Monday, January 27, 2014

நாலுமணி டிபனும்-புத்தகமும்-கவிதையும்

ரவா உப்புமா என்றால் அது மாலை நாலுமணி டிபன் என்பதாக நினைவில் ஆழமாக பதிந்துவிட்டது.காரணம் 3.20க்கு பள்ளி விட்டதும்  பல தடவை சுடசுட சாப்பிட்ட சுவை நாக்கிலிருந்து மூளைக்குப்போய் உறைந்ததுதான்.அந்த நாலுமணி வெயில்,தெரு சத்தங்கள்,வெங்காய வாசனை,கிண்டும் ஓசை,மணம் எப்போதாவது வந்துபோகிறது நாலுமணிக்கு.

அன்றைய Two minutes Noodles!

இப்போது மாதிரி வீட்டு உப்புமாவில் பணக்காரத்தனம் இருக்காது.பட்டாணி, மு.பருப்பு,குடமிளகாய்,கொத்தமல்லி,நெய் இல்லாத லோயர் மிடில்கிளாஸ் லுக்குடன்தான் இருக்கும்.

இப்போது அதே பணக்காரத்தனத்துடன் உப்புமாவை 5.15 டிபனாக  செய்துபோட ஆசை இருந்தாலும் ஏதோ உப்புமா கம்பெனியைப் பார்ப்பதுபோல் என்னைப்பார்க்கிறான் என் மகன்.இதுதான் வாழ்க்கை.

கண்ணுக்கெதிரே சமையலின்  ஒரு சுவையை மகன் இழந்துக்கொண்டிருக்கிறப்பதை அசட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.



அப்போதைய  இளையதலைமுறையின் 50% விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது 20% ஆக குறைந்துவிட்டது.காரணம் காற்றடித்த உப்பிய பிளாஸ்டி பைகளில் கிடைக்கும் நொறுக்குத்தீனிகள் மற்றும் துரித உணவுகள். உப்புமாவை உப்புமா கம்பெனிபோல்  ஒன்றும் இல்லாம ஆக்கிவிட்டது.

2011ல் இந்திய வம்சாவளி சமையல்காரர் ஒருவர் அமெரிக்காவில்  உப்புமா டிபன் செய்து ஒரு லட்சம் டாலர் பரிசுபெற்றார்.”தங்கள் வாழ்வில் பாதித்த அல்லது எப்போதும் நினைவில் ஊசலாடும் ஒரு டிபன்” என்ற பிரிவில் இவர் செய்த டிபன் உப்புமா. என் நாலுமணி டிபன்.....!

இதன் கசின் ஆன கிச்சடியும் சுவையானது.


37வது சென்னை புத்தகக் காட்சி

நான் கூட தவறுதலாக புத்தகக்கண்காட்சி என்றே எழுதுவேன் ஒவ்வொரு தடவையும்.கண் கிடையாது வெறும் காட்சிதான்.காட்சி என்றாலே கண்ணால் காண்பதுதானே.


சிறுகதைகள்,நாவல்கள், கவிதைகள் தவிர்த்து விட்டேன்.அலுப்புதான்.விமர்சனங்கள்,பக்தி,தத்துவம்,சரித்திரம்,சுயசரிதை சம்பந்தமான புத்தகங்கள் வாங்கினேன்.ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆனந்த்ராகவ் எழுதியது.எப்போதுமே தவிர்க்காமல் வாங்குவது வேடிக்கைக் கதைகள்,முட்டாள் கதைகள்,கஞ்சன் கதைகள், புதிர்கதைகள்.
இவையெல்லாம கடினப் புத்தகங்களுக்கு ரிலாக்ஸ்சேஷன்.அடுத்து சாகித்ய அகாடமி வெளியிடும் சுயசரிதை நூல்கள்.

எப்போதுமே ஒரே மூச்சில் படிப்பதில்லை.எல்லாவற்றையும் பிட்டுபிட்டாக படிப்பதால் சுவராஸ்யமாக இருக்கிறது.


புத்தகம் வாங்கிய மகிழ்ச்சியை அடுத்து  இன்னொரு மகிழ்ச்சி பதினாலு வருடம் தொடர்பு விட்டுப்போயிருந்த நண்பர் ஸ்ரீதரை சந்தித்தது.நாங்கள் முக்கியமாக  இளையராஜா இசையில் ஒரே அலைவரிசையில் இருப்போம்.குசலங்கள் விசாரித்த பிறகு முதல் டாபிக்கே ராஜாதான்.”காற்றில் எந்தன் கீதம்”.இருவரும் ராஜாவின் பாடல்களோடு வாழ்பவர்கள்.

கவிதை

நான் பேய் அல்ல
பள்ளி மாணவிதான்
பாடங்களை மனப்பாடம் செய்ய 
தினமும் வீட்டு தோட்டத்தில் இருக்கும்
உஞ்சலில் நடுஇரவில் ஆடுவேன்

தூரத்தில்
இரண்டு கண்கள் தினமும் 
நான் ஆடுவதைப் பார்க்கும்
உடனே நிறுத்திவிடுவேன்

என் அருகில்அது வருவதில்லை


என் நிழலும் தயங்கி
பாதி தூரத்தில்  பேயோயென
பயந்தபடி நிற்கிறது


ஒரு நாள் தம் பிடித்து
மிக வேகமாக  உந்தி ஆடுவேன்
என் நிழல் அதைத் தொடும்
நான் பேய்யல்ல
பள்ளி மாணவிதான்
அதற்குத் தெரிந்துவிடும்


3 comments:

  1. எங்கள் வீட்டில் காலை டிபனுக்கு உப்புமா வைப்பதுண்டு.வாழைப்பழத்துடன் சீனி கலந்து பிசைந்தால்தான் எனக்கு உள்ளே இறங்கும்

    ReplyDelete
  2. நன்றாக இுருக்கின்றது மேலும் தொடருங்கள்

    ReplyDelete
  3. உப்புமாவை 5.15 டிபனாக செய்துபோட ஆசை இருந்தாலும் ஏதோ உப்புமா கம்பெனியைப் பார்ப்பதுபோல் என்னைப்பார்க்கிறான் என் மகன்.இதுதான் வாழ்க்கை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!