Thursday, December 16, 2010

நான் -வாலி-மாலி-ஜாலி

கவிஞர் வாலி என்றதும் என் பள்ளிவயது நிகழ்வு ஒன்று உடனே ஞாபகம் வரும்.எம்ஜியார் ரசிகர் மன்ற நூலகத்தில் அவரின் கொள்கைப்பாடல்கள்,காதல்பாடல்கள்
தத்துவப்பாடல்கள் அடங்கிய பாட்டுப்புத்தகம் படித்ததுதான். அதில் எம்ஜியாருக்காக வாலி “நான்” என்று தொடங்கும் நிறைய பாடல்கள் எழுதியிருப்பார்.



1. நான் காற்று வாங்க போனேன்(கலங்கரை விளக்கம்)
2.நான் ஆணையிட்டால்(எங்க வீட்டு பிள்ளை)
3.நான் பார்த்ததிலே உன்(அன்பே வா)
4.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை(நான் ஆணையிட்டால்)
5.நான் ஏன் பிறந்தேன் (நான் ஏன் பிறந்தேன்)
6.நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)
7.நான் மாந்தோப்பில் (எங்க வீட்டு பிள்ளை)
8.நான் ஒரு குழந்தை நீ (படக்கோட்டி)
9.நான் அளவோடு எதையுமே ரசிப்பவன்(எங்கள் தங்கம்)
10.நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்(நான் ஆணையிட்டால்)

இவரைப் பின்பற்றி வேறு சில கவிஞர்களும்

“நான் செத்துப்பொழச்சவண்டா”
”நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்”
“நான் யார் நீ யார் தெரியார்”

என்று வேறு எழுதியதாக கேள்வி.

எதற்கு இந்த ”நான்” ???? சும்மா ஒரு ஹீரோ பில்ட் அப்தான்.”நான்”தான் உலகத்தில் நடக்கும் எல்லா அநியாங்களையும் தட்டிக்கேட்பேன்.அங்கெல்லாம்  தோன்றி துஷ்டர்களை வதைப்பேன்.என்னைவிட்டால் வேறு யாரும் கிடையாது என்கிற ஒரு ஈகோதான். வாத்தியாரின் விசிலடிச்சான் குஞ்சுகள் கிக் ஆகிவிடுவார்கள்.

“நான் உங்கள் வீட்டுப் பிள்ளை.. இது ஊரறிந்த உண்மை ” என்று பாட்டு ஆரம்பித்ததும் விசில் பறக்கும்.

அது ஒரு காலம்.இப்ப பஞ்ச் டயலாக் மாதிரி அப்போ.

வாலி நன்றாக படம் வரைவாராம்.அப்போது விகடனில் மாலி என்பவர் இருந்ததால் இவர் வாலி என்று வைத்துக்கொண்டாராம் இந்த ரங்கராஜன்.



அன்று ஆரம்பித்து இன்று ”விருதகிரி” வரை still batting not out.

இவரைப் பற்றி சில ஆச்சிரியங்கள்:

1.கண்ணதாசன் கோட்டையை உடைத்து உள்ளே நுழைந்தது.
2.இவ்வளவுகோபக்காரனாக இருந்தும் இன்னும் எப்படித் தாக்குப்பிடிக்கிறார்.
3.இவர் கூட வந்தவர்கள் எல்லாம் காலாவதி ஆகியும் இவர் இன்னும் பாட்டெழுதுகிறார்.

இவர் கஷ்டப்பட்டு எழுதிய பாடல்களை கண்ணதாசன் என்று நினைத்த காலமும் உண்டு.காரணம் பாட்டில் கண்ணதாசன் பாதிப்பு.

இவர் அருமையான பாடல்கள் எழுதி இருக்கிறார். அதே சமயத்தில் வார்த்தை ஜால கவிதை காவியம் மற்றும் சில ரசிக்க முடியாத பாடல்களும்  உண்டு.

இவர் ஒரு ஆல் ரவுண்ட் கவிஞர். ”அடுத்தாத்து அம்புஜத்தப்பார்த்தேளா” “வா வாத்தியாரே ஊட்டாண்டே” “முக்காபுலா முக்காபுலா”"நிலா காயுது”எழுதினார்.

ஆளுங்கட்சிக்கு வழக்கமாக இவர் போடும் “பின் பாட்டு”ம் தாங்க முடியாத ஒன்று. ”அழகிரி நீ ஒரு ஜாங்கிரி”. காலத்தின் கோலம்.சினிமா உலகத்தின் சாமுத்திரிகா லட்சணம்.

என் உள்ளம் தொட்ட பாடல்கள்:(இசை அமைத்தவர்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு.

கவித்துவமான பாடல்களை நல்ல உச்சரிப்புடன் பாடகிகள்,பாடகர்கள் பாடிஉயிர்க்
கொடுத்தார்கள்.அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

1.பவழக்கொடியிலே முத்துக்கள் (பணம் படைத்தவன்)எம் எஸ் வி
2.நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி (உயர்ந்த மனிதன்)
3.நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)சங்கர் கணேஷ்
4.புத்தன் ஏசு காந்தி பிறந்தது(சந்திரோதயம்) எம் எஸ் வி
5.நாம் ஒருவரை ஒருவர் (குமரிக்கோட்டம்)எம் எஸ் வி
6.உன்னிடம் மயங்குகிறேன்(தேன் சிந்துதே வானம்) வி.குமார்
7.அன்புள்ள மான் விழியே (குழந்தையும் தெய்வமும்)எம் எஸ் வி
8.மன்றம் வந்த தென்றலுக்கு (மெளன ராகம்) இளையராஜா
9.மெதுவா மெதுவா ஒரு (அண்ணா நகர் முதல் தெரு) சந்திரபோஸ்
10.முன்பே வா அன்பே வா (ஜில்லுனு ஒரு காதல் ) ஏ.ஆர்.ரஹ்மான்
11.ஆகாய வெண்ணிலாவே தரை மீது (அரங்கேற்ற வேளை)இளையராஜா
12.கொஞ்ச நாள் பொறு தலைவா (ஆசை) தேவா
13. என்னுள்ளே என்னுள்ளே பல (வள்ளி)இளையராஜா

இன்னும் நிறைய இருக்கிறது. என் ஞாபகத்தில் வந்ததை எழுதினேன்.

எனக்கு தெரிந்து இவர் எழுதிய இரண்டு அருமையான பக்திப் பாடல்கள் 

1.கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (டி.எம்.எஸ்)

2. கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் (பூஷணி கல்யாண ராமான்)

பவளக்கொடியிலே முத்துக்கள் (பணம் படைத்தவன்)பாடல் வரிகள்:

பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண் மயில் என்றே பேராகும்

பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தைப் பண்ணாகும்
காலடித்தாமரை நாலடி நகர்ந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்

இந்த காதலன் உள்ளம் புண்ணாகும்

பவழக்கொடியிலே.........

ஆடைகள் அழகை மூடியபோதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
வாழ்ந்திடும் காலம் நூறாகும்
இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும்

பவழக்கொடியிலே.........



Wednesday, December 8, 2010

பொண்டாட்டியை தேடிய ஜொள்ளர்கள்

கூகுளிள் நிறைய பேர் பொண்டாட்டியைத் தேடுகிறார்கள். வருங்கால பொண்டாட்டியையா? இல்லை. பக்கத்துவீட்டு பொண்டாட்டியை அல்லது அடுத்த வீட்டு ஆன்டியை.பொண்டாட்டி கிடைக்கிறார்களோ இல்லையோ தேடிவிட்டுப் போகும்போது நிறைய ஹிட்ஸ்களை வாரி வழங்கிவிட்டுப் போகிறார்கள்.

கூகுள் வழங்கும் பிளாக் ஹிட் விவர statisticsல் என்னுடைய “ ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி” என்ற ஒரு அருமையான கிராமத்து செவி வழி கதை ஒன்றுக்கு all time pageview recordஆக 894 pageviews வந்திருக்கிறது.அதாவது பிளாக் ஆரம்பித்திலிருந்து இன்று வரை. இதில் 35% நேரடியாக பிளாக்கிலோ அல்லது திரட்டிகளிலோ அல்லது சுட்டிகள் மூலமாகவோ அந்த கதையைப் படித்திருப்பார்கள்.மீதி 65% “பொண்டாட்டி” என்ற குறி(?) சொல்லைப் போட்டு வந்திருக்கிறார்கள்.  நோக்கம் அதே “குறி”தான்?

இந்த 35%ல் எவ்வளவு பேர் தலைப்பைப் பார்த்து நுழைந்தார்களோ?

All time page viewவில் நான் முதுகு வலிக்க எழுதிய சிறுகதைகள் எதுவும் இல்லை.ஆனால் “ ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி” என்ற புத்தகத்திலிருந்து எடுத்தப்போட்டக் கதைக்கு இவ்வளவு ”அடிகள்”.(ஹிட்ஸ்).

இந்தக் கதையும் அடுத்தவன் பொண்டாட்டிக் கதைதான். ஆனால் வந்தவர்கள் எதிர்பார்க்கும் “கிக்” இல்லை இந்த பொண்டாட்டியில்.இலக்கியத் தரமான கிராமத்து வட்டார வழக்குக் கதை.



பாவாடை தாவணி ஆறாவது இடத்தில் இருக்கிறது. டீன் ஏஜ் குறி சொல் மூலம் என் கவிதைக்கு வந்து அப்படியே ஓடிப்போய்விட்டதும் நடந்திருக்கிறது.

சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு எப்பவுமே ஹிட்ஸ் அதிகம்.அதையும் மீறி இது வந்திருக்கிறது.

சாதாரண வலைவாசிக்கே இப்படி என்றால், அசைவ பதிவுகள்,ஜோக்ஸ் எழுதும் பிரபல வலைவாசிகளுக்கு எவ்வளவு ஹிட்ஸ் வரும். 

எனக்கு நிறைய ஹிட்ஸ்களை வழங்கும் இளையராஜாவே பொண்டாட்டிக்கு அடுத்துதான் வருகிறார். எட்டு ரன் வித்தியாசம். போதாது இளையராஜா அவர்களே! இன்னும் உழைக்க வேண்டும்.

வலையில் அள்ள அள்ள குறையாமல் வித விதமாக கொட்டிக்கிடக்கிறது ஆபாச பாலியல் பக்கங்கள். இதில் “பொண்டாட்டி” தேடுவது உளவியில் ரீதியாக நேட்டிவிட்டிக்கா? (மண்ணின் மனம்).திருட்டு மாங்கவிற்கு ருசி அதிகம் என்று சொல்லுவார்கள்.

நானும் ஏன் முதல் வரியில் வரும் ஒரு ஊர்ல ஒரு புருஷன்னு தலைப்பு வைக்காமா ஏன் ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டின்னு வச்சேன்? சத்தியமாக ஹிட்டுக்கு வைக்கவில்லை.அந்த சமயத்தில் தோன்றியதுதான்.


ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி...

.

Tuesday, December 7, 2010

ஹரியுடன் நானும் பின்னே டிவி சமையலும்

சாப்பிட (மட்டும்)வாங்க:

சில நேரங்களில் டிவி சேனலை மாற்றும் போது பெண்களோ ஆண்களோ ஏதோ ஒன்றை அடுப்பில் கிளறியபடி பேசிக்கொண்டு சமையல் நிகழ்ச்சிகள் கண்ணில்படும்.பக்கத்தில் ஒரு தொகுப்பாளினி நின்றுகொண்டு “ஓகோ அப்படியா” என்றபடி அவர் செய்வதையே திருப்பி சொல்லிக்கொண்டு இருப்பார்.முடித்தவுடன் “ரொம்ப சூப்பரா இருக்கு” என்றபடி டிஷ்ஷை வாயில் போட்டபடி போஸ் கொடுப்பார்.

இது வழக்கமான வடிவம்.ஆனால் இதெல்லாம் மாறி வேறு வடிவங்களும் வந்து அடுப்பில் கிளறுகிறார்கள்.

ரூபாய் நோட்டில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வரும் இந்த நிகழ்ச்சிகளை ஒரு சுவராஸ்யத்திற்காக (ருசிக்காக?)பார்ப்பதுண்டு.

அவர்கள் சொல்லும் சமையல் ஐட்டங்களை பார்வையாளர்கள் எவ்வளவு பேர் செய்துபார்ப்பார்கள்? காரணம் சில சாப்பாட்டு/சிற்றுண்டி ஐட்டங்கள் பெரிய ப்ராஜெக்ட் மாதிரி போகிறது. இதில் முன்னேற்பாடுகளே பெண்டு எடுக்கும்.  அடுத்து செய்வது. அதற்கடுத்து பின்னேற்பாடுகள். உதவியாளர்கள் இல்லாமல் இதில் நுழையமுடியாது.



அடுத்து டேஸ்ட்.

ஒரு தடவை ரொம்ப மெனக்கெட்டு (சைவம்) ஒன்றை செய்துப்பார்த்து சாப்பிட்ட யாருக்கும் சுத்தமாக பிடிக்காமல் ஆனால் பட்ட கஷ்டத்திற்காக (நானும் பட்டேன்)வெளியில் பிடித்தமாதிரி காட்டிக்கொண்டு வாயிலேயே ரொம்ப நேரம் மென்று கடைசியில் தண்ணீர் குடித்து உள்ளே தள்ளினோம்.

பல நேரங்களில் ஒரு டிஷ்ஷே பெயர் மாத்தி வருகிறது.நிறைய அவசர டிபன்கள் கற்றுக்கொள்ளமுடிகிறது. மாற்றுச் செய்முறைகளும் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

குடும்பத்தினர் சிலர் வழக்கமான உப்புமா,தோசை,இட்லி,பொங்கல் வகையறாக்களிலிருந்து வெளியே வர மறுப்பதால் தாய்குலங்கள் வேறு முயற்சிப்பதில்லை.

தான் தனியாக செயத புதுவித சமையல்/சிற்றுண்டி வகைகளை குடும்பத்தார்  சாப்பிட்டு மகிழ்வதைக் காண்பதும் வாழ்வில் ஒரு ருசி.

முன்னொரு காலத்தில் பாட்டி என்றொருவர் வீட்டில் இருந்தார் அவர்தான் வழிவழியாக கற்றுக்கொண்டதை விதவிதமாக சமையல் செய்வார்.அவர் எங்கே போனார்?

ஷரத்துடன் நான்: 

ஜெயா தொலைக்காட்சியில் “ஹரியுடன் நான்” என்ற பாடகர் தேர்வு நிகழ்ச்சியில் ஷரத் என்னும் மலையாள இசையமைப்பாளர் நடுவராக வருகிறார்.இவர் தன் இயல்பான நகைச்சுவையால் நிகழ்ச்சியை கலகலக்க வைக்கிறார்.

Spike ஹேர் ஸ்டைலில்(எண்ணெய் தடவி குச்சிகுச்சியாக முடிகள் மேல் நோக்கி நீட்டி இருக்கும்) வந்த பாடகரிடம் “என்ன தலைல ஷாக் அடிச்சிடிச்சா?”

" டயர்டா...?பல்லவிலேயே ரொமப நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சரணம் வந்தீங்களே?”


அடுத்து இவர் சில சமயம் நிறைய தமிழ் சொற்களை தன் பேச்சினிடையே பயன்படுத்தி ஆச்சரியபடுத்துகிறார். “இசை ஆசிரியர்” “வியப்பா இருந்தது” “கோர்வையா” ”செவிக்கு இனிமையா”.

.

Wednesday, December 1, 2010

நந்தலாலாவும் இளையராஜவும் பின்னணியும்

படத்தை வெறும் ஜடமாக பார்த்து அதற்கு பின்னணி என்ற உயிர் கொடுத்து நம் முன் உலவ விடுவது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை.எவ்வளவு விதமான உணர்ச்சிகள் படம் முழுவதும்?

ஒரு படத்திற்கு பாடல் கம்போசிங்கை விட அந்த படத்திற்க்கு பின்னணி இசைப்பதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை என்று எல்லா இசையமைப்பாளர்களின் ஒட்டு மொத்த கருத்து.

யாராவது இறந்தால் ஷெனாயும்,போலீஸ் என்றால் ரோட்டரி ட்ரம்மில் வாசிப்பும்,காமெடின்னா கொய்ங்... கொய்ங்..,மலைப்பிரதேசம் என்றால் சிதாரும்,கோவிலில் அர்ச்சனை என்றால வீணையும், வயல் என்றால் புல்லாங்குழலும் இருந்த காலத்தில் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டார் ராஜா.

இளையராஜா பின்னணிக்கு ஒரு பரிமாணம் கொடுத்தார்.அதை ஒரு கதாபாத்திரமாக ஆக்கினார்.

கண்ணால் பார்ப்பதை காதால் உணரவும் செய்தார்.

கமல், ரஜினிக்கு விசிலடித்த ரசிகன் ராஜாவின் பின்னணிக்கும் (சி.ரோஜா.டிக் டிக் டிக்,நெ.கிள்ளாதே)விசிலடிக்க ஆரம்பித்தான்.மிக முக்கியமாக வெஸ்டர்ன் கிளாசிகள் வயலின் தீற்றல்கள் பின்னணிக்கு கொடுத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு உணர்ச்சிகளை கொண்டு வந்தார்.


        (ஹேராம் படத்திற்கு பின்னணி)

தமிழ்திரையில் பார்த்திராத உணர்ச்சிகளை பல இசைக்கருவி கலவைகளில் இசைத்து வழியவிட்டார்.பல வித மணங்கள் கொடுத்தார்.உள்ளே ஒடும் ஆதமாவை கலைக்காமல். கலவைகள் மொன்னையாக உருத்தி  துருத்திக்
கொண்டு நாராசாரமாக இல்லாமல் மனதிற்கு இதமாக இருந்தது.

கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட படங்கள்.எத்தனை விதமான பின்னணிகள். ஒரே விதமான உணர்ச்சிகளுக்கு எத்தனைவிதமான பின்னணிகள்.அலுத்துவிடும். 

நெஞ்சத்தைக் கிள்ளாதே (1981) டைட்டில் இசை

பல வித flavour கொடுக்கப்பட்டு கடைசியில் மேஸ்ட்ரோ வெஸ்டர்ன் கிளாசிகளில் பினிஷிங் டச் (1.48-2.13) கொடுப்பார்.



அலைகள் ஓய்வதில்லை(1981) பின்னணி இசை



பாரதிராஜா & கோ பின்னணி டைப்புகளை ஒரு கட்டத்தில் நிறுத்தினார்.அதற்கேற்றார் போல் சினிமாக்களும் மாறியது.
மகேந்திரன்,பா.மகேந்திரா ம.ரத்னம் போன்றவர்கள் வந்தார்கள்.வருடத்திற்கு வருடம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்தார்.இசைக்கருவிகளும் மாறியது.

மகேந்திரன் பாலுமகேந்திரா படங்களில் பின்னணியில் அமைதியாக இருந்தார். 

ராஜாவின் பாடல்களில் பின்னணி இசைக்கான கூறுகளும் பின்னணி இசையில் பாடல்களுக்கான கூறுகளும் இருக்கும்.

இப்போது அடுத்தக்கட்டத்திற்க்கு கொஞ்சம் தாவி இருக்கிறார்.

இதை நந்தாலாலாவில் பார்க்கலாம்.இளையராஜா இதில் தன்னுடைய heart & soul போட்டிருக்கிறார்.இது ஒரு வித்தியாசமான கரு.பொதுவாகவே ராஜாவின் இசை உணர்வுகளை ஊடுரவுக்கூடியது.பின்னணியில் கசியும் உணர்ச்சிகள் வித்தியாசமானது.உலகத்தரமானது.

சில பின்னணிகள் டிரைலரில்தான் இருக்கிறது.படத்தில் இல்லை

அகி அம்மாவை ஓடி ஓடி வீடு விடாக தேடும் காட்சி(படம்)

மனதைப் பிசையும் உணர்ச்சிகளை வயலின் தீற்றிக்கொண்டே பையனை பின் தொடர்ந்து போகிறது இசை. இதன் நடுவே வரும் சிறுவனின் குரல் படுத்துகிறது. எனக்குப்பிடித்த ஒன்று.உலுக்கிவிட்டது என்று சொல்லலாம்.



டிரைலர்(இதுவும் நான் ரசித்த ஒன்று).என்ன விதமான உணர்ச்சிக்கலவை? Awesome Maestro!



லாங்ஷாட்டில் கார் வரும் காட்சி (டிரைலர்).ஹாலிவுட்டேயே மிஞ்சியது.


பிரயாணம் ஆரம்பிக்கிறது (நன்றி: சுரேஷ்குமார்)


பிரயாணம் தொடர்கிறது (நன்றி: சுரேஷ்குமார்)



டிரைலர்



அடிக்கடி படத்தில் வரும் பின்னணி



மன நலகாப்பகத்தில் டாப் ஆங்கிளில் மரம் காட்டப்பட்டு படிப்படியாக காமிரா தரைக்குப்போகும் காட்சி


டிரைலர் (கருணை சுரக்கிறது)



மிஸ்கின் பதைபதைப்படும் ஓடும் சீன்(டிரைலர்)


ஜிப்சி (டிரைலர்)பாட்டு





நந்தலாலா - பட விமர்சனம்

.