, February 24, 2012

வங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்

வழக்கமாக இது போன்ற குற்றங்களில் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பார்கள்.பிடித்தவுடன் பிடிப்பட்ட பணத்தை மைசூர்பாக் போல் டேபிளில் அடுக்குவார்கள்.பின் பக்கம் குற்றவாளிகள் முகத்தில் துண்டு அல்லது முகமூடி அணிந்து தலைகுனிந்து நிற்க போலீஸ்காரர்கள் மிடுக்காக
போஸ் கொடுப்பார்கள்.கமிஷனர் அல்லது எஸ்பி பேட்டிக்கொடுப்பார்.

சேனல்கள் இதையே மாறிமாறி கோழிகூவும் வரை காட்டிக்கொண்டே இருப்பார்கள்.எப்போது டிவியை ஆன் செய்தாலும் இதுதான் வரும்.
ஆனால் நேற்று வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் ரத்தம்தெறிக்க சுட்டக்கொல்லப்பட்டது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.சென்னை மக்கள் எதிரே பார்க்கவில்லை.சேனல்களும் மக்களின் நாடி அறிந்து அடக்கி வாசித்தன.

யோசித்தால் இதில் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது.அது சமீபத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுக்கொண்டிருக்கும் வட இந்திய குற்றவாளி கும்பலுக்கா?

அடுத்த விஷயம்.....
எந்த குற்றவாளியுமே தனக்குத்தெரியாமல் ஏதாவொறு
தடயத்தை குற்றம் நடந்த இடத்தில் விட்டுச் செல்வான் என்பது
எழுதப்படாத விதி.இதிலும் தவறாமல் நடந்திருக்கிறது.வீடியோவில் மாட்டிக்கொண்டது.

கடந்த பல வருடங்களாக பீஹார்,சட்டீஸ்கர் மற்றும் வேறு மாநிலத்தவர்கள் இங்கு பிழைப்புக்காக வந்து கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள்.கண்கூடாகப் பார்க்கிறேன்.ஆனால் இந்த வட இந்திய வங்கிக் கொள்ளையர்கள் அமெச்சூர்த்தனமாக் ஏதோ செய்துவிட்டு ரத்தம் கக்கி இறந்துப்போனார்கள். தேவையா?